2019 சென்னை நீர் நெருக்கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2019 சென்னை நீர் நெருக்கடி என்பது இந்தியாவில் நிகழ்ந்த நீர் நெருக்கடி, குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில். 19 சூன் 2019 அன்று, சென்னை நகர அதிகாரிகள் "சுழிய நாள்" அல்லது கிட்டத்தட்ட தண்ணீர் இல்லாத நாள் எட்டப்பட்டதாக அறிவித்தனர், ஏனெனில் நகரத்திற்கு நீர் வழங்கும் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களும் வறண்டு போயின.[1][2] இரண்டு ஆண்டுகாலம் போதிய பருவ மழை பெய்யாத காரணத்தினால், குறிப்பாக 2017 இன் பிற்பகுதியிலும், 2018 ஆம் ஆண்டின் பெரும்பகுதியான காலக்கட்டம் முழுவதும் இந்த நெருக்கடிக்கு வழிவகுத்தது.[3]

குடிநீர் குழாயில் நீர் வழங்குவது நின்றுபோனதால், சில குடும்பங்கள் தொலைதூர, பொது நீர் குழாய்கள் மற்றும் விலையுயர்ந்த தனியார் தண்ணீர் தொட்டி சுமையுந்துகள் போன்ற மாற்று நீர் ஆதாரங்களை சார்ந்திருக்கும் நிலைக்கு ஆளாயினர்.[4]

பின்னணி[தொகு]

ஆறுகள் கழிவுநீரால் மாசுபட்டிருப்பதால் சென்னையானது அதன் நீர்த்தேக்கங்களை நிரப்ப வரலாற்று ரீதியாகவே பருவ மழைக்காலத்தை நம்பியுள்ளது.

நகரத்தில் நான்கு நீர்த்தேக்கங்கள் உள்ளன, அவை செங்குன்றம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி போன்றவை ஆகும். இவற்றின் மொத்த கொள்ளளவு 11,057 எம்.சி.டி. ஆகும்.

கடும் வறட்சி[தொகு]

2016, 2017, 2018 ஆகிய மூன்று ஆண்டுகள் பருவமழை தோல்வியுற்றது. 2018 ஆண்டின் வடகிழக்கு பருவமழையானது சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு வறண்ட ஒன்றாக இருந்தது. ஏனெனில் சராசரியாக பெய்யும் 757.6 மி.மீ. மழையுடன் ஒப்பிடும்போது 343.7 மி.மீ மழை மட்டுமே பெய்தது. இது 55% மழை பற்றாக்குறை ஆகும். மேலும், அந்த பருவத்தில் தமிழகம் முழுவதும் 23% மழை பற்றாக்குறை என்று பதிவுகளில் தெரியவருகிறது.[5] 2019 மே முதல் சூன் வரை இந்தியாவில் ஏற்பட்ட ஒரு பெரிய வெப்ப அலையானது நீர்த்தேக்கங்களில் இன்னும் எஞ்சியிருக்கும் நீரை ஆவியாக்கியதன் காரணமாக இச்சிக்கல் மேலும் அதிகரிக்க காரணமானது.

அரசாங்கத்தின் தவறான மேலாண்மை[தொகு]

அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் திட்டமிடப்படாத நகர கட்டுமானமும் இந்த நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது.[6]

தாக்கம்[தொகு]

மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்து தண்ணீரைப் பெற இயலாமல் தவித்தனர். மழைநீர் மற்றும் நிலத்தடி நீரின் பற்றாக்குறையானது நகரத்துக்கு நீரை வழங்கும் நான்கு நீர்த்தேக்கங்களும் முற்றிலுமாக வறண்டுபோகும் நிலைக்கு ஆளானது. தண்ணீருக்கான தேவையை நிறைவு செய்ய இயலாமையால் விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற வணிகங்க அமைப்புகளை மூட வேண்டிய கட்டாயத்தில் தள்ளியது. வறட்சியால் பாதிக்கப்படாத தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இருந்து வந்த தண்ணீர் தொட்டி சுமையுந்துகள் நகரின் சில பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு வந்தன. இருப்பினும், அரசாங்க தண்ணீர் சுமையுந்துகள் தண்ணீரைக் கொண்டுவரும் நிலை உருவாக ஒரு மாதம் வரை ஆகலாம் என்ற நிலை இருந்தது. எனவே சில குடும்பங்கள், செல்வந்தர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் போன்றோர் விலையுயர்ந்த தனியார் நீர் சுமையுந்துகளுக்கு பணம் செலுத்தத் தெரிவு செய்தர். சேரிகளில் வாழும் ஏழைகளுக்கு இந்த வசதி இல்லை; ஒரு நாளைக்கு 1,150 லிட்டர்கள் (300 அமெரிக்க கலன்கள்) தண்ணீரைப் பயன்படுத்தும் சராசரி அமெரிக்க குடும்பத்துடன் ஒப்பிடும்போது சென்னையின் சேரிகளில் உள்ள ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு 30 லிட்டர்கள் (7.9 அமெரிக்க கலன்கள்) நீரைப் பயன்படுத்திவந்தன.[4][7]

தண்ணீர் பற்றாக் குறையின் விளைவாக தண்ணீருக்காக பல சண்டைகளும் மோதல்களும் வெடித்தன. இதுபோன்ற ஒரு மோதலில், 2019, சூன் 15 அன்று, ஒரு பெண் குத்தப்பட்டு, குற்றமிழைத்தவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.[8]

மேலும் காண்க[தொகு]

  • கேப் டவுன் நீர் நெருக்கடி – 2018 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் ஏற்பட்ட இதேபோன்ற நீர் நெருக்கடி

குறிப்புகள்[தொகு]

  1. Murphy, Paul P.; Mezzofiore, Gianluca (20 June 2019). "Chennai, India, is almost out of water. Satellite images show its nearly bone-dry reservoirs". CNN. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019.
  2. Varadhan, Sudarshan (20 June 2019). "Hotels, companies cut back on water use as taps run dry in Chennai". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019.
  3. India Today Web Desk (20 June 2019). "Rain respite for parched Chennai, IMD predicts moderate showers for next 6 days". India Today. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019.
  4. 4.0 4.1 Masih, Niha; Slater, Joanna (28 June 2019). "As a major Indian city runs out of water, 9 million people pray for rain". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
  5. "Dry end to monsoon season, all time low rainfall in city: Met | Chennai News - Times of India". The Times of India. 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.
  6. Lakshmi, K. (June 28, 2019). "Chennai's Day Zero: It's not just meteorology but mismanagement that's made the city run dry". பார்க்கப்பட்ட நாள் 1 July 2019 – via www.thehindu.com.
  7. Yeung, Jessie (19 June 2019). "India's sixth biggest city is almost entirely out of water". CNN. Archived from the original on 20 June 2019. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
  8. "28-year-old Chennai woman stabbed by neighbour over water dispute". The New Indian Express. 15 June 2019. பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2019_சென்னை_நீர்_நெருக்கடி&oldid=2867335" இலிருந்து மீள்விக்கப்பட்டது