ஸ்ரீ விஜய ராஜசிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ விஜய ராஜசிங்கன்
Sri Vijaya Rajasinha
கண்டி இராச்சிய மன்னன்
ஆட்சி13 மே 1739 - 11 ஆகத்து 1747
முடிசூட்டு விழா1739
முன்னிருந்தவர்வீர நரேந்திர சிங்கன்
பின்வந்தவர்கீர்த்தி சிறீ ராஜசிங்கன்
மரபுகண்டி நாயக்கர்
அடக்கம்இலங்கை

ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்ட மன்னனாவான். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே வளர்ந்தவன்.

1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் சிம்மாசனம் ஏறினான்.

இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். இந்து சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய புத்த சமயத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக்குகைகளில் செதுக்குவித்தான். இவன் தனக்கு சார்பானவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கினான். பிலிமத்தலாவை அரசனுக்கு சார்பாக இருக்கவில்லை. ஆகையால் அவனது மகா அதிகாரம் பதவியை தனக்கு சார்பாக இருந்த சமரக்கொடிக்கு வழங்கினான். லெவ்கே திசாவைக்கு நாலு கோறளை பதவியையும், வெளிவிட்ட சாமநேருவுக்கு ராஜகுரு பதவியையும் வழங்கினான்.

இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான். ஸ்ரீ விஜய ராஜ சிங்கன் நாயக்க வம்ச இளவரசியை மணந்து, அவளை தனது பட்டத்து இராணி ஆக்கினான். கி.பி.1747 ல் இவன் இறக்கும் போது இவனுக்கு பிள்ளைகள் இல்லை.

இவற்றையும் பார்க்க[தொகு]

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_விஜய_ராஜசிங்கன்&oldid=3780177" இலிருந்து மீள்விக்கப்பட்டது