வே. ஆனைமுத்து
வே. ஆனைமுத்து | |
---|---|
![]() | |
பிறப்பு | சூன் 21, 1925 முருக்கன்குடி, பெரம்பலூர், தமிழ்நாடு ![]() |
இறப்பு | 6 ஏப்ரல் 2021[1] புதுச்சேரி, இந்தியா | (அகவை 95)
பெற்றோர் | வேம்பாயி பூவாயி |
வாழ்க்கைத் துணை | சுசிலா அம்மாள் |
பிள்ளைகள் | தமிழ்செல்வி பன்னீர்செல்வம் அருள்செல்வி வெற்றி வீரமணி அருள்மொழி கோவேந்தன் |
வே. ஆனைமுத்து (சூன் 21, 1925 - ஏப்ரல் 6, 2021) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர்.[2]
பிறப்பும், கல்வியும்[தொகு]
இவர் பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெரம்பலூர் வட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21, சூன் 1925 அன்று பிறந்தார்.
1940 இல் வீரானந்தபுரம் ஆசிரியரின் ந. கணபதியின் வழிகாட்டுதலில் மாணவர் பருவத்தில் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றார். பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது வை. பொன்னம்பலனார் தொடர்பால் தனித்தமிழையும், பெரியாரிய கொள்கைகளில் தெளிவு பெற்றார். அங்கு 11 அக்டோபர் 1944 இல் தந்தை பெரியாரின் சொற்பொழிவுஐ நேரில் கேட்டார்.[3]
1946முதல் 1949 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அந்நூலகத்தில் இருந்த தமிழ், ஆங்கில நூல்களைக் கற்று தன் அறிவை மேம்படுத்திக்கொண்டார்.
திருமணம்[தொகு]
இவர் 22, ஆகத்து, 1954 அன்று கடலூர் வண்ணரப்பாளையம் ஆ. சுப்ரமணிய நாயகர் - தையல்நாயகி இணையரின் மகள் சுசீலாவை பொன்னம்பலனார் தலைமையில் மணந்தார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வி, பன்னீர்ச்செல்வம், அருள்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் என ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
பணிகள்[தொகு]
பெரியார் 1949 சனவரி 14இல் சென்னையில் நடத்திய திருக்குறள் மாநாட்டின் விளைவாக திருக்குறள் வீ. முனிசாமி அவர்களை ஆசிரியராக கொண்டு ஆசிரியர் கணபதியும் இவரும் சேர்ந்து குறள்மலர் என்னும் கிழமை இதழைத் தொடங்கினார். 25 கிழமைகளில் அவ்விதழில் 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார். திருக்குறள் வீ. முனிசாமியுடன் ஏற்பட்ட பிணக்கால் அதில் இருந்து வெளியேறினார்.
1952இல் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பணிக்கு சேர்ந்தார். 1956இல் அரசு பணியைத் துறந்து திருச்சிராப்பள்ளியில் குடியேறினார். பின்னர் 1957 சனவரி 11 அன்று குறள் முரசு என்ற ஏட்டைத் தொடங்கினார். அதில் அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவந்தார். 1957 நவம்பர் 26 அன்று இந்திய அரசியல் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார்.
1960இல் மீண்டும் திருச்சியில் குடியேறி திராவிடர் கழகத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். பொருளாதார தேவைக்காக 1963இல் தமிழ்நாடு தனிப்பயிற்சிக் கல்லூரியை தொடங்கி திருச்சியில் தொடங்கினார் 1975 வரை அது இயங்கியது. பொறியாளர் கு. ம. சுப்பிரமணியம், நோபுள் கோவிந்தராசலு போன்றோர் துணையுடன் 1970 மார்ச்சு 7 அன்று திருச்சியில் 'சிந்தனையாளர் கழகத்தை'த் தொடங்கினார். துவக்க விழாவில் பெரியார் கலந்து கொண்டு துவக்கிவைத்தார்.
1971 முதல் 1974 வரை உழைத்து பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற மூன்று தொகுதிகளை தொகுத்து நூலாக்கினார். அந்த தொகுப்பு நூல்களை 1974 சூலை முதல் நாள் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரான மு. கருணாநிதி வெளியாட்டார். 1973 ஆகத்து 17 அன்று திருச்சியில் பாவேந்தர் அச்சகத்தை தொடங்கினார். 1974 ஆகத்து 17 முதல் சிந்தனையாளன் இதழை தன் சொந்த பொறுப்பில் வெளியிட்டார்.
பெரியாரின் மறைவுக்குப் பிறகான திராவிடர் கழகத்தின் தவறான போக்குகளை விமர்ச்சித்து மத்தியக்குழு உறுப்பினர்களுக்கு அச்சிட்ட அறிக்கைகளெ அனுப்பியதற்காக 1975 நவம்பர் 16 அன்று தி.க மத்தியக் குழுவில் இருந்தும், திகவில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர் தோழர்களின் துணையுடன் 1976 ஆகத்து 8 அன்று சீர்காழியில் பெரியார் சம உரிகைக் கழகம் என்ற அமைப்பைத் துவக்கினார். பின்னார் அது 1988இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என பெயர் மாற்றப்பட்டது.
காலக்கோடு[தொகு]
- 1948 : அண்ணாமலைப்பல்கலையில் இடைநிலைக்கல்வி. திராவிடநாடு, பல்லவநாடு, அணில், குமரன் ஆகிய இதழ்களில் கட்டுரையும் பாடல்களும் எழுதினார்.
- 1949 : தந்தைப்பெரியாரின் கொள்கைப்பரப்பும் பணி
- 1950 : கடலூர் திருக்குறளார் வீ. முனிசாமியை ஆசிரியராகக் கொண்டு, ந. கணபதியுடன் இணைந்து "குறள் மலர்" எனும் கிழமை இதழ் திருச்சியில் 1950இல் தோன்றக் காரனமாய் இருந்ததோடு, அவ்விதழின் துணை ஆசிரியராகவும், பொறுப்பாளராகவும் பணிபுரிந்தார்.
- 1952 முதல் தந்தைப்பெரியாருடன் இணைந்து தீவிர இயக்கப் பணிகள்
- 1957 : திருச்சியில், "குறள் முரசு" எனும் கிழமை இதழை தனது சொந்தப் பொறுப்பில் தொடங்கினார். இவ்விதழில் இவர் எழுதிய கட்டுரைகள் பெரியாரால் போற்றப்பட்டு, குடியர்சு இதழிலும் வெளியிடப்பட்டது.
- 1957 : அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு, 18 திங்கள் கடுங்காவல் தண்டனை.
- 1960 - 73 : தமிழநாடு தனிப்பயிற்சிக் கல்லுரி திருச்சியில் தொடக்கம். பாவேந்தர் அச்சகம் நிறுவினார். மாநிலமெங்கும் இயக்கப் பயிற்சி வகுப்புக்கள் 1970 இல் சிந்தனையாளர்கள் கழகம் தொடக்கம்
- 1974 : திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் "பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள்" தொகுத்தளித்தார். சிந்தனையாளர் திங்கள் இதழ் தொடக்கம்
- 1975 : திராவிடர் கழகத்திலிருந்து நீக்கம்
- 1976 : சேலம் அ.சித்தையன், சீர்காழி மா.முத்துச்சாமி, ஆ.செ.தங்கவேலு, ந.கணபதி, தக்கோலம், கா.ந.ஜலநாதன் ஆகியோருடன் இணைந்து "பெரியார் சம உரிமைக் கழகம்"
- 1978 : மைய அரசுக் கல்வியிலும், வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி குடியசு தலைவர் என். சஞ்சீவரெட்டியிடம் நேரில் கோரிக்கை உ.பி. மாநிலம் முசாபர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்தல், இதன் வழி முதன் முறையாக பிகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- 1979 : தில்லியில் பெரியார் நூற்றாண்டு விழா, இந்தியத் துணைத் தலைமையமைச்சர் பாபு ஜகஜீவன்ராம் தொடங்கி வைத்தார். இவரால் தொகுக்கப்பட்ட "தந்தைப் பெரியாரின் இடஒதுக்கீடு" கருத்துக்களின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பில் இந்தியத் தலைமையமைச்சர் மொரார்ஜி தேசாயுடன் சந்திப்பு. இடஒதுக்கிடு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளைப் பீகார், கேரளா, கர்நாடகா, உ.பி., இராசசுதான், அசாம், மே.வங்கம் முதலிய மாநிலங்களில் நடத்தினார். தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு 31 சதவீத விழுக்காட்டிலிருந்து 60 சதவீதமாக உயர்த்தக்கோரி முதல்வர் எம்.சி.ஆரிடம் கோரிக்கை, இதன் மூலமாக பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- 1980 : சிந்தனையாளனில் வெளிவந்த இவரின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளிவந்தன. கன்சிராம் நடத்திய "பாம்செஃப்" (BAMCEF) கூட்டங்களில் தலைமை ஏற்கவும் சிறப்புரையாற்றவும் அழைக்கப்பட்டார். 1982 : இவரின் பல போராட்டங்களைத் தொடர்ந்து இந்திய உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, அதைத் தொடர்ந்து மண்டல் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
- 1988 : பெரியார் சமஉரிமைக் கழகம், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமக்கட்சி என பெயர் மாற்றம்.
- 1991 : தில்லியில் பெரியார் பிறந்தநாள் விழாக்கள், வடமாநிலங்களில் பெரியார் கொள்கை பரப்புரைகள்
- 1994 : ஈழத்தலைவர் ச.அ.டேவிட் ஒத்தாசையில் "பெரியார் ஈரா" என்ற ஆங்கிலத் திங்கள் இதழ் தொடக்கம்
- 1996 : திருக்குறள் மாநாடு, பெரியார் பற்றிய சொற்பொழிவு மற்றும் ஆய்வுக்காக மலேசியப்பயணம். வட இந்தியாவின் 30 மாவட்டங்களில் இடஒதுக்கீடு பரப்புரைகள்
- 2005 : மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பயணம்
நடத்திய இதழ்கள்[தொகு]
- குறள் மலர்
- குறள் முரசு
- Periyar Era
- சிந்தனையாளன் - மாதம் ஒருமுறை வரும் இதழ்.
இவரது படைப்புகள்[தொகு]
- பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள் - தொகுப்பாசிரியர்
- சிந்தனையாளர்களுக்குச் சீரிய விருந்து
- தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்
- பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?
- விகிதாசார இடஒதுக்கீடு செய்! (தமிழ் மற்றும் ஆங்கிலம்)
- பெரியாரியல் - இரண்டு தொகுதிகள்
- தத்துவ விவேசினி (தொகுப்பு)
மறைவு[தொகு]
இவர் ஏப்ரல் 06, 2021 அன்று புதுச்சேரியில், தமது 96வது வயதில் மறைந்தார்.[4]மறைவிற்கு முன்னர் இவர் கொரானா தொற்று நோய்க்கு சென்னை அரசு மருத்துவமனையில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.[5] அவரின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவக் கொடையாக பேரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு 2021 ஏப்ரல் 7 மாலை 5.30 மணிக்கு அளிக்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ மார்க்சிய, பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து காலமானார்: ஸ்டாலின் இரங்கல். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 06 ஏப்ரல் 2021. https://www.hindutamil.in/news/tamilnadu/655680-marxist-and-periyar-scholar-v-anamuthu-passes-away-stalin-s-condolences.html.
- ↑ பெரியாரிய இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியவை... - ஆனைமுத்து பட்டியல். விகடன் இதழ். 12 ஜூலை 2020. https://www.vikatan.com/news/politics/anaimuthu-explains-what-periyarist-organizations-should-do.
- ↑ 96 வயது ‘பெரியாரிய அறிஞர்’ வே.ஆனைமுத்துவுக்கு கரோனா- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 07 டிசம்பர் 2020. https://www.hindutamil.in/news/tamilnadu/609082-ve-anaimuthu.html.
- ↑ பெரியாரிய ஆய்வாளர் வே. ஆனைமுத்து காலமானார்
- ↑ 96 வயது ‘பெரியாரிய அறிஞர்’ வே.ஆனைமுத்துவுக்கு கரோனா- சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை