மத்திய பேருந்து நிலையம், ஈரோடு
மத்திய பேருந்து நிலையம் | |
|---|---|
| சுதந்திரதின வெள்ளிவிழா பேருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | சுவஸ்திக் கார்னர், ஈரோடு, தமிழ் நாடு, அஞ்சல் - 638011. |
| உரிமம் | ஈரோடு மாநகராட்சி |
| இயக்குபவர் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் |
| நடைமேடை | 13 (120 நிறுத்தங்கள்) |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | தரைக்கட்டமைப்பு |
| தரிப்பிடம் | உள்ளது |
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
| மாற்றுத்திறனாளி அணுகல் | |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | ERD(எஸ்.இ.டி.சி), ERO கே.எஸ்.ஆர்.டி.சி) & IRO(கேரளா.எஸ்.ஆர்.டி.சி) |
| பயணக்கட்டண வலயம் | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை மண்டலம்) |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 1973 |
| பயணிகள் | |
| பயணிகள் | 110000 |
மத்திய பேருந்து நிலையம் அல்லது வெள்ளிவிழா பேருந்து நிலையம், ஈரோடு மாநகரின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது. இது மாநகரின் மையப் பகுதியில் ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் பன்னீர் செல்வம் பூங்கா ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2.கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இது புறநகர் பேருந்துகள், மாநகர் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் ஆகிய மூன்று பேருந்து சேவைகளையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகும். இப்பேருந்து நிலையத்திலிருந்து மாநகர் மற்றும் புறநகரின் அனைத்துப் பகுதிகளும் ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் சிறப்பான பேருந்து இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]ஈரோடு நகருக்கான மத்திய பேருந்து நிலையம், மணிக்கூண்டை அடுத்த கிருஷ்ணா திரையரங்கம் அருகில் ஆர்.கே.வி. சாலை - காவேரி சாலை சந்திப்புப் பகுதியில் இயங்கி வந்தது. நகரின் வளர்ச்சியும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்ததன் காரணமாக 1970களில் பேருந்து நிலையம் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. நேதாஜி காய்கறி மார்க்கெட் அருகே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையப் பகுதியில் தற்போது மாநகரட்சியின் சார்பில் வணிக வளாகமும், திரு. வி.க. பூங்காவும் செயல்பட்டு வருகின்றன.
- 1972-ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தை இடம் மாற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு சுவஸ்திக் கார்னர் அருகில் செயல்பட்டு வந்த சந்தைப் பகுதிக்கு மாற்றி அதற்கு சுதந்திரதின வெள்ளிவிழா பேருந்து நிலையம் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.
- 1973 ஆம் ஆண்டு பேருந்து நிலைய இடமாற்றம் செயல்படுத்தப்பட்டது.
- 1980 ஆம் ஆண்டு பேருந்து நிலையத்திற்கான முதல் முனையக் கட்டிடம் அப்போதைய பெரியார் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. வே. இலட்சுமிரதன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆளுநரின் ஆலோசகராக இருந்த திரு. தி.நா. இலட்சுமிநாராயணன், இ.ஆ.ப. அவர்களால் 28.03.1980 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- 1982 ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தினை விரிவாக்கம் செய்து இரண்டாவது முனையக் கட்டிடம் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த திரு. சு. முத்துசாமி அவர்கள் தலைமையில் அப்போதைய முதலமைச்சர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் 28.11.1982 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- 2003-ஆம் ஆண்டு பேருந்து நிலையத்தினை விரிவுபடுத்தி, வளாகத்தின் கிழக்குப்பகுதியில் நகரப் பேருந்து முனையம் தனியாக நிறுத்தங்களுடன் கூடிய கட்டிடம் மற்றும் கூடுதல் வணிகவளாக கட்டிடம் ரூபாய் 4.13 கோடி மதிப்பீட்டில் அப்போதைய முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களால் 12.02.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- 2011-ஆம் ஆண்டு பேருந்து நிலைய வளாகத்தினை மேலும் விரிவுபடுத்தி, சிற்றுந்து முனையம் தனியாக நிறுத்தங்களுடன் கூடிய கட்டிடம், கீழ்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகக் கட்டிடம் ஆகியவை ரூபாய் 4.10 கோடி மதிப்பீட்டில் அப்போதைய முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் 29.11.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கான்கிரீட் தரைத் தளமும் அமைக்கப்பட்டது.
- இது கடந்த 2024-ம் ஆண்டு, பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மருகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. புற நகர்ப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த முதல் மற்றும் இரண்டாவது முனையக் கட்டிடங்க்கள் மற்றும் பேருந்து நடைமேடைகள் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் ஆகியன முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில், அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய ஒரு புதிய பல்லடுக்கு வணிக வளாகக் கட்டிடமும், நகரப்பேருந்துகள் நிறுத்தும் வகையில் நேராக தலா ஆறு பேருந்துகள் நிறுத்தும் வீதம் ஐந்து நடைமேடைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் தமிழகத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாகத் திகழ்ந்த இது, சமீப காலங்களில் உருவான சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களுக்கும் இன்றளவும் இணையாகவே உள்ளது.
நிலைய அமைப்பு மற்றும் போக்குவரத்து செயல்பாடு - 2024-ம் ஆண்டுக்கு முன்பு வரை
[தொகு]
2015ஆம் ஆண்டின் கணக்கெடுப்புபடி, இங்கிருந்து ஒரு நாளைக்கு சுமார் 2,530 புறநகர்ப் பேருந்து சேவைகளும், 1,640 நகரப் பேருந்து சேவைகளும் என மொத்தம் 4,200 பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.[1] நாளொன்றுக்கு சுமாராக 1,10,000 பயணிகள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.[2]
இந்தப் பேருந்து நிலையம் ஒரே வளாகத்தில், புறநகர்ப் பேருந்துகள், நகரப்பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை இயக்கும் தனித்தனி நிறுத்தங்களோடு மொத்தம் 120 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக அமைந்துள்ளது. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளுக்கென 5 நடைமேடைகளில் ஒவ்வொன்றிலும் தலா 15 நிறுத்தங்களுடன் மொத்தம் 75 பேருந்து நிறுத்தங்களும்; நகரப் பேருந்துகளுக்கெனத் தனியாக 5 நடைமேடைகளும், மேலும் சிற்றுந்துகளுக்கென 2 நடைமேடைகளும் மொத்தம் 35 பேருந்து நிறுத்தங்களுடன் பயன்பாட்டில் உள்ளன.[3]
2024-ம் ஆண்டுக்கு பிறகு பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு
[தொகு]2024ம் ஆண்டுக்கு பிறகு பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட பிறகு பேருந்து நடைமேடைகள் மற்றும் வழித்தடங்க்கள் கீழே உள்ளவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது மேலும் 2025ம் ஆண்டு சோலார் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு செயல்படும்போது மேலும் மாறுபடும்.
| நடைமேடை | சேவை | நிறுத்தங்கள் | செல்லும் மார்க்கம் |
|---|---|---|---|
| 1 | புறநகர் பேருந்துகள் | 6+6 | கோவை, மேட்டுப்பாளையம், உதகை, கோத்தகிரி, கூடலூர், பாலக்காடு |
| 2 | புறநகர் பேருந்துகள் | 6+6 | திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி கோபி, சத்தி, மைசூரு |
| 3 | புறநகர் பேருந்துகள் | 6+6 | தாராபுரம், பழநி |
| 4 | புறநகர் பேருந்துகள் | 6+6 | கரூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சிவகாசி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமேஸ்வரம், திருச்செந்தூர் |
| 5 | புறநகர் பேருந்துகள் | 6+6 | சேலம், எடப்பாடி, பாண்டிச்சேரி, நாமக்கல், திருச்செங்கோடு, கடலூர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், மேட்டூர், தருமபுரி |
| 6 | மாநகரப் பேருந்துகள் | 15+5 | ஈரோடு சந்திப்பு, பன்னீர்செல்வம் பூங்கா, சோலார், பெருந்துறை, மொடக்குறிச்சி, சிவகிரி, வெள்ளோடு, சென்னிமலை, திண்டல், நசியனூர், வெள்ளக்கோவில், முத்தூர், மூலனூர் |
| 7 | மாநகரப் பேருந்துகள் | 5 | பவானி, சித்தோடு, வீரப்பன்சத்திரம், பி.பெ. அக்ரஹாரம் |
| 8 | மாநகரப் பேருந்துகள் | 5 | பள்ளிபாளையம், குமாரபாளையம், SPB காலனி, திருச்செங்கோடு, சங்ககிரி |
| 9 & 10 | புறநகர் பேருந்துகள் | 10 | பவானி, அந்தியூர், மேட்டூர், வெள்ளித்திருப்பூர் |
| 11 | மாநகரப் பேருந்துகள் | 5 | சூரம்பட்டி, ஈரோடு சந்திப்பு, பன்னீர்செல்வம் பூங்கா, தந்தை பெரியார் அரசு மருத்துவமனை |
| 12 & 13 | மாநகர சிற்றுந்துகள் | 10 | மாநகரின் உட்பகுதிகள் அனைத்திற்கும் |
புதிய புறநகர்ப் பேருந்து நிலையங்கள் திட்டம்
[தொகு]மாநகரின் விரைவான வளர்ச்சியால், இந்தப் பேருந்து நிலையமும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதையடுத்து அரசு நிர்வாகம், இந்தப் பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து தெற்கு வெளிவட்டச்சாலை அருகேயுள்ள சோலார் மற்றும் NH-544 மேற்கு புறவழிச்சாலை அருகேயுள்ள சித்தோடு ஆகிய இரண்டு இடங்களில் புதிதாக புறநகர்ப் பேருந்து நிலையங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
சோலாரில் தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்தியப் மாவட்டங்களுக்குச் செல்லும் 1,200 புறநகர்ப் பேருந்து சேவைகளை கையாளுமளவிற்கும்; சித்தோட்டில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் பெங்களூருக்கு செல்லும் 900 பேருந்து சேவைகளைக் கையாளும் வகையிலும் இரண்டு கூடுதல் புறநகரப் பேருந்து நிலையங்கள் திட்டமிடப்பட்டது. [4]
சோலார் பேருந்து நிலையம், ஈரோடு
தற்போதைய நிலவரப்படி, தமிழக அரசு கரூர் சாலையில் சோலார் பகுதியில் சுமார் 65 பேருந்துகள் நிறுத்தும் வகையில் 24 ஏக்கரில் புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைப்பதற்கு 63.50 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளித்து கட்டுமானப் பணிகள் துவங்கவுள்ளது.
பெரியசேமூர் பேருந்து நிலையம், ஈரோடு
மேலும், சத்தியமங்கலம் சாலையில் பெரியசேமூர் பகுதியில் கனிராவுத்தர்குளம் அருகில் தனியாரிடம் 14.8 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி புதிய புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்க ரூபாய் 130 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணியும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் துவங்கியுள்ளது.
நகரப் பேருந்து நிலையங்கள்
[தொகு]ஈரோடு மாநகரப் பகுதியில் நகரப் பேருந்துகளுக்கென இரண்டு சிறிய பேருந்து நிலையங்களும் உள்ளன.
- சூரம்பட்டி பேருந்து நிலையம்
- 46-புதூர் பேருந்து நிலையம்
மேலும் பார்க்க
[தொகு]- ஈரோடு போக்குவரத்து
- சோலார் பேருந்து நிலையம், ஈரோடு
- ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்
- வெளி வட்டச் சாலை, ஈரோடு
- உள் வட்டச் சாலை, ஈரோடு
- திண்டல் உயர்மட்ட சாலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ {{http://erodecorporation.gov.in/pdf/Erode%20CMP.pdf%7CErode_CMP-2015-Page-134}}
- ↑ {{http://www.assembly.tn.gov.in/debates/pdfdocs/099-270618.pdf%7CErode_Solar_BS_Assembly_Debate-page-394}}
- ↑ {{http://erodecorporation.gov.in/pdf/Erode%20CMP.pdf%7CErode_CMP-2015-Page-45}}
- ↑ https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Land-identified-for-new-bus-terminal-at-Solar/article17126340.ece