வெறியாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெறியாட்டு என்பது சங்க கால வீட்டுவிழா.

தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியிடம் வராமல் 'ஒருவழித் தணந்து' நிற்பதும், தலைவி தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், இந்த இளைப்புக்கான காரணத்தை அவளது தாய் வேலனையோ, குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டையோ கேட்டறிவதும், அவர்கள் முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு அயர முருகன் சினம் தணிந்து மகள் நலம் பெறுவாள் என்பதும், தாய் மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதும் வெறியாட்டு எனப்படும். இதனை முருகயர்தல் என்றும் கூறுவர்.

வெறிபாடிய காமக் கண்ணியார் கூறுவன[தொகு]

மறி

தலைவன் தலைவியைத் துய்த்தான். அவன் ஏக்கத்தால் தலைவி மெலிந்தாள். மெலிவுக்குக் காரணம் தாய் ஆராய்ந்தது பற்றியும், வெறியாட்டு விழாக் கொண்டாடியது பற்றியும், விழாவுக்குப் பின் நிகழ்ந்தது பற்றியும் பெண்புலவர் வெறிபாடிய காமக் கண்ணியார் தன் இரு பாடல்களிலும் கூறியுள்ள செய்திகளின் தொகுப்பு இது.

  • தலைவன் தலைவி உறவு தாய்க்குத் தெரியாது.
  • தலையளி செய்யாத தலைவனை நினைந்து ஏங்கும் தலைவி உடல் மெலிந்துபோகிறாள். அதனால் அவளது கைவளை கழல்கிறது.
  • தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டைக் கேட்கிறாள். அவளும் அவளைச் சேர்ந்தவர்களும் 'பொய்வல் பெண்டிர்'. அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள்.
  • குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள்.
  • அதன்படி விழாக் கொண்டாடினர்.
  • அந்த விழாவை முருகாற்றுப்படுத்தல் என்றும் கூறுவர்.
  • மகளின் அழகு முன்பு இருந்ததைவிட மேலும் சிறக்கவேண்டும் எனத் தாய் வேண்டிக்கொள்வாள்.
  • மனையில் இன்னிசை முழங்கப்படும்.
  • விழாவுக்குக் களம் அமைப்பர். அகன்ற பந்தல் போடுவர்.
  • முருகாற்றுப்படுத்தும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர்.
  • வேலன் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவான்.
  • (மறி என்னும் ஆட்டுக்குட்டியைப்) பலி கொடுப்பான்.
  • அதன் குருதியில் கலந்து தினையை மனையெங்கும் தூவுவான்.
  • பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல வெறியாடு மகளைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பான்.
இதுதான் வெறியாட்டு.

பிற புலவர்கள் கூறுவன[தொகு]

பெருஞ்சாத்தனார் கூறுவன[தொகு]

  • மறியின் குரலை அறுப்பர்.
  • அதன் குருதியில் தினையை நனைத்துவைத்துப் படைப்பர்.
  • பேய்ப்பிடித்தவள் என்று பிரம்பால் அடிப்பர்.
  • ஆற்றுக் கவலைக்கு அழைத்துச் செல்வர்.
  • அப்போது பல இசைக்கருவிகள் முழக்கப்படும்.
  • முருகனையும் வேறு பல தெய்வங்களையும் வாழ்த்துவர். [1]

வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன்[தொகு]

ஆட்டுக்குட்டியைப் பலி கொடுத்து, அதன் குருதியை வெறியாடும் தலைவி நெற்றியில் வேலன் பூசுவான்.[2]

மற்ற இலக்கியங்களில் வெறியாட்டு[தொகு]

பாடல் பொருள்
திருமுருகாற்றுப்படை(சிறுதினை மலரோடு) வேலன் போல் சாமியாடுபவர், வேலை கையில் ஏந்தி ஆடுவார், இசை இசைது மலர் தூவி, ஆட்டுக்கிடாய் அறுத்து ஊர்தோறும் இவ்விழாவை கொண்டாடுவர்.
மதுரைக்காஞ்சி [3] இவ்விழா நடக்கும் போது வேற்கொடியை ஏற்றுவர்.
பட்டினப்பாலை [4] இசை இசைது மலர் தூவி, ஆட்டுக்கிடாய் அறுத்து ஊர்தோறும் இவ்விழாவை கொண்டாடுவர்.
பெரும்பாணாற்றுப்படை(பலர் தொழ விழவுமேம்பட்ட பழவிறல்) இவ்விழாவின் போது சமயப்பிரிவினர் அனைவரும் தத்தமது கடவுளை வணங்க விழாவெடுத்தனர்.

மேற்கோள்[தொகு]

  1. மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,
    செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,
    தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
    வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,
    பேஎய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல்
    நோதக் கன்றே தோழி! - குறுந்தொகை 263
  2. குறுந்தொகை 362
  3. மதுரைக்காஞ்சி 366
  4. பட்டினப்பாலை 155-158
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெறியாட்டு&oldid=2707171" இலிருந்து மீள்விக்கப்பட்டது