வெங்கடேசப் பெருமாள் கோவில், பரமேஸ்வரன்பாளையம்

ஆள்கூறுகள்: 10°59′26″N 76°50′31″E / 10.990475°N 76.841825°E / 10.990475; 76.841825
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடேசப்பெருமாள் கோவில்
வெங்கடேசப்பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
வெங்கடேசப்பெருமாள் கோவில்
வெங்கடேசப்பெருமாள் கோவில்
ஆள்கூறுகள்:10°59′26″N 76°50′31″E / 10.990475°N 76.841825°E / 10.990475; 76.841825
பெயர்
பெயர்:ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடேசப்பெருமாள் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:பரமேஸ்வரன்பாளையம்
கோயில் தகவல்கள்
மூலவர்:வெங்கடேசப்பெருமாள் கோவில்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை


வெங்கடேசப்பெருமாள் கோவில், (Venkatesaperumal temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம்தொண்டாமுத்தூருக்கு அருகிலுள்ள பரமேஸ்வரன்பாளையம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள பழமையான விஷ்ணு கோவில். இக்கோவிலின் முதன்மைக் கடவுளான விஷ்ணு, வெங்கடேசப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

அமைவிடம்[தொகு]

கோயம்புத்தூரிலுள்ள தொண்டாமுத்தூரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில், பரமேஸ்வரன்பாளையம் என்ற சிற்றூரில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அஞ்சல் முகவரி: பரமேஸ்வரன் பாளையம், தேவராயபுரம் அஞ்சல், கோயம்புத்தூர்-641009.[1]

கோவில்[தொகு]

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கருவறையில் காட்சியளிக்கும் வெங்கடேசப்பெருமாள்

இக்கோவிலில் முதன்மைக் கடவுளாக விஷ்ணு, வெங்கடேசப் பெருமாள் என்ற பெயருடன் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்குமுகமாகக் காட்சி தருகிறார். இப்பெருமாள் பூமியைப் (மண்) பார்த்தவராய் அமைந்துள்ளது சிறப்பு. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் கோபுரத்தின் துவாரத்தின் வழியாகப் பெருமாள் மீது சூரிய ஒளி விழுவதால் அக்காலங்களில் சூரியன் பெருமாளை வழிபடுவதாகத் தொன்நம்பிக்கை உள்ளது.

கோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள ஏழுமலைகளின் உச்சியில் பெருமாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்காரணத்தால் இத்தலம் கொங்கு திருப்பதி என அழைக்கப்படுகிறது. மலைமேல் உள்ள பெருமாள் கோவிலுக்கு போகும் வழி வனப்பகுதியாக உள்ளதால் புரட்டாசி மாதங்களில் மட்டுமே அங்கு வழிபாடு நடைபெறுகிறது.

தல வரலாறு[தொகு]

விஜயநகர கட்டடப்பாணியில் அமைந்த மதிற்சுவரின் பழைய அமைப்பு மாறாது புனரமைக்கப்பட்ட பகுதியின் புதுத் தோற்றம்

சோழர்கள் கங்கர்களை வென்று கொங்கு நாட்டைச் சோழநாட்டுடன் இணைத்த காலத்தில் இக்கோவிலும் சோழநாட்டுடன் இணைந்தது. நிலநடுக்கத்தால் சிதிலமடைந்து போன இக்கோவில் ஹொய்சால அரசன் வீரவல்லாளன் காலத்தில் புனரமைக்கப்பட்டது. விஜய நகர பேரரசின் பிரதிநிதியான விசுவநாத நாயக்கர் காலத்திலும் இக்கோவிலுக்குத் திருப்பணிகள் நடத்தப்பட்டுள்ளன.

கிபி.1300-1400 காலகட்டத்தில் இக்கோவில் மும்முறை மொகலாயர் படையெடுப்பால் சூறையாடப்பட்டது. கோவிலின் நிலையறிந்த ஹைதர் அலி, இந்து-முஸ்லிம் உறவைப் பலப்படுத்தும்விதமாக இக்கோவிலுக்கு 32 ஏக்கர் புன்செய் நிலமும் மலைமேல் உள்ள பெருமாள் கோவிலுக்கு 6 ஏக்கர் புன்செய் நிலமும் அளித்தார். கிபி 1600-1700 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், முத்து அழகாத்திரி நாயக்கர், அரியநாத முதலியார், இராமப்பையர் ஆகியோர் காலத்தில் இக்கோவில் மிகவும் பிரமலடைந்திருந்தது. தற்பொழுதும் இக்கோவிலின் மதிற்சுவரின் ஒரு பகுதி அதன் பழைய விஜயநகர கட்டடப்பாணி அமைப்பு மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது[2]

2012 இல் புனரமைப்பு[தொகு]

புதிதாகக் கட்டப்பட்ட சன்னிதியில் ஆஞ்சநேயர்
புதிதாகக் கட்டப்பட்ட கருட மண்டபத்தில் காட்சிதரும் கருடாழ்வார்

இந்து அறநிலையத் துறையின் உதவியுடனும் மக்கள் அளித்த நன்கொடையாலும் இக்கோவிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 தேதியன்று நடைபெற்றது.

கோவிலின் கருவறையும் அர்த்தமண்டபமும் பழைய கட்டுமான அமைப்பு அழியாத வண்ணம் சீர்செய்யப்பட்டு, மகாமண்டபம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த நிலவறை ஒன்று உள்ளது. கருட மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. புதிதாக ஆஞ்சநேயருக்கு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் பின்புறத்தில், விஜயநகர கட்டடப்பாணியில் அமைக்கப்பட்டிருந்த மதிற்சுவரில் மீதமாகி நின்ற பழைய மதிற்சுவருடன் இணைத்துக் கோவிலைச் சுற்றி புதிய மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. மதிற்சுவரின் பழைய பகுதி, அதன் நாயக்கர் காலத்திய பாணி அழிந்துவிடாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சொர்க்க வாசலும் புனரமைக்கப்பட்டுள்ளது.

பழமைச் சின்னங்கள்[தொகு]

சிதிலமடைந்த தூண் ஒன்றில் காணப்படும் நரசிம்ம அவதார சிற்பம்
சிதிலமடைந்த தூண் ஒன்றில் காணப்படும் ராம அவதார சிற்பம்
சிதிலமடைந்த தூண் ஒன்றில் காணப்படும் வாமன அவதார சிற்பம்

அர்த்த மண்டபத்தின் கற்சுவற்றின் வெளிப்பக்கத்தில் பழங்காலத்திய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வார்த்தைகள் பல இடங்களில் காணப்படுகின்றன. பழைய கோவிலின் சிதிலமடைந்து போன கற்தூண்களில் தசாவதாரங்களைக் காட்டும் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

படத்தொகுப்பு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • பொலிவிழக்கும் 500 ஆண்டு பொக்கிஷம்-தினமலர், நாள்:18-02-2010
  • ” பாதுகாக்கப்படுமா? ஆயிரம் ஆண்டு பழமையான பொக்கிஷம்” -தினமணி, நாள்:10-04-2010
  • குவலயம் காத்திடும் கொங்கு திருப்பதி-சிறப்புக் கட்டுரை-ஏ. எம். இராஜகோபால், குமுதம் சோதிடம், நாள்:29-10-2010
  • கொங்கு திருப்பதி கோயில் 18 -ல் குடமுழுக்கு-தினமணி, நாள்:05-10-2012

வெளி இணைப்புகள்[தொகு]