வீ. வே. முருகேச பாகவதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீ. வே. முருகேச பாகவதர்
பிறப்பு21 அக்டோபர் 1897
கொன்னூர், மதராசு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது சென்னை, தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு21 அக்டோபர் 1974(1974-10-21) (அகவை 77)
வில்லிவாக்கம், மதராசு, (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
தேசியம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
செயற்பாட்டுக்
காலம்
1918-1974
பட்டம்மகா மதுரகவி
பெற்றோர்தெய்வயானை
வேலாயுதனார்
உறவினர்கள்புனிதவதி (பேர்த்தி)

வீ. வே. முருகேச பாகவதர் (21 அக்டோபர் 1897 – 21 அக்டோபர் 1974) ஒரு தமிழ்நாட்டு மரபுக்கவிஞர் ஆவார். ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக, மதுரகவி வடிவில் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர். மரபுவழிப் பாடல்களும் புதிய புதிய மெட்டுகளில் அமைந்த கவிதைகளும் கீர்த்தனைகளும் எழுதினார். இவர் படைப்புகளில், தமிழமுதம்[1] என்ற நூல் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

மொழிப்பற்றாளர், எழுத்தாளர், பேச்சாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசை வல்லுநர் ஆகிய அடையாளங்களும் இவருக்கு உண்டு.[2]

தொடக்க வாழ்க்கை[தொகு]

இன்றைய சென்னை வில்லிவாக்கத்தை அடுத்த கொன்னூரில் 21 அக்டோபர் 1897 அன்று தெய்வயானை -வேலாயுதம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் முருகேச பாகவதர். கத்திவாக்கத்தைச் சேர்ந்த கா.நா. செ.எல்லப்பதாசர் என்ற புலவரிடம் பாடம் பயின்றார். பின்பு பெரம்பூர் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் பணியாற்றினார்.[3][4]

அரசியல் செயல்பாடுகள்[தொகு]

சுயமரியாதை இயக்கம், இந்திய தேசிய காங்கிரசு, பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு[5] போன்ற அமைப்புகளோடும் தொழிற்சங்கங்களோடும் இணைந்து இயங்கினார். திராவிட இயக்க மேடைகளில் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் பகுத்தறிவுக் கருத்துகளைக் கதாகாலட்சேபம் வழியாகப் பரப்புரை செய்தார். குடிநீர் உரிமையும் கோயில் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்பட்டமைக்கான எதிர்க்குரலாகப் பாகவதரின் குரல் பல மேடைகளில் ஒலித்திருக்கிறது. விடுதலை பெற்ற இந்தியாவில் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை மறுக்கப்பட்டதைப் புலப்படுத்துவதோடு ஆதிக்கச் சாதிகளை எச்சரிக்கும் பாங்கிலும் இவரது பாடல்கள் அமைந்தன.[2]

அரசு சார்பிலான மதுவிலக்குப் பிரச்சாரத் தூதுவராகப் பணியாற்றியது பாகவதரின் சமூகப் பணியில் முக்கியமான காலகட்டம். அப்போது அவர் எழுதி, பாடிய பாடல்கள் கர்னாடக இசைக் கீர்த்தனைகளாக இருந்தபோதிலும் சொற்கட்டுகள் நாட்டுப்புறத் தன்மையுடன் இருந்தன.

‘தண்ணீரைப்போல் கள்ளைத்

தளராமல் குடிப்பவர்க்கு

வெண்ணீறும் ஏதுக்கடி – ஞானம்பா

வெண்ணீறும் ஏதுக்கடி

மொந்தைக் கள்ளைத்தூக்கி

முகந்தூதிக் குடிப்போர்க்குச்

சந்தனம் ஏதுக்கடி - ஞானம்பா

சந்தனம் ஏதுக்கடி’

என்னும் பாடல், சித்தர் பாடலின் தாக்கத்தோடு சாமானியர்களின் மனசாட்சியோடும் ஒன்றும் தன்மையுடன் புனைந்தது பாகவதருக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. பாடலின் அமைப்பை அவ்வாறு அவர் பார்த்துக்கொண்டதுதான் அவரைச் சாமானிய உழைக்கும் மக்களிடம் கொண்டுசேர்த்தது.[2]

இலக்கியப்பணி[தொகு]

படைப்புகள்[தொகு]

  1. ஆதிதிராவிடர் சமூகச் சீர்திருத்தக் கீதங்கள் (1931) - தமிழ் தலித் இலக்கியத்தின் முதற்படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.[6]
  2. மதுவிலக்குக் கீர்த்தனம் (1932)
  3. அறிவானந்தக் கீதம் (1934)
  4. சமதர்மம்
  5. சன்மார்க்கம்
  6. ஞானரசம்
  7. சென்னை சிங்காரம்
  8. மாதருரிமை
  9. வெள்ளப்பாடல்
  10. தமிழ்ச்சோலை (1946)
  11. தோல் பதனிடுவோர் துயரம் (1951) (மங்கள நிலையம்) -
  12. காந்தி அடிகள் (1951) (மங்கள நிலையம்)

தனி வாழ்க்கை[தொகு]

இவர் மகன், "மதுரகவி தாசன்" (அ) "மகதா" என்ற புனைப்பெயரில் படைப்புகளை இயற்றினார்.[7]

மறைவு[தொகு]

வில்லிவாக்கத்தில் வாழ்ந்துவந்த பாகவதர், தன் 77-ஆம் பிறந்தநாளான 21 அக்டோபர் 1974 அன்று காலமானார்.[8]

புகழ்[தொகு]

பாகவதரின் "இனிமைமிக்க" கவிதைகளை முன்னிட்டு 1929-ஆம் ஆண்டுவாக்கில் சென்னையிலுள்ள விக்டோரியா பொது மண்டபத்தில் வைத்து அவருக்கு 'மகா மதுரகவி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.[9]

இவர் படைப்புகள் பேராசிரியர் க. ஜெயபாலனின் முயற்சியால் வெளிச்சத்துக்கு வந்தன.[5]

2021-இல் இவர் நூல்களை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழ்நாட்டு அரசு அறிவித்தது.[10]

"பாரதிதாசன் காலத்திய தமிழ்த் தேசியச் சாயல் இவரது கவிதைகளில் இருந்தாலும் பூர்விக, ஒடுக்கப்பட்ட மக்களின் பாடுகளை இசைத்ததில் பூர்விகக் குடிகளின் பாவலராக மிளிர்ந்திருக்கிறார்...சாதியப் பாகுபாடு, போதைப் பழக்கம், பெண் வெறுப்பு முதலியன இச்சமூகத்தில் இருக்கும் வரை பாகவதர் நடத்திய உரையாடலைத் தொடர்வது காலத்தின் தேவை" என்றார் மதுரை அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் ஞா. குருசாமி.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. காலச்சுவடு இணையதளப் பக்கம்
  2. 2.0 2.1 2.2 2.3 "பூர்விகக் குடிகளின் பாவலர்: வீ.வே.முருகேச பாகவதர் 125". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  3. "காலச்சுவடு | இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும்பாணர்". www.kalachuvadu.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  4. தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம். 1987. 
  5. 5.0 5.1 ஆதி, யாழன். "மாற்றுப்பாதை – க.ஜெயபாலன்". keetru.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  6. [https://www.google.co.in/books/edition/Contesting_Categories_Remapping_Boundari/9vKmBgAAQBAJ?hl=en&gbpv=1&dq=%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%22&pg=PA68&printsec=frontcover Contesting Categories, Remapping Boundaries Literary Interventions by Tamil Dalits]. 2015. https://www.google.co.in/books/edition/Contesting_Categories_Remapping_Boundari/9vKmBgAAQBAJ?hl=en&gbpv=1&dq=%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%22&pg=PA68&printsec=frontcover. 
  7. இந்திரன் l வீ.வே. முருகேச பாகவதர் - ஒரு மின்சாரக் கவி l balit society, பார்க்கப்பட்ட நாள் 2022-10-23
  8. "எதிர்த்தரப்புடன் உரையாடல் நிகழ்த்துபவர் - கல்யாணராமன்". Uyirmmai (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-06-10. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  9. மகாமதுர கவிஞர் வீ.வே. முருகேச பாகவதர் l ஆதிதிராவிட சமூக சீர்திருத்த கீதம் l முனைவர் பெ. விஜயகுமார், பார்க்கப்பட்ட நாள் 2022-10-21
  10. "காலச்சுவடு | மகா மதுரகவி". www.kalachuvadu.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._வே._முருகேச_பாகவதர்&oldid=3640036" இலிருந்து மீள்விக்கப்பட்டது