வி. நடராஜ ஐயர்
வி. நடராஜ ஐயர் | |
|---|---|
1904 இல் வி. நடராஜ ஐயர் | |
| பிறப்பு | மருதூர், திருச்சிராப்பள்ளி |
| இறப்பு | 12 சனவரி 2008 |
| பணி | இதழாசிரியர் |
| அறியப்படுவது | இதழாசிரியர், நூலாசிரியர், எழுத்தாளர் |
| பெற்றோர் | வெங்கிடராம ஐயர் |
வி. நடராஜ ஐயர் (இறப்பு: 12 சனவரி 1908)[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த இதழாசிரியரும், நூலாசிரியரும் ஆவார். லோகோபகாரி என்ற தேச பக்தத் தமிழிதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் இயற்றிய தத்துவ தரிசனி என்ற நூல் பாடசாலைகளில் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.[2] இவர் 1898 ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்து ’ஞானத் திரட்டு’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டவர்.[1] 1898 மே 1 அன்று ’ஞானத் திரட்டு பாகம் 1’ வெளியிடப்பட்டது. ஞானத் திரட்டு முதல் தொகுதியை நேரடியாக சுவாமி விவேகானந்தருக்கே அனுப்பி அவரது பதில் கடிதத்தில் ”மாநில மொழிகளில் தமது கருத்தை மொழிபெயர்த்தவர்களில் முன்னோடி’யாகக் குறிப்பிடப்பட்டவர்.[3][4]
வி. நடராச ஐயர் திருச்சிராப்பள்ளியில் குளித்தலைக்கு அருகிலுள்ள மருதூரில் வெங்கிடராம ஐயருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருச்சியில் எஸ். பி. ஜீ. கலாசாலையில் கல்வி பயின்று, தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] நடராஜ ஐயர் தாம் ஒரு பத்திரிகையை நடத்த விரும்பி சென்னைக்குச் சென்று லோகோபகாரி என்ற பெயரில் 1895-ஆம் ஆண்டில் இதழ் ஒன்றை வெளியிட ஆரம்பித்தார். தொடக்கத்தில் மாதம் மூன்று இதழ்களாக வெளிவந்த இவ்விதழ் 1897 முதல் வார இதழாக வெளிவந்தது.[1]
1897 அக்டோபர் முதல் ஞானசந்திரிகா என்ற இதழையும் சிறிது காலம் வெளியிட்டு வந்தார்.[1] 1901 ஆகத்து முதல் தி இந்தியன் நியூஸ் என்ற ஆங்கில வாரப் இதழையும் ஓராண்டு காலம் வெளியிட்டார்.[1] 1902 முதல் லோகோபகாரி பத்திரிகைக்கு பண்டிதை விசாலாட்சியம்மாள் என்பவர் உதவி ஆசிரியராக இருந்து வந்தார்.[1]
பண்டிதை விசாலாட்சியம்மாள் எழுதிய லலிதாங்கி, ஜலஜாக்ஷி என்ற இரு புதினங்களை நடராஜ ஐயர் தனது பெயரில் வெளியிட்டார்.[1] ஆனாலும், பின்னர் ஜோதிஷ்மதி என்ற நாவலில் மேற்குறிப்பிட்ட இரு புதினங்களையும் எழுதியவர் விசாலாட்சியம்மாள் என்று வெளியானது.[1] 1906 இல் லோகோபகாரி பத்திரிகையின் உரிமையை பண்டிதை விசாலாட்சியம்மாளுக்கு அளித்தார்.[1]
நூல்கள்
[தொகு]வி. நடராச ஐயர் இயற்றியதும் வெளியிட்டதுமான நூல்களும் புதினங்களும்:[5]
- ஞானபூஷணி (1896)
- ஞானதரிசனி (1898)
- ஞானத்திரட்டு 1 (1898)
- ஞானத்திரட்டு 2 (1898)
- தத்துவதரிசனி (1899)
- ஞானலோசனி (1900)
- நீதிமாலினி (1901)
- லலிதாங்கி (1902)
- ஜலஜாக்ஷி (1902)
- தேவி சந்திரப்ரபா (102)
- ஜோதிஷ்மதி (1903)
- நிர்மலா (1903)
- ஆநந்தமகிளா (1903)
- ஹேமாம்பரி (1904)
- ஸரஸ்வதி (1905)
- கௌரி (1906)
- ஞானரஞ்சினி (1907)
இறப்பு
[தொகு]மனப்பிணி, தேகப்பிணி போன்றவற்றால் நொந்திருந்த நடராஜ ஐயர் 1908 சனவரி 12 இல் காலமானார். இவரின் மனைவி ஜானகி அம்மாள். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் ஐயர் மறுமணம் புரிந்தார், ஆனாலும் அவருக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "சென்று போன நாட்கள்: ஸ்ரீமான் வி. நடராஜ ஐயர்". ஆநந்தகுணபோதினி. மே 1926.
- ↑ http://books.google.co.in/books/aboutலோகோபகாரி_பத்த.html?id=xb8VSQAACAAJ&redir_esc=y
- ↑ ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஆகத்து 2007; தமிழில் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த இலக்கியங்கள்; பெ. சு. மணி
- ↑ பத்மன் (13 சனவரி 2013). "சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்". Archived from the original on 27 ஆகத்து 2014. Retrieved 27 திசம்பர் 2022 – via archive.today.
- ↑ "சென்று போன நாட்கள்: ஸ்ரீமான் வி. நடராஜ ஐயர்". ஆநந்தகுணபோதினி. சூன் 1926.