விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகானந்தா தமிழ்பள்ளி (பெட்டாலிங் ஜெயா)
SJK(T) Vivekananda Petaling Jaya
தகவல்
வகைஇரு பாலர் பயிலும் பள்ளி
பள்ளி மாவட்டம்பெட்டாலிங் ஜெயா
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்BBD8458
தலைமை ஆசிரியர்திருமதி பஞ்சினியம்மாள்

தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்657 மாணவர்கள்
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா) (மலாய்: (SJK(T) Vivekananda); ஆங்கிலம்: (Vivekananda Tamil School, Petaling Jaya) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியாகும்.

கோலாலம்பூர், மாநகரில் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி எனும் பெயரில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (கோலாலம்பூர்). அந்த வகையில் விவேகானந்தா எனும் பெயரில் இரு தமிழ்ப்பள்ளிகள், கோலாலம்பூர்; பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் உள்ளன. [1]

வரலாறு[தொகு]

1950-ஆம் ஆண்டு வரையில் பெட்டாலிங் ஜெயா நகரப் பகுதியில் தமிழ்ப்பள்ளி அமைக்கப்படவில்லை. அந்த வகையில் 1958-ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா பழைய அரசாங்க அலுவலகத்தில் (Old Office of the Petaling Jaya Authority) விவேகானந்த ஆசிரமத்தினர் ஒரு தமிழ்ப்பள்ளியை நிறுவினார்கள். இந்தப் பள்ளி லா பேய்லி என்னும் பெட்டாலிங் ஜெயா தலைமை நிர்வாக அதிகாரியால் திறப்புவிழா கண்டது.

இந்தப் பள்ளிக்கு மாணவர்களைத் திரட்ட விவேகானந்தா ஆசிரம நிர்வாகிகளான கந்தையா, ஆறுமுகம், அ.காசிப்பிள்ளை போன்றோர் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் தமிழர்களின் வீடுகளுக்குச் சென்று தமிழ்க் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினர் மாணவர்களைப் புதிய பள்ளிக்குப் பதிவும் செய்தனர்.

மூன்று ஏக்கர் நிலம்[தொகு]

விவேகானந்தா ஆசிரமத்தாரின் சீரிய முயற்சியினால் வளர்ச்சி அடைந்து வந்த இந்தப் பள்ளி அதிக மாணவர்களை ஈர்த்தது. அதனால், இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண ஆசிரம நிர்வாகத்தினர் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் உதவியை நாடினர். ஜாலான் டெம்பளர் சாலைப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளிக் கட்டிடம் நிறுவுவதற்கு மூன்று ஏக்கர் நிலம் விவேகானந்தா ஆசிரமத்திற்கு வழங்கப்பட்டது.

அந்த நிலத்தில் ஆசிரம நிர்வாகத்தினர் 3 வகுப்பறைகள், ஒரு தலைமையாசிரியர் அறை, ஒரு சிற்றுண்டிச் சாலை மற்றும் மாணவர்கள் பயன்படுத்துவதற்கான கழிப்பறை ஆகியவற்றைக் கட்டுவதற்கு முடிவு எடுத்தனர். மலேசிய வர்த்தகரான க. இராமநாதன் செட்டியார் 12.11.1959-ஆம் நாள் அந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவின் கல்வி அமைச்சராக இருந்த அப்துல் ரகுமான் தாலிப் 30.10.1960—ஆம் நாள் புதியக் கட்டிடத்தின் தமிழ்ப்பல்ளியைத் திறந்து வைத்தார்.

பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வளர்ச்சி[தொகு]

பெட்டாலிங் ஜெயா நகரத்தின் வளர்ச்சி, அப்பகுதியில் வாழ்ந்த தோட்டப்புற இந்திய மக்களை வெகுவாக ஈர்த்த்து. தோட்டப்புற மக்களும் பெட்டாலிங் ஜெயா நகரில் குடியேறினர். இதனால், பெட்டாலிங் விவேகானந்தா தமிழ்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

1959-ஆம் ஆண்டு 35 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி ஈராண்களுக்குப் பிறகு 1961-ஆம் ஆண்டு 200 மாணவர்களைக் கொண்டு பீடுநடை போட்டது. ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, விவேகானந்தா ஆசிரமத்தினர் 1967-ஆம் ஆண்டு ஆறு வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தையும் கட்டினார்கள்.

15.01.1984-ஆம், நாள் அப்போதைய மலேசியப் பொதுப் பணித்துறை அமைச்சர் மான்புமிகு துன் டத்தோ ஸ்ரீ ச. சாமிவேலு அவர்கள் அந்தப் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தார்.

உலகிலேயே அதிக மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளி[தொகு]

1989-ஆம் ஆண்டு மேலும் ஆறு வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடத்தை விவேகானந்தா ஆசிரமம் கட்டிக் கொடுத்தது. 1991-ஆம் ஆண்டு மேலும் 3 வகுப்புகளைக் கொண்ட கட்டிடமும் கட்டப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை 2,300-ஐ அடைந்தது.

உலகிலேயே அதிக மாணவர்களைக் கொண்ட தொடக்க நிலைத் தமிழ்ப்பள்ளியை மேலும் விரிவுபடுத்த விவேகானந்தா ஆசிரமம் 1992-ஆம் ஆண்டு ஒன்பது வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தது.

தலைமையாசிரியர்கள்[தொகு]

விவேகானந்தா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களின் பட்டியல்:

எண் பெயர் ஆண்டு
1 குமாரி.சாவித்திரி 1958-1959
2 திரு.காசிப்பிள்ளை 1959-1972
3 திரு.சோதிநாதன் 1972-1982
4 திரு.பொன்னழகு 1983-1989
5 திரு.செல்வராஜன் 1991-1996
6 திரு.ஆறுமுகம் 1997-1999
7 திரு. செல்லையா 1999-2001
8 திரு.புத்திரன் 2001-2004
9 திரு.பாலமோகன் 2004-2014[2]
10 திருமதி.பஞ்சினியம்மாள் 2014-

பள்ளி நிர்வாகம்[தொகு]

  • தலைமையாசிரியர்: திருமதி மு. பஞ்சினியம்மாள்
  • துணைத் தலைமையாசிரியர் (கலைத் திட்டம்): திருமதி. மு.பூங்கோதை
  • பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்: திரு. முனியாண்டி

படங்கள்[தொகு]

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vivekananda Tamil Primary School Petaling Jaya acquires 3 acres of land in Jalan Templer in 1960; opening ceremony is officiated by Minister of Education YB Encik Abdul Rahman b. Haji Talib". Archived from the original on 31 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 13 April 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "RM20 million is allocated to improve 13 Tamil National Type Schools (SJK) (T) nationwide under the Future Action Plan for Tamil Schools in Malaysia. Deputy Minister of Education, P. Kamalanathan made the announcement at SJK (T) Vivekananda, Jalan Templer, Petaling Jaya". www.mstar.com.my (in ஆங்கிலம்). 28 June 2013. பார்க்கப்பட்ட நாள் 13 April 2022.