விவிலியத்தில் முகம்மது நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விவிலியத்தில் முகம்மது நபி (Muhammad in the Bible) என்பது இசுலாமிய இறைத் தூதரான முகம்மது நபியைப் பற்றி அவர் காலத்திற்குச் சுமார் 6 நூற்றாண்டுகள் முந்தைய யூத, கிறித்தவ வேதமான விவிலியத்தில் உள்ள பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கூறப்பட்டுள்ளதாக இசுலாமிய தொன்மவியலின் படி உள்ள நம்பிக்கையாகும். இந்த முன்னறிவிப்புகள் குரானிலும், ஹதீஸ் மூலமும் விளக்கப்பட்டுள்ளன.[1][2]

இசுலாமியப் பார்வை[தொகு]

விவிலியத்தில் முகம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்புகள் இசுலாமியர்களால் குர்ஆன் வசனங்கள் மூலமும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் மூலமும் விளக்கப்படுகிறது.

குர்ஆன்[தொகு]

பல குர்ஆன் வசனங்கள் முகம்மது நபி பிற்காலத்தில் தீர்க்கதரிசியாக வரப்போவதை முந்தைய தீர்க்கதரிசிகளுக்கு போதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அசல் யூத மற்றும் அசல் கிறித்தவ வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்தன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இறைவனுடைய தீர்க்கதரிசிகள் முகம்மது நபிக்கு சாட்சியாகவும் மற்றும் அவரிடத்தில் விசுவாசமாகவும் இருங்கள் என்று குர்ஆன் (3:81) இல் கூறப்பட்டுள்ளது.

"நபிமார்கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் இறைத்தூதர் வருவார். நீங்கள் அவர்மீது திடமாக நம்பிக்கை கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக!."

—குர்ஆன் (3:81).[3]
  • யூத மற்றும் கிறித்தவ வேதாகமத்தில் தற்போதும் முகம்மது நபியைப் பற்றிய குறிப்புகள் உள்ளதாக குர்ஆன் (7:157) இல் கூறப்பட்டுள்ளது.[4][5]

"எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்;..."

—குர்ஆன் (7:157) [6]
  • இயேசு தமக்குப் பின்னர் தூதர் வருவார் எனக் கூறியதாக குர்ஆன் (61:6) இல் கூறப்பட்டுள்ளது.

"மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) ..."

—குர்ஆன் (61:6) [7]

ஹதீஸ்[தொகு]

  • முகம்மது நபியின் பண்புகள் விவிலியத்தில் தோரா (தவ்ராத்) பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஸஹீஹ் புகாரி ஹதீஸ் நூலில் எண் 2125 இல் கூறப்பட்டுள்ளது.

குர்ஆனில் கூறப்படும் முகம்மது நபியின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. "நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியாக அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!" என்று இறைவன் கூறினான்.

—ஸஹீஹ் புகாரி (2125) [8][9]

இசுலாமியர்கள் குறிப்பிடும் விவிலிய வசனங்கள்[தொகு]

ஆதியாகமம், 49:10[தொகு]

ஷைலோ[தெளிவுபடுத்துக] வரும்வரை யூதாவைவிட்டு செங்கோல் விலகாது, அவன் பாதங்களுக்கு இடையிலிருந்து அதிகாரக்கோலும் விலகாது. ஜனங்கள் எல்லாரும் ஷைலோவுக்குக் கீழ்ப்படிவார்கள்.

முகம்மது நபியைப் பற்றிய இந்த தீர்க்கதரிசனம் குர்ஆன் 3:81 வசனத்தின் விளக்கத்தில் படிக்க வேண்டும்.[10][11] டேவிட் பெஞ்சமின் போன்ற எழுத்தாளர்கள் ஷைலோ எனும் ஹீப்ரு மொழிச் சொல்லுக்கு இறைத்தூதர் என்று பொருள் கூறியுள்ளனர்.[12] லத்தீன் விவிலியத்தில் ஷைலோ என்பவர் இறைவனால் அனுப்பப்படக் கூடியவர் எனப் பொருள் உள்ளது.[13]

உபாகமம், 18:18-19[தொகு]

18. நான் அவர்கள் நடுவிலிருந்து உன்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை நியமிப்பேன். என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். என்னுடைய எல்லா கட்டளைகளையும் அவர்களுக்கு அவர் சொல்வார். 19. அவர் என் பெயரில் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு நடக்காதவனை நான் தண்டிப்பேன்.

யூத மதத்திலிருந்து இசுலாமுக்கு மாறிய சமவால் அல் மஃரிபி எனும் கணிதவியலாளர் உபகாமம் 18:18 இல் குறிப்பிடப்படும் தீர்க்கதரிசி முகம்மது நபிதான் என தமது நூலான "கன்வின்சிங் த ஜிவிஸ்" இல் குறிப்பிட்டுள்ளார்.[14] ஏசாவின் வம்சத்தார் பற்றி இஸ்ரவேல் சகோதரர்களாகிய ஏசாவின் வம்சத்தார் என உபாகமம் 2:4-6 இல் விவரிக்கப்பட்டுள்ளன. இஸ்மவேலின் வம்சத்தார் அதே வழியில் விவரிக்க முடியும் என அவர் கூறினார்.[15]

உபாகமம், 33:2[தொகு]

முகம்மது நபிக்கு தீர்க்கதரிசனம் கிடைத்த மக்காவில் உள்ள ஜபலுன் நூர் மலை.(ஒளி வீசும் மலை)

"சீனாயிலிருந்து யெகோவா வந்தார். சேயீரிலிருந்து அவர்கள்மேல் ஒளிவீசினார். லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் அவருடைய போர்வீரர்கள் இருந்தார்கள். பாரான் மலைப்பகுதியிலிருந்து அவர் மகிமையில் பிரகாசித்தார்."

சமவால் அல் மஃரிபி அவருடைய நூலில் முகம்மது நபிக்கு தீர்க்கதரிசனம் கிடைத்த நிகழ்வை இந்த வசனம் கூறுகிறது என விளக்கினார். மேலும் சினாய் மலை மோசேக்கும் ஏசா மலை இயேசுவிற்கும் பாரான் மலை முகம்மது நபிக்கும் உள்ளதாக குறிப்பிட்டார்.[16]

1.அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக! 2.“சினாய்” மலையின் மீதும் சத்தியமாக! 3.அபயமளிக்கும் இந்த (மக்கா) நகரத்தின் மீதும் சத்தியமாக!

சில முசுலிம் அறிஞர்கள் விவிலியத்தின் உபாகமம் (33:2) வசனத்திற்கும் குர்ஆன் (95: 1-3) வசனங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை குறிப்பிடுகின்றனர். அத்தி மற்றும் ஒலிவம் இயேசுவையும், சினாய் மலை மோசேவையும் மக்கா நகர் முகம்மது நபியையும் குறிப்பிடுவதாக கூறினர்.[17] மேலும் லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்கள் அவரோடு இருந்தார்கள் என்பது முகம்மது நபியின் தோழர்கள் என்பதாகவும் விளக்கமளித்தனர்.[18]

சங்கீதம், 45[தொகு]

முகம்மது நபியின் புகழ்பாடும் ஹில்யா

சங்கீதம் (45:1-17) இல் குறிப்பிடப்படும் அரசரின் பண்புகள் கீழ்கண்ட விசயங்களில் முகம்மது நபியை குறிப்பிடுகிறது என சில முசுலிம் அறிஞர்கள் கூறுகின்றனர்.[19][20]

  • ராஜாவின் அழகு: "நீங்கள்தான் எல்லா ஆண்களையும்விட மிக அழகானவர்.".-(சங்கீதம் 45:2)
  • ராஜாவின் வாள் மற்றும் பகைவரை வெல்தல்: "உங்களுடைய வாளை இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள். கம்பீரமாகப் போய் எதிரிகளை வெல்லுங்கள். சத்தியத்துக்காகவும் மனத்தாழ்மைக்காகவும் நீதிக்காகவும் போர் செய்ய குதிரையில் ஏறிப் போங்கள். உங்களுடைய அம்புகள் கூர்மையாக இருக்கின்றன. ஜனங்களை உங்கள்முன் விழ வைக்கின்றன. ராஜாவின் எதிரிகளுடைய இதயத்தில் பாய்கின்றன -(சங்கீதம் 45:3-5)
  • ராஜாவின் மகள்கள் மேன்மையானவர்கள்: "உங்கள் அரசவையில் உள்ள மதிப்புக்குரிய பெண்களில் இளவரசிகளும் இருக்கிறார்கள்." -(சங்கீதம் 45:9)
  • அவர் புகழப்பட்டவர்: "மக்கள் எல்லாரும் உங்களை என்றென்றும் புகழ்வார்கள்.." -(சங்கீதம் 45:17)

சங்கீதம், 110:1[தொகு]

தாவீதின் சங்கீதம். யெகோவா என் எஜமானிடம்,“நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்.

அப்சலுல் ரஹ்மான், டேவிட் பெஞ்சமின் கல்தானி போன்ற பல முசுலிம் அறிஞர்கள் சங்கீதம், 110:1 இல் குறிப்பிடப்படும் தீர்க்கதரிசி முகம்மது நபிதான் என விளக்கினார்கள்.[21][22]

உன்னதப்பாட்டு 5:16[தொகு]

அவருடைய வாய் தித்திக்கும் தேன். அவர் இனிமையின் மொத்த வடிவம்.

—உன்னதப்பாட்டு 5:16

ஹீப்ரு மொழிச் சொல்லான 'מַחֲמַדִּים' (மெய் எழுத்துக்கள்: m-ħ-m-d-y-m, "மகம்மதிம்) என்பது ஹீப்ரு மொழி விவிலியத்தின் உன்னதப்பாட்டு 5:16 இல் உள்ளது. இது முகம்மது நபியை குறிப்பிடுகிற தீர்க்கதரிசனம் என முசுலிம் அறிஞர்கள் கூறுகின்றனர். [23][24]

இசுலாம் அல்லாதவர்களின் பார்வை[தொகு]

ஜான் டமாஸ்கஸ், ஜான் கால்வின் போன்ற கிறித்தவர்கள் விவிலியத்தில் முகம்மது பொய் இறைவாக்கினரான அல்லது அந்திக்கிறித்துவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் சில கிறிஸ்தவர்கள் வேறு மாதிரியாக விமர்சித்தனர்.[யார்?][சான்று தேவை] உரோமன் கத்தோலிக்க திருச்சபை 1910 இல் வெளியிட்ட கத்தோலிக்க தகவல் களஞ்சியத்தில் "முகம்மது தொடர்பாக கடந்த மூன்று நூற்றாண்டுகளாக முரண்பாடான கருத்துகளை அறிஞர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்" எனவும் "இந்த கருத்துக்கள் தீவிர இசுலாமிய வெறுப்பு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லது மிகைப்படுத்தப்பட்ட புகழையும் கிறித்தவ வெறுப்பும் இணைந்து உள்ளது." எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[25]

தானியேல் 7 ஆம் அதிகாரத்தில் இறைவாக்குரைக்கப்பட்ட "தானியேலின் நான்கு அரசுகள்" கிறித்தவர்களால் அது முகம்மது பற்றியது என விளக்கப்படுகின்றது. துறவி இயூரோகியசு முகம்மது இறைவாக்கு குறிப்பிடும் நான்காவது மிருகம் என விளக்கினார்.[26] இன்னொரு துறவியான அல்வரசு நான்காவது மிருகத்திலிருந்து வெளிப்பட்ட "பதினெராவது அரசன்" முகம்மது என விளக்கினார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Musnad Ahmad, Hadith number: 17150-17151
  2. Al-Mustadrak 'ala al-Sahîhayn, Hadith number: 4174
  3. திருக்குர்ஆன் 3:81
  4. David A. Cheetham, Ulrich Winkler, Interreligious Hermeneutics in Pluralistic Europe: Between Texts and People, Rodopi, 2011, p.372
  5. R. G. Ghattas, Carol B. Ghattas, A Christian Guide to the Qur'an: Building Bridges in Muslim Evangelism, Kregel Academic, 2009, p.103
  6. திருக்குர்ஆன் 7:157
  7. திருக்குர்ஆன் 61:6
  8. ஸஹீஹ் புகாரி எண் 2125 தமிழ் குர்ஆன் இணையதளம்.
  9. ஸஹீஹ் புகாரி, 2:2125
  10. Kais Al-Kalby, 2005, 207
  11. Keldani, Muhammad in World Scriptures, 2006, p 42
  12. Keldani, Muhammad in World Scriptures, 2006, p 45
  13. "Douay-Rheims translation". Latinvulgate.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-16.
  14. al-Maghribi, Al-Samawal; Taweile, Abdulwahab. بذل المجهود في إفحام اليهود [Confuting the Jews] (in Arabic) (1st 1989 ed.). Syria: Dar Al Qalam. p 75
  15. al-Maghribi, Al-Samawal; Taweile, Abdulwahab. بذل المجهود في إفحام اليهود [Confuting the Jews] (in Arabic) (1st 1989 ed.). Syria: Dar Al Qalam. p 77
  16. al-Maghribi, Al-Samawal; Taweile, Abdulwahab. بذل المجهود في إفحام اليهود [Confuting the Jews] (in Arabic) (1st 1989 ed.). Syria: Dar Al Qalam. p 67
  17. Kais Al-Kalby, 2005, p 223
  18. Kais Al-Kalby, 2005, p 221
  19. Rahmatullah Kairanawi, Izhar ul-Haq (Truth Revealed), Council of Senior Scholars (Saudi Arabia) 1989, p 1143
  20. Munqidh As-Saqqar, p24
  21. Muhammad, encyclopaedia of seerah, 1st volume, Afzal-ur-Rahman, 1985, p 143
  22. David Benjamin Keldani, 2006, p 80-85
  23. Richard S. Hess; Gordon J. Wenham (1998). Make the Old Testament Live: From Curriculum to Classroom. Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8028-4427-9. https://books.google.com/books?id=J2IaCV-fon4C&pg=PA139. பார்த்த நாள்: 4 April 2013. 
  24. "The Absolute Truth About Muhammad in the Bible With Arabic Titles". Truth Will Prevail Productions. பார்க்கப்பட்ட நாள் 2016-10-07.
  25. "CATHOLIC ENCYCLOPEDIA: Mohammed and Mohammedanism (Islam)". Newadvent.org. பார்க்கப்பட்ட நாள் 2015-11-25.
  26. Quinn, Frederick, The Sum of All Heresies: The Image of Islam in Western Thought, Oxford University Press, 2008, p.30

வெளி இணைப்புகள்[தொகு]