விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ சமயத்தின் இறைநூலான விவிலியத்தில் இறைவனின் பெயர்கள் பல உள்ளன. இந்தப் பெயர்கள் எல்லாம் சில காலங்கள் பயன்படுத்தப்பட்டு நூல்களில் இடம் பெற்றன. ஆனால் காலப்போக்கில் கிறித்துவ மதத்திற்கான இறைவன் பெயர்கள் பல வழக்கத்திலிருந்து மறைந்து போய்விட்டன. அதன் பிறகு மொழிகளுக்கேற்பவும் பண்பாடுக்கேற்பவும் இறைவனின் பெயர் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

காரணப் பெயர்கள்[தொகு]

பழைய ஏற்பாட்டு நூல்கள் வேவ்வேறு காலங்களில் எழுதப்பட்டன. இவற்றில் காலத்திற்கேற்பவும், கருத்தின் அடிப்படையிலும் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் யூதர்களின் கடவுளுக்கு பயன்படுத்தப்பட்ட பதம் “ஏல்” (El) என்பதாகும். இதன் பொருள் “வல்லமையுள்ளவர்”. இதிலிருந்து “எல்கானா”, “சாமுவேல்”, “இஸ்ரயேல்”, “பெத்தேல்” என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரயேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பலமுறை இந்த ஏல் பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, “ஏல் ஷாடை” (El Shaddai) "எல்லாம் வல்ல கடவுள்” (எண் 24-4), “ஏல் எலியோன்” (El Elyon) "உன்னதமான கடவுள்” (தொநூ 14:18). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம் “ஏலோஹிம்” (Elohim) ஆகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் எல்லாம் கடவுளின் காரணப் பெயர்களாகும்.

இடுகுறிப் பெயர்[தொகு]

இஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் அல்லது இடுகுறிப் பெயர். எபிரேய மொழியில் “யாவே” (YHWH - Yahweh), அதாவது “இருக்கின்றவர் நானே” (வி.ப 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப் பட்டிருக்கிறது.

உச்சரிக்கப்படாத பெயர்[தொகு]

இறைவாக்குரைஞர் எலியா பலியை வானத்திலிருந்து வந்த நெறுப்பு எறித்த போது, மக்கள் எல்லாரும் “யாவேஹூ ஏலோஹீம்” எனச் சத்தமிட்டார்கள். “யாவேயே கடவுள்” என்பது அதன் பொருள். இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது பாவம் என்று யூதர்கள் கருதியதன் காரணமாக, அவர்கள் “யாவே” என்று வருகின்ற இடங்களிலெல்லாம் “அதோனை” என்ற சொல்லை உச்சரித்தனர். எனவே “யாவே” என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இந்த சொல் பழைய ஏற்பாட்டில் 337 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பது இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில் அச்சொல்லே “யெகோவா” என்றும் உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலமொழியில் இல்லை.

வேறு பெயர்கள்[தொகு]

புதிய ஏற்பாட்டில் கடவுளைக் குறிக்க உபயோகிக்கப்படும் கிரேக்க பதம் “தியோஸ்” (Theos). இது லத்தீன் மொழியில் “டேயுஸ்” என்ற சொல்லோடு சம்பந்தப்பட்டது. பூர்வ ஆரியருடைய மொழிகளெல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்த காரணத்தால், இதே சொல் சமற்கிருதத்தில் “தேவ” என்றிருக்கிறது. இப்பதங்களின் வேர்ப்பொருள் “ஒளி” அல்லது “வெளிச்சம்” என்பதாகும்.

கத்தோலிக்கர்கள் உபயோகித்த “சருவேசுரன்” என்ற பதத்தை ராபர்ட் டி நொபிலி அறிமுகம் செய்தார். அதன் பின் சீகன்பால்க் தன் மொழிபெயர்ப்பில் அச்சொல்லை உபயோகித்துள்ளார். எர்னஸ்ட் வால்தர் (Ernst Walther) சர்வேசுரனுக்குப் பதிலாக “பராபரன்” என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். இந்த பராபரன் என்ற சொல்லை பப்ரீஷியஸ் தன் மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொண்டார்.

பயன்படுத்தும் பெயர்கள்[தொகு]

பழைய ஏற்பாட்டில் எபிரேய மொழியில் கடவுளுடைய சொந்தப் பெயர் “யாவே” என்ற சொல்லுக்குப் பதிலாக யூதர்கள் பயன்படுத்திய “அதோனை” என்ற காரணப் பெயரை லத்தீனில் டொமினியஸ் (Dominus) என்றும், ஆங்கிலத்தில் லார்டு (Lord) என்றும், ஜெர்மனியில் ஹெர் (Herr) என்றும் மொழிபெயர்த்துள்ளனர். இது தமிழில் “கர்த்தர்” என்று பப்ரீஷியஸால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது “கிரி” என்கிற சமற்கிருத மூலத்திலிருந்து வந்தது. ஆகவே “கர்த்தர்” என்ற பதத்திற்கு “செய்கிறவர்” என்று பொருள் (உதாரணம்: கருமகர்த்தர்). இம்மூலத்திலிருந்து “கருமம்”, “கிரியை” ஆகிய சொற்கள் வருகின்றன. கர்த்தர் என்னும் சொல், “அதிபதி”, “ஆளுகிறவன்”, “ஆண்டவன்” என்னும் பொருளையும் கொடுக்கும்.இப்போது இந்தப் பெயர்களே மொழிகளுக்கேற்றபடி பயன்படுத்தப்படுகின்றன.

ஆதாரம்[தொகு]