விறகு விற்ற படலம்
திருவிளையாடற் புராணத்தில் 41 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 2031 -2100) விறகு விற்ற படலம் உள்ளது[1].
ஏமநாதன் என்ற இசை இசைப்பாடகர், பாண்டிநாட்டிற்கு வந்து மன்னன் வரகுணபாண்டியனைக் கண்டு இசைபாடி பரிசுபெறுகிறார். இசைக்கலையில் தனக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்று பெருமிதத்துடன் பாண்டியனிடம் கூறுகிறார். இது மானப்பிரச்சனையாக உருவெடுக்கிறது. பாண்டியன், தன்னுடைய இசைப்புலவரான பாணபத்திரரை அழைத்து, ஏமநாதரை இசையில் வெல்ல முடியுமா என்று கேட்கிறார். பாணபத்திரர், ஏமநாதரை இசையில் வெல்வேன் என்று கூற, பாண்டியன் இசைப் போட்டிக்கு நாள் குறிக்கிறார்.
ஏமநாதரை போட்டியில் வெல்லமுடியும் என்று மன்னரிடம் பாணபத்திரர் கூறினாலும் ஏமநாதரின் இசைத் திறமையை அறிந்த பிறகு மனதில் அச்சம் கொண்டார். இதனால் தாம் நாள்தோறும் வழிபடும் சொக்கநாதரை வழிபட்டு இசைப் போட்டியில் வெற்றி பெற அருள வேண்டினார்.
இசைப் போட்டி நிகழ்வதற்கு முந்திய நாள் மாலை, ஏமநாதர் தங்கியிருந்த வீதிவழியே விறகு வெட்டி ஒருவன் வந்தான். வந்த விறகு வெட்டி, ஏமநாதர் தங்கியிருந்த வீட்டித் திண்ணையின் இளைப்பாறினான். இளைப்பாறிய பின்னர், ஓர் இசைப்பாட்டை சாதாரிப் பண்ணில் ( முல்லைப் பண் என்றும் கூறுவர். இக்காலத்தில் தேவகாந்தாரம் என்று கூறப்படும் இராகம்.) பாடினான். அதை வீட்டிலிருந்து கேட்ட இசை மேதை ஏமநாதர் வியப்படைந்தார். அவர் வெளியே வந்து பார்த்து பாடியது ஒரு விறகு வெட்டி என்பதைக் கண்டு வியப்படைந்தார். அவனை யார் எவர் என்ற விவரங்களைக் கேட்டார்.
தான் பாணபத்திரரிடம் சிறிது காலம் இசை பயின்றதாகவும் எனக்கு இசை வரவில்லை என்று என்னை விரட்டிவாட்டார் என்றும், தற்போது விறகை விற்று பிழைத்து வருவதாகவும் கூறினான். பாணபத்திரரால் புறக்கணிக்கப்பட்ட சீடன் விறகு விற்றுப் பிழைப்பவனே இவ்வளவு இசைப்புலமை பெற்றிருப்பவனாக இருந்தால், பாணபத்திரரின் இசைப்புலமை எப்படி இருக்கும்! அவரை இசைப் போட்டியில் வெல்வது முடியாத செயல் என்று எண்ணினார். அன்றிரவு ஏமநாதர், தமது சீடர்களுடன் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விடுகிறார். அதனால் போட்டி நடக்கவில்லை.
பாணபத்திரர் குறித்து விசாரித்தபோது முந்தைய நாள் நிகழ்வு மன்னருக்கு தெரியவந்தது. அவர் பாணபத்திரரிடம் அவரின் விறகு வெட்டி சீடர் குறித்து வினவியபோது அப்படிபட்ட சீடன் தனக்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். தான் சொக்கநாதரிடம் மன்றாடியதனாலேயே இறைவனே விரகு வெட்டிவேடத்தில் வந்து தன் இடரைப் போக்கியதாக அனைவரும் உணர்ந்தனர்.[2]
பரவலர் பண்பாட்டில்
[தொகு]1965 இல் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக விறகு விற்ற படலத்தின் கதை இடம்பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 41. விறகு விற்ற படலம் (2031 -2100)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. Retrieved 11 September 2016.
{{cite web}}
: CS1 maint: date format (link) - ↑ திருவிளையாடற் புராணம், 41. விறகு விற்ற படலம், செப்டம்பர் 2000