விபுதி நாராயண சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விபுதி நாராயண் சிங் (Vibhuti Narayan Singh) (1927 நவம்பர் 5 - 2000 திசம்பர் 25) இவர் இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித நகரமாகக் கருதப்படும் வாரணாசியின் மன்னர் ஆவார். இவர் பிரித்தானிய பேரரசில் காசி இராச்சியத்தின் கடைசி மன்னராக ஆட்சி செய்தார்.

குழந்தைப் பருவம்[தொகு]

விபுதி நாராயண் சிங் 1927 நவம்பர் 5 அன்று பிறந்தார். காசி நாட்டு மன்னரான ராஜா ஆதித்யா நரேன் சிங் (1874-1939) சூன் 1934 இல் இவரை தத்தெடுத்துக்கொண்டார். [1] 1939 ஏப்ரல் 4, அன்று ராஜா இறந்த மறுநாளே, விபுதி நாராயண் சிங் நாராயண வம்சத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார். [2] அந்த காலத்தில் இவர் இன்னும் சிறியவராக இருந்ததால், இராச்சியத்தைக் கவனிக்க ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது.

கல்வி[தொகு]

சிங் அஜ்மீர் மாயோ கல்லூரியில் படித்தார். வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு பிரபல இலக்கண நிபுணர் வாகிசு சாத்திரியுடன் படித்தார். சமசுகிருதம், வேதம், புராணம் போன்றவற்றில் அறிஞராக இருந்தார். [3]

ஆட்சி[தொகு]

1947 இல் உரிய வயது வந்தவுடன், சிங் தனது பரம்பரைக்கு பொறுப்பேற்றார். ராம்நகர் கோட்டையில் வசித்து வந்த இவர் கலாச்சார நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது மூதாதையர்கள் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ராம்நகரின் உலகப் புகழ்பெற்ற ராம்லீலாவைத் தொடங்கினர். இவருடைய வழிகாட்டுதலின் கீழ் இவை வரணாசியில்ல் பிரபலமாக இருந்தன.

இவர் தனது கோட்டையில் ஒரு முழு அரச சபையையும் மற்றும் ஒரு இராணுவத்தையும் கொண்டிருந்தார். 1948 அக்டோபர் 15 ஆம் தேதி இவரது இராச்சியம் கலைக்கப்பட்டு இந்தியாவில் இணைக்கப்பட்டது. இவரது இராணுவம் ராம்நகருக்கு மாற்றப்பட்டது.

பங்களிப்பு[தொகு]

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, சிங் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஆனார். இவருக்கு கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது . வாகிசு சாத்திரியின் வழிகாட்டுதலின் கீழ் சமசுகிருத ஆராய்ச்சிக்காக விஸ்வ சமசுகிருத பிரதிஸ்தானத்தையும் நிறுவினார் . இவர் அகில பாரதிய காசிராஜ நியாசை நிறுவினார். இது கீழைநாட்டு ஆய்வுகள் குறித்த பல புத்தகங்களை வெளியிட்டது. இவர் காசி ராச்சிய அறக்கட்டளையை நிறுவினார். இது பல்லக்கு, உடைகள், வாள், குதிரைகள் போன்ற கண்காட்சிகளைக் கொண்ட அருங்காட்சியகத்தையும் நடத்துகிறது.

1983 சனவரி 28, அன்று விசுவநாத் கோயில் உத்தரபிரதேச அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. அதன் நிர்வாகம் சிங் தலைவராக இருந்த அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. [4] 1947 ஆம் ஆண்டில், இவரது தலைமையிலான சிறிகாசி நரேசு கல்வி அறக்கட்டளை படோகி மாவட்டத்தின் கயன்பூரில் காசி நரேசு அரசு முதுகலை கல்லூரியை நிறுவியது. [5]

சிங் 2000 திசம்பர் 25 அன்று இறந்தார். இவரது உடல் வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் மாநில மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது. [6] கியான்பூரில் ஒரு இடைநிலைக் கல்லூரி மற்றும் உத்தரபிரதேசத்தின் மௌ மாவட்டத்தில் சூரஜ்பூரில் மற்றொரு கல்லூரி ஆகிய இரண்டிற்கும் இவரது பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. . 5 April 1939. 
  2. . 6 April 1939. 
  3. Baldev Upadhyaya Kashi ki Panditya Parampara, Vishwavidyalaya Prakashan, Varanasi.
  4. Official website of Varanasi
  5. "KNPG College home page". Archived from the original on 2017-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
  6. "Varanasi bids adieu to Kashi Naresh". The Times of India. 27 December 2000. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Varanasi-bids-adieu-to-Kashi-Naresh/articleshow/1624173205.cms. பார்த்த நாள்: 7 May 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபுதி_நாராயண_சிங்&oldid=3571680" இலிருந்து மீள்விக்கப்பட்டது