விடுதலை இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. இராசேந்திரன்
பொதுச்செயலாளர்,
திராவிடர் விடுதலை கழகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 ஆகஸ்ட் 2012
தலைவர்கொளத்தூர் மணி
முன்னையவர்பதவி உருவாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 அக்டோபர் 1947 (1947-10-16) (அகவை 76)[1]
மாயூரம்,
சென்னை மாகாணம்,
இந்திய மேலாட்சி (தற்போது மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா)
குடியுரிமைஇந்தியர்
தேசியம்தமிழர்
அரசியல் கட்சி திராவிடர் விடுதலைக் கழகம் (2012-)
பிற அரசியல்
தொடர்புகள்
திராவிடர் கழகம் (1969-96)

பெரியார் திராவிடர் கழகம் (1996-2001; 200?-2012)

தந்தை பெரியார் திராவிடர் கழகம் (2001-200?)
துணைவர்
  • சரஸ்வதி (தி. 1979)

விடுதலை இராஜேந்திரன் (Viduthalai Rajendran) என்று அழைக்கப்படும் க. இராசேந்திரன் (பிறப்பு 17 ஏப்ரல் 1947), தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட இயக்கச் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் இதழாளர் ஆவார். முன்னர் இவர் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்களில் இருந்தவர். விடுதலை நாளிதழ் ஆசிரியர் குழவில் பல ஆண்டுகள் பணியாற்றியதால் விடுதலை இராசேந்திரன் என்று அழைக்கப்படுகிறார். 12 ஆகஸ்டு 2012 அன்று கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்டு துவக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாராக உள்ளார்.[2][3]

தொடக்க வாழ்க்கை[தொகு]

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் (1939-45) இந்தியத் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய கந்தசாமி என்பவருக்கும் அவர் இணையர் தனம் என்பவருக்கும் 16 அக்டோபர் 1947 அன்று பிறந்தார் இராசேந்திரன். இக் குடும்பத்தின் சொந்த ஊர் மாயூரம் (தற்போது மயிலாடுதுறை) ஆகும்.

இராசேந்திரனின் இளமைப் பருவத்தில் அவர் தந்தை கந்தசாமி, சில எல்லைப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி தமிழரசுக் கழக நிறுவனர் ம. பொ. சிவஞானம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்வி[தொகு]

பள்ளிப் படிப்பை மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளியில் முடித்த இராசேந்திரன் மயிலாடுதுறையில் உள்ள ஏ. வி. சி. கல்லூரியில் பல்கலைக்கழக முந்தைய படிப்பை படித்தார். 1969-இல், அதே கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

திருமணம்[தொகு]

1976 ஆம் ஆண்டு, சென்னை இராணி மேரிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த சரஸ்வதி (பி. 24 திசம்பர்)[4] இவரது நண்பர் மூலம் அறிமுகமானார். தீவிர பெரியாரியவாதியாகவும், பெண்ணியவாதியாகவும் இருந்ததால் இவர்களிடையே நட்பு மலர்ந்தது. இவருடன் 10 சனவரி 1979 முதல் தனது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். இவர்களது திருமணம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள நூலகத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி தலைமையில் எளிமையாக நடைபெற்றது. இது பெரியார் நிறுவிய விடுதலை நாளிதழில் பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்து இன்று வரை பொது வாழ்க்கையே தமது வாழ்க்கை என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

பொது வாழ்க்கை[தொகு]

திராவிடர் கழகம்[தொகு]

மயிலாடுதுறையில் உள்ள கேணிக்கரை என்ற கிராமத்தில் ஏராளமான சமூக ஒடுக்குமுறைகள் நிலவியதால், அங்கு எண்ணற்ற பெரியாரியவாதிகள் இருந்தனர். ஓ.அரங்கசாமி என்ற பெரியாரின் வழிகாட்டுதலின் பேரில் அண்ணன் மூலமாக பெரியாரியத்தை அறிந்து கொண்டார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ​​பெரியார் நிறுவிய விடுதலை நாளிதழைப் படிக்கத் தொடங்கினார். இது பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நிறைய அறிய உதவியது.

1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் மந்திரமா? தந்திரமா? போன்ற பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தினார். பெரியாரின் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவும் எழுதவும் தொடங்கினார். பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தினார். 1970ல் ஆசிரியர் என்று அழைக்கப்படும் கி.வீரமணி, இவரை விடுதலை அலுவலகத்திற்கு அழைத்தார். 1971 இல், பெரியார் நிறுவிய உண்மை என்ற மாதம் இருமுறை இதழின் விநியோகப் பணியில் ஈடுபட்டார். திருக்குறளை விமர்சித்து இவர் தனது முதல் கட்டுரையை விடுதலையில் எழுதினார். ஆசிரியர் இவரைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்து அதே கட்டுரையை உண்மையிலும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். கி.வீரமணி பரிந்துரைத்த கங்கைகொண்டான் என்ற புனைப்பெயருடன் எழுதத் தொடங்கினார். மின்வெட்டா மூலைவெட்டா? என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை கங்கைகொண்டான் என்ற புனைப்பெயருடன் முதலில் வெளியிடப்பட்டது. 1972ல் விடுதலை பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார். பல மொழிபெயர்ப்புகளையும் செய்தார்.

1976 ஆம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கி. வீரமணி கைது செய்யப்பட்டபோது, ​​பொதுத் தகவல் பணியகம் விடுதலை நாளிதழில் உள்ளவற்றை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தியது. இவரது பல கட்டுரைகள் தணிக்கை செய்யப்பட்டாலும், இவர் தொடர்ந்து எழுதினார். 1980 இல், கி. வீரமணி இவரைப் பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் இவர் மறுத்துவிட்டார். இருப்பினும், இவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் செயலாளராக ஆக்கப்பட்டார். பெரியார் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். 1978 ஆம் ஆண்டு விடுதலையில் தலையங்கம் எழுதத் தொடங்கினார். 1983 ஆம் ஆண்டு தமிழீழம் தொடர்பான பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் கலை மன்றத்தை நடத்தினார். இது இயக்கத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கழுதைக்குத் தெரியும் கற்பூர வாசனை மற்றும் சங்கிலியன் ஆகிய நாடகங்களை இவர் இயற்றி  நடித்தார். 1987ல் உண்மையின் பொறுப்பாசிரியரானார். 1996ல் திராவிடர் கழகத்திலிருந்து விலகினார்.

கி. வீரமணி தன் மகன் அன்புராஜை திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளராக நியமித்ததற்கு விடுதலை இராஜேந்திரன்[5], திராவிடர் கழகத்தின் தலைமை பீடத்தில் குடும்ப அரசியலை கி. வீரமணி புகுத்தியமைக்கு கடும் எதிரிப்பு தெரிவித்தார்.[6]

பெரியார் திராவிடர் கழகம்[தொகு]

1996-ல் பெரியார் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச் செயலாளரானார். இயக்கத்திற்காக பெரியார் முரசு என்ற 4 பக்க இதழை நிறுவினார். அந்த இதழின் ஆசிரியராக இருந்தார். 1997-இல் பத்திரிகையின் பெயரை புரட்சி பெரியார் முழக்கம் என்று மாற்றினார். இந்த இயக்கம் தலித்துகளின் மேம்பாட்டிற்காகவும் முஸ்லீம் சார்பு உரிமைகளுக்காகவும் போராடியது. பல தலித் இயக்கங்கள் பெரியார் தி. க. உடன் கைகோர்த்தன. இவர் சமூக நீதியை மீட்டெடுப்பதற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஆனார். பெரியார் தி. க. மரண தண்டனையை ஒழிப்பதற்கு பல்வேறு இயக்க அடிப்படை வேலைகளை செய்தது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம்[தொகு]

கொளத்தூர் மணியுடன் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய ஆதரவாளர்கள் அணியும், திருவாரூர் தங்கராசு தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு திராவிடர் கழகம் ஆகிய இரு இயக்கங்களும் ஒன்றிணைந்து, “தந்தை பெரியார் திராவிடர் கழகம்” என்ற பெயரில் செயல்படத் தொடங்கின. அவரது மாத இதழான புரட்சி பெரியார் முழக்கம் ஜனவரி 14, 2001 முதல் வார இதழாக வெளிவந்தது. ஆகஸ்ட் 11, 2001 அன்று சென்னையில் இணைப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பின்னர் பெரியார் திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் பெற்றது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.

திராவிடர் விடுதலைக் கழகம்[தொகு]

உறுப்பினர்களிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பெரியார் திராவிடர் கழகம் கலைக்கப்பட்டது. "பெரியார் திராவிடர் கழகம்" என்ற பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் கலைப்பு செய்யப்பட்டது. கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக 12 ஆகஸ்ட் 2012 முதல் செயல்படத் தொடங்கினார்.

பெரியாரியத்தின் பல்வேறு செயல்திட்டங்களை பிரச்சாரம் செய்வதே இயக்கத்தின் இறுதி இலக்கு. ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு, கம்யூனிசம், சுதந்திர தமிழ்நாடு, பெரியார் கனவு கண்ட ஜாதி, பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத கம்யூனிச சமுதாயத்தை வெளிக்கொணர வேண்டும்! “பிராமணர்களின் கலாச்சார ஒடுக்குமுறையையும், இந்திய தேசியவாதிகளின் அரசியல் ஆதிக்கத்தையும், பன்னாட்டு முதலாளிகளின் பொருளாதாரச் சுரண்டலையும் முறியடிப்போம்” என்பதுதான் இந்த இயக்கத்தின் முழக்கம்.

இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளராக இன்று வரை செயல்பட்டு வருகிறார்.

தற்போது வகிக்கும் பதவி[தொகு]

பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

நிறுவனர்- தலைமை ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் (வார இதழ்)

நிறுவனர்-ஆசிரியர், நிமிர்வோம் (மாத இதழ்)

படைப்புகள்[தொகு]

விடுதலை இராஜேந்திரனின் நூல்கள்:[7][8]

1.   10 சதவீத இடஒதுக்கீடு: சமூக நீதிக்கு சவக் குழி

2.   அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு

3.   அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி

4.   ஆர். எஸ். எஸ் ஒரு அபாயம்

5.   இந்திய அரசியலின் அதிசயம் விபி சிங்

6.   இந்தியா விலைபோகிறது

7.   இந்திரா ஆட்சியின் கொடுமைகள் – மிசா

8.   இராமன் எத்தனை இராமனடி

9.   இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?

10.  ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி

11.  உலக மயமாக்கம் : தமிழ்நாட்டு பெண்கள் மீதான தாக்கம்

12.  ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?

13.  ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்

14.  கச்சத் தீவு

15.  கல்வி வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்

16.  காந்தியை சாய்த்த கோட்சேயின் குண்டுகள்

17.  குடியுரிமைத் திருத்தச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம்?

18.  சங் பரிவாரின் சதி வரலாறு

19.  சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் IIT

20.  சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள்

21.  சேஷனின் பார்ப்பன சுயரூபம்

22.  சொர்க்கம் போக ரொக்கம் செல்லாது - நையாண்டி கட்டுரைகள் தொகுப்பு

23.  தமிழை இழிக்கும் வேத மரபு

24.  தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?

25.  திராவிடப் பெரியார் - யாருக்கு எதிரி

26.  திராவிடர் விடுதலைக் கழகத்தின் 20 ஆண்டுகளின் பணிகள்

27.  தேவ அசுரப் போராட்டம் முடியவில்லை - தலையங்க தொகுப்பு 4

28.  தோழர் விடுதலை இராசேந்திரன் சிற்றுரைகள்

29.  பகுத்தறிவும் வாழ்வுரிமையும் - தலையங்க தொகுப்பு 2

30.  பங்கு மார்க்கெட்டும் பார்ப்பனர்களும்

31.  பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம்

32.  பினாயக் சென்னுக்கு எதிரான சூழ்ச்சி வலை

33.  புத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி

34.  புராணங்களில் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்

35.  பெரியார் சந்தித்த அடக்குமுறைகள் – போராட்ட வரலாறுகளின் ஓர் தொகுப்பு

36.  பெரியாரியத்தின் வெற்றி - தலையங்க தொகுப்பு 1

37.  பொடா கொடூரமும் அத்துமீறல்களும்

38.  மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்கங்கள்

39.  மரண தண்டனையை ஒழிப்போம்

40.  மனுதர்மம் என்ற அதர்மம்

41.  மோடித்துவ முகமூடி

42.  யார் அன்னியர் யார் இவர்கள் ? ஆதாரங்களுடன்

43.  யார் தேச விரோதிகள்?

44.  ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்

45.  விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு

46.  வீரசவர்க்கார் புதைக்கப்பட்ட உண்மைகள்

47.  வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?

48.  ஜாதியும் ஜாதிப் பேரணியும்- தலையங்க தொகுப்பு 3

புகழ்[தொகு]

விடுதலை இராஜேந்திரனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் வழங்குவதாக தெரிவித்தது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "DVK Periyar திவிக" (in அமெரிக்க ஆங்கிலம்).
  2. கொளத்தூர் மணி தலைமையில் புதிய அமைப்பாக "திராவிடர் விடுதலைக் கழகம்" உதயமானது
  3. "Periyar Dravidar Kazhagam (PDK) splits into two parties". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2012-08-19 இம் மூலத்தில் இருந்து 2013-06-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602163000/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-19/coimbatore/33272337_1_kolathur-mani-pdk-periyar-dravidar-kazhagam. 
  4. "https://twitter.com/dvkperiyar/status/1474312372139397123?s=20&t=O3_eZ7IjxjObJ-tuYs_JRA". Twitter. பார்க்கப்பட்ட நாள் 2023-01-26. {{cite web}}: External link in |title= (help)
  5. Viduthalai Rajendran
  6. Periyarites see Veeramani doing an MK
  7. [1]
  8. https://www.commonfolks.in/books/viduthalai-rajendran
  9. "8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை". Dinamalar. 2022-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_இராஜேந்திரன்&oldid=3926766" இலிருந்து மீள்விக்கப்பட்டது