விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்/முதற் பக்க வடிவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரண்டத்தில் புவியின் அமைவிடம்[தொகு]


மானிடர்கள் 400 ஆண்டுகளாகவே புவியின் அமைவிடம் எங்குள்ளதென ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் இவ்வாராய்ச்சி எழுச்சி பெற்றதென கொள்ளலாம். முதலில் மானிடர்கள் புவியை மையமாக வைத்தே அண்டம் அமைந்திருந்ததென கருதினர். 17ஆம் நூற்றாண்டில் சூரியனே மையமென்ற கொள்கை வழுப்பெற்ற பிறகு புவி இவ்வண்டத்தில் மிகக்குறிய இடத்தையே ஆக்கிரமித்திருப்பது அறியப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நெபுலாக்கள் நன்கு ஆராயப்பட்ட பிறகு இவ்விரிவடையும் அண்டத்தில் புவி அமைந்துள்ள பால் வழி போல் 100 கோடிக்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது அறியப்பட்டது. மானிடரால் காட்சிக்குட்படுகிற பேரண்டத்தின் அளவு விரிவடைய விரிவடைய விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் என இவ்வண்டத்திலுள்ள தொகுப்புகள் வகைப்படுத்தப்பட்டன. அதன்படி ஒரு கிரகத்தையோ அல்லது விண்மீனின் அமைவிடத்தையோ கூற வானியலார் விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் போன்ற வரையறைகளை உருவாக்கினர்.

குமரிக்கண்டம்[தொகு]

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர். ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. குமரிக்கண்டத்தின் தலைநகரான தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் எதுவும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும்.மேலும்...