விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 23, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இழையம் அல்லது திசு என்பது, ஒரு உயிர்ச் செயலை புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் என அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது. இழையங்களை பாரபின் எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து, இலகுவாக பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி, பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. மேலும்....


மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார். இவரது தந்தையான மாணிக்கம், நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் ஒரு பிரிவின் மேலாளராக இருந்து, வட்டாட்சியராக உயர்ந்தவர். இவரது அன்னை தாயாரம்மாள். ஏழு பேர் பிறந்த குடும்பத்தில் இராசமாணிக்கனாரும் அவரின் அண்ணனான இராமகிருட்டிணன் என்பவருமே மிஞ்சினர். அரசுப் பணியாளரான தந்தையார் அலுவல் காரணமாகப் பல ஊர்களுக்கும் மாற்றப்பட்டதால் இராசமாணிக்கனாரின் கல்வியும் பல ஊர்களில் வளர்ந்தது. பல ஆண்டுகள் வரையில் தற்போதைய ஆந்திர மாநில கர்நூல், சித்தூர் முதலிய ஊர்களில் இருக்க நேரிட்டதால் நான்காம் வகுப்பு வரை தெலுங்கு மொழியே பயின்ற இவர், 1916 இல் தந்தையார் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிலக்கோட்டைக்கு மாற்றப்பட்ட பிறகே தமிழ் பயிலத் தொடங்கினார். 1921ல் திண்டுக்கல் தூயமேரி உயர்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவராக அவர் சேர்ந்த நிலையில் தமிழ்க்கல்வி தொடர்ந்தது. மேலும்......