விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 16, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழமையான இசைச் செல்வமாகும். சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும், இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்களும் எழுந்தன. இசையைத் தொழிலாக கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன. மேலும்...


சிங்கப்பூர் அல்லது அதிகாரபூர்வமாக சிங்கப்பூர் குடியரசு தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. ஆனாலும் நிலச்சிரமைப்பு மூலம் மேலதிக நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளும் 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகளும் இங்குள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். மேலும்...