விக்கிப்பீடியா:தோழமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)

தமிழ் விக்கிப்பீடியா மெய்நிகர் வெளியில் நிகழும் ஓர் கூட்டாக்கம். விக்கிப்பீடியா முறைகளைப் பேண வேண்டும் என்றால், தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் தழைக்க வேண்டும் என்றால், மெய்யுலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், அதிகார அடுக்குமுறைகள், பண்பாட்டு மனத்தடைகளை உணர்த்தும் கூறுகளை இங்கு தவிர்ப்பது நலம். இங்கு உள்ள ஒவ்வொரு பயனரையும் உற்ற தோழராக கருதிச் செயற்படுவதே தயங்காமல் கருத்துகளை எடுத்துரைக்கவும் துணிவுடன் கேள்விகளைக் கேட்கவும் உதவும். இதனைக் கருத்திற் கொண்டே தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதலே பயனர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உள்ளது. இது மேலை நாட்டு முறையைப் பின்பற்றிச் செய்வது அன்று. மாறாக, தோழமை மிக்க இயக்கங்களின் அணுகுமுறையைப் பின்பற்றிச் செய்வது. எனவே,

  • அவர்கள், திரு, திருமதி, அண்ணா, அக்கா, தம்பி, ஐயா, அம்மா, பேராசிரியர், மருத்துவர், சார், மேடம் போன்ற அடைமொழிகளைத் தவிருங்கள். பயனர்களின் பயனர் பெயர் அல்லது இயற்பெயரைச் சுட்டி அழையுங்கள்.
  • தங்களை விட வயதில் சிறியவரையும் பங்களிப்புகள் குறைந்தவரையும் நீ, உன் என ஒருமையில் விளிக்காதீர்கள்.

விக்கிப்பீடியாவுக்கு வெளியே விக்கிப்பீடியர்களுடன் உறவு கொண்டாடும் போது நமது பண்பாட்டுக்கு ஏற்ப அழைப்பதில் தவறில்லை. ஆனால், விக்கிப்பீடியாவுக்குள் தோழமை பாராட்டுவோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:தோழமை&oldid=1544357" இலிருந்து மீள்விக்கப்பட்டது