வாழைப்பழம் சூறைவிடும் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழைப்பழம் சூறைவிடும் விழா தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்ற திருவிழாவாகும்.

நிகழ்விடம்[தொகு]

இவ்விழா வத்தலகுண்டு-திண்டுக்கல் சாலையில், வத்தலகுண்டிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது.[1] இதனை வாழைப்பழத் திருவிழா என்றும் கூறுகின்றனர்.[2]

காரணம்[தொகு]

விவசாயம் செழிப்பதற்காகவும், வேண்டுதல் நிறைவேறும் பொருட்டும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.[1]

விழா நிகழ்வு[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் மூன்றாம் தேதி நடைபெறுகின்ற இவ்விழாவின்போது, வீடுகளில் வைத்து வழிபட்ட வாழைப்பழங்களை தாம்பாளத்தில் வைத்தும், கூடைகளில் ஏந்தியும் அவ்வூரைச் சேர்ந்த ஆண்கள் ஊரின் எல்லையில் அமைந்துள்ள ரெங்கம்மாள் கோயிலிலிருந்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சோலைமலை அழகர் பெருமாள் கோயிலுக்கு எடுத்து வருகின்றனர். அங்கு சிறப்பு பூசை செய்யப்பட்ட பின்னர் கோயிலின் மேற்புறத்திற்கு எடுத்துச் சென்று சூறை விடுகின்றனர். கீழே விழும் பழங்களை அங்கு வருவோர பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.[1]

பங்கேற்பு[தொகு]

சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வாழ்கின்ற, இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், பொங்கல் விழாவிற்குப் பின் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். [3]

வாடிப்பட்டி அய்யனார் கோயில்[தொகு]

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அய்யனார் கோயிலில் பல்லி உத்திரவின்படி ஒரு விழா கொண்டாடுகின்றனர். விழா நடைபெறுகின்ற புரட்டாசி மாதம் இரண்டாவது வெள்ளியின்போது சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக வாழைப்பழங்களை கூட்டத்தினர் மீது வீசுகின்றனர். அவ்விழாவினை வாழைப்பழத் திருவிழா என்றழைக்கின்றனர்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]