வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் குடமுழுக்குக்குப் பிறகான கோயிலின் முகப்புத் தோற்றம் (2020 செப்டம்பர் 28 )

அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் என்பது இலங்கையின், வன்னி நகரின் அண்மையில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

முடிக்குரியவர்களினால் அன்றைய காலகட்டத்தில் சைவக் கோயிலுக்காக இக்காணி வழங்கப்பட்டது. காணியின் பரப்பளவு 3ஏக்கர் 6 பேர்ச்சாக இருந்தது. தற்போது 2 ஏக்கர் 6 பேர்ச்சாக உள்ளது. இக் காணியில் 1956 ஆம் ஆண்டு அளவில் தற்போது வழிபட்டில் உள்ள விநாயகரை வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். இக் காணியில் சிவாலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நெடுங்காலமாகவே அவர்களுக்கு இருந்து வந்துள்ளது.

அதன்படி 1989 செப்டம்பர் 8 அன்று அதிகாலை 4.00 மணிக்கு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவரும், தீவுப்பகுதி உதவி அரசாங்க அதிபருமான திரு. ஆறுமுகம் தியாகராசா அவர்களால் இங்கு கோயில் பணி துவக்கபட்டது. கோயிலுக்கான மூல விக்கிரகங்களைத் தமிழ்நாட்டின் திருவரங்கம் திரு. பழனியப்பன் ஸ்தபதியாரும் உற்சவத் திருமேனிகளை தமிழ்நாட்டின், சுவாமி மலை தேவசேனாதிபதி ஸ்தாபதியும் வார்த்துத் தந்தார்கள்.

வவுனியா கோவிற்குளச் சைவ மக்களின் முயற்சியால் இச்சிவன் கோயில் சிவாலத்திற்குரிய அனைத்து அம்சங்களுடன் 15மில்லியன் ரூபா செலவில் புதிதாகக் கட்டப்பட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களைக் கொண்டு 1996 சனவரி 5 அன்று குடமுழுக்கு செய்யப் பெற்றது.

திருக்கேதீஸ்வரத்துக்கு அடுத்தபடியாக இலங்கையின் பெரிய சிவாலயமாகவும், விசாலமான கர்ப்பக்கிருகத்துடன் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயமாக இது விளங்குகிறது. யானையும் சிலந்தியும் சிவனை வழிபட்டு ஈடேற்றம் பெற்ற திருவானைக்காவைப் பின்பற்றி “ஈழத்துத் திருவானைக்கா” என்று சிறப்பித்துக் கூறுமளவிற்கு கோவில்குளம் சிவாலயம் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகிலாண்டேஸ்வரரின் கோயில் அமைந்துள்ளது.

கோயில் அமைவிடம்[தொகு]

இக்கோயிலானது வவுனியா மத்திய பேருந்து நிலையம், தொடருந்து நிலையம் ஆகிய இரண்டு பாதை வழியும் வந்திறங்கியவர்கள் அதிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் வீதியில் முதலாம் கட்டையை அடைந்தால் மூன்று பாதைகள் கொண்ட முச்சந்தி தென்படும். அதிலிருந்து பிரிந்து சென்றால் கோவில்குளம் கிராமத்தை அடையலாம். இக்கிராமத்தின் முகப்பிலே தென்படுகிறது இக் கோயில்.

கோயில் அமைப்பு[தொகு]

கோயில் முகப்பில் வழிப்பிள்ளையாராக சித்திவிநாயகர் காட்சியளிக்காறார். இவ்வாலயமே அங்கு வாழ்ந்த – வாழுகின்ற மக்களின் மனதைக் குடிகொண்டு பார்ப்போர் பரவசநிலையடையும் வண்ணம் அருள்பாலிக்கும் அருள்மிகு அகிலாண்டேஸவரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோயிலாக விளங்குகிறது.

வவுனியா கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் சிவன் கோயிலானது, காஞ்சிமடம் (கல்யாண மண்டபம்), அருளகம் சிறுவர் இல்லம், சிவன் முதியோர் இல்லம் என்னும் நிறுவனங்களைத் தன்னுடையதாக்கி பராமரித்து வருகிறது. கல்வி நோக்கிலும், சைவ சமய அறிவு வளர்ச்சி அபிவிருத்திப் பணியிலும், கல்விப் பணிகளிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டு வளர்ந்து வருகிறது.