வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலாங்கூர் மலேசியத் தீபகற்பத்தின் மேற்குக் கரையில் உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். இதற்கு 'டாருல் ஏசான்' அல்லது 'மனத்தூய்மையின் வாழ்விடம்' எனும் அரபுமொழியில் நன்மதிப்பு அடைமொழியும் உண்டு. இந்த மாநிலத்தின் வடக்கே பேராக் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்திற்கு தெற்கே நெகிரி செம்பிலான், மலாக்கா மாநிலங்கள் உள்ளன. கிழக்கே பகாங் மாநிலம் உள்ளது. ஆக தெற்கே ஜொகூர் மாநிலம் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் தான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம், மலேசியக் கூட்டரசு நிர்வாக மையமான புத்ராஜெயா போன்றவை இருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக ஷா ஆலாம் விளங்குகின்றது. மாநிலத்தின் அரச நகரம் கிள்ளான். மற்றொரு பெரிய புறநகர்ப் பகுதியாக பெட்டாலிங் ஜெயா இருக்கின்றது. பெட்டாலிங் ஜெயாவிற்கு 2006 ஜூன் 20-இல் மாநகர் தகுதி வழங்கப்பட்டது. சீனத் தளபதி செங் ஹோ 1400களில் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவர் தன்னுடைய பயணக் குறிப்புகளில் கிள்ளான் ஆறு, சிலாங்கூர் டாராட் எனும் சொற்களைப் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.