வருவாய் புலனாய்வு இயக்குநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
Common nameDRI
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1957
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyஇந்தியா
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
Primary governing bodyஇந்திய அரசு
Secondary governing bodyநிதி அமைச்சகம் (இந்தியா)
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்புது தில்லி, இந்தியா
துறை நிருவாகி
அமைச்சுமத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
இணையத்தளம்
https://dri.nic.in/

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Revenue Intelligence (DRI) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் கீழ் செயல்படும் ஒரு விசாரணை மற்றும் புலனாய்வு அமைப்பாகும். மேலும் இந்தியாவில் கடத்தலை தடுக்கும் தலைமை உளவு அமைப்பாகும். இவ்வமைப்பின் அதிகாரிகள் மறைமுக வரிகள் வாரியம் மற்றும் நிறுவனச் சட்டச் சேவைப் பணியிலிருந்து, அயல்பணி மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்

மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் மூத்த இந்திய வருவாய்ப் பணி அதிகாரி ஒருவர் வருவாய் புலனாய்வு தலைமை இயக்குநராக நியமிக்கப்படுவார். தலைமை இயக்குநரின் கீழ் மண்டல அளவில் புலனாய்வு அதிகாரிகள் செயல்படுவார்கள். துப்பாக்கிகள், தங்கம், போதைப் பொருட்கள், போலி இந்திய நாணயத் தாள்கள், பழங்காலப் பொருட்கள், வனவிலங்குகள் போன்ற சட்டவிரோத கடத்தலைத் தடுப்பதன் மூலம் இந்தியாவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பைப் பாதுகாக்க இப்புலனாய்வு முகமை செயல்படுகிறது. மேலும் கறுப்புப் பணப் பெருக்கம், வர்த்தகம் சார்ந்த பணமோசடி மற்றும் வணிக மோசடிகளைத் தடுக்கவும் இது செயல்படுகிறது.

பணிகள்[தொகு]

வருவாய் புலனாய்வு இயக்குநகரம் என்பது போதைப்பொருள், தங்கம், வைரம், எலக்ட்ரானிக்ஸ், வெளிநாட்டு கரன்சி மற்றும் போலி இந்திய நாணயம் உள்ளிட்ட பொருட்களை கடத்துவதை தடை செய்யும் முக்கிய உளவுத்துறை அமைப்பாகும். இதன் தலைமை இயக்குநர் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. தலைமை இயக்குநரின் கீழ் கூடுதல் தலைமை இயக்குநர்களின் தலைமையில் 12 மண்டலங்கள் செயல்படுகிறது. கூடுதல் தலைமை இயக்குநரின் கீழ் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், மூத்த புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட பிராந்திய அலகுகள், துணைப் பிராந்தியப் பிரிவுகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளாக வருவாய் புலனாய்வு அமைப்பு மேலும் பிரிக்கப்பட்டுள்ளது.

வெகுமதி கொள்கை[தொகு]

மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி, வருவாய் புலனாய்வு இயக்குநகரம், அரசாங்க நிலுவைத் தொகையைப் பறிமுதல் செய்வதற்கும் அல்லது திரும்பப் பெறுவதற்கும் வழிவகுக்கும் தகவல் கொடுப்பவர்களுக்கு வெகுமதிகளை வழங்குகிறது. தற்போதுள்ள கொள்கையின்படி, தகவல் தெரிவிப்பவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களின் நிகர விற்பனையில் 20% வரை வெகுமதிகளைப் பெற தகுதியுடையவர்கள்.

பதவிகள்[தொகு]

  • தலைமை இயக்குநர் (தலைமை ஆணையாளர்)
  • கூடுதல் தலைமை இயக்குநர் (ஆணையாளர்)
  • கூடுதல் இயக்குநர் (கூடுதல் ஆணையாளர்)
  • இணை இயக்குநர் (இணை ஆணையாளர்)
  • துணை இயக்குநர் (துணை ஆணையாளர்)
  • உதவி இயக்குநர் (உதவி ஆணையாளர்)
  • முதுநிலை புலனாய்வு அதிகாரி (சுங்கம் மற்றும் கலால் கண்காணிப்பாளர்/ மதிப்பிட்டாளர்)
  • புலனாய்வு அதிகாரி (ஆய்வாளர்/பரிசோதகர்/தடுப்பு அதிகாரி)
  • தரம் III & IV பணியாளர்கள் (அமைச்சுப் பணியாளர்கள் & காவலர்கள்)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]