வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடதிருமுல்லைவாயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
மாசிலாமணீசுவரர் கோயில், வடதிருமுல்லைவாயில்
புவியியல் ஆள்கூற்று:13°08′12″N 80°07′56″E / 13.136570°N 80.132290°E / 13.136570; 80.132290
பெயர்
பெயர்:வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருமுல்லைவாசல்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாசிலாமணீஸ்வரர் (பாசுபதேசுவரர், நிர்மலமணீசுவரர்)
தாயார்:கொடியிடை நாயகி (கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்)
தல விருட்சம்:முல்லை
தீர்த்தம்:கல்யாண தீர்த்தம்
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம்.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

தல வரலாறு[தொகு]

தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன், வாணன் என இருவர் இருந்தனர். அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள், வன்முறையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக்கொண்டு பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர். தொண்டை நாட்டைச்சேர்ந்த புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர்.

தலவரலாறு-அறிவிப்புப் பலகை

அவர்களின் அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்டி அடக்கி வைக்கும் நோக்கத்தோடு தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். திருமுல்லைவாயில் வந்த போது பொழுது சாந்துவிடவே அன்று இரவை அங்கேயே கழிக்க எண்ணி தங்கிவிட்டான். நடுநிசி வேளையில் வடகிழக்குத் திசையிலிருந்து மணிச்சத்தம் கேட்டது அது அருகில் உள்ள சிவன் கோவிலின் அர்த்தசாம பூசையின் மணி ஓசையாக இருக்கலாம் என அரசன் எண்ணினான். அது குரும்பர்களின் அரணிலிருந்து வந்தது என அமைச்சர்கள் சொல்ல பொழுது விடிந்ததும் தொண்டைமான் படையுடன் குரும்பர்களை அடக்க படையை உடன் நடத்திச் சென்றான்.[2]

தொண்டைமான் படையுடன் வருகிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குரும்பர்கள் படையைத் திரட்டிக்கொண்டு போர்செய்தனர். தொண்டைமானின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குரும்பர்கள் அரணுக்குள் ஒளிந்துகொண்டனர். குரும்பர்களின் தெய்வமான வைரவனின் வரத்தால் பெற்ற பூதத்தின் உதவியால் தொண்டைமானின் படைகளை விரட்டி அடித்தனர், இனிமேல் போர் செய்ய இயலாது என்று எண்ணிய தொண்டைமான் பொரை நிறுத்திவிட்டு பாசறைக்குத் திரும்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பிண்ணி பிணைந்தன, யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன, அந்த இடத்திலிருந்து குருதி (இரத்தம்) பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான், தரையில் விழுந்து புரண்டான், வியர்த்துப் போனான், கண்ணில் நீர் பெருகியது. தனது உடைவாளை எடுத்து தனது கழுத்தில் வைத்து அருத்துக்கொள்ளும் சமயம் இறைவன் தோன்றி "மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக (குறையில்லா மணியாக) இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக" எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்று பின் அவர்களின் அரண்களில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயிலில் இறைவனுக்கு திருக்கோவிலைக் கட்டிவித்தான். இன்றும் அந்த வெள்ளருக்கந் தூண்கள் மாசிலாமணீசுவரர் கருவறையின் வாயிலில் உள்ளது.[2]

சுந்தரமூர்த்தி நாயனார்[தொகு]

திருமுல்லைவாயில் மாசிலா மணீசுவர பெருமானின் திருமேனியைக் கண்டு பெருமானுக்கு திருக்கோவில் அமைத்து கருவறை, மகாமண்டபம், பட்டி மண்டபம், அலங்கார மண்டபம், கலியாண மண்டபம் முதலியவற்றை அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்ரவர்த்தி. இதனை சுந்தரமூர்த்தி நாயனார்

-சுந்தரர் வட திருமுல்லைவாயில் திருப்பதிகம்

பெரிய புராணத்தில்[தொகு]

வட திருமுல்லைவாயில் பற்றி பெரியபுராணச் செய்யுள்,

அங்கு நாதர் செய்யருள் அதுவாக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய

பதினாறுகால் மண்டபம்

கல்வெட்டு[தொகு]

மாசிலாமணீசுவர பெருமானின் கருவறையைச் சுற்றிலும் 23 கல் வெட்டுகள் உள்ளது.

வரலாறு கூறும் கல்வெட்டுகள்[தொகு]

கோயிலின் பிரதான நுழைவாயில்
கிழக்கு வாயிலின் அருகில் அமைந்துள்ள கோயிலின் கொடிமரம்
நுழைவாயிலின் பக்கவாட்டுத் தோற்றம்
கோயிலின் கிழக்கு வாயில்
"மானச புஷ்கரணி" எனப்படும் கோயிலின் புண்ணியக் குளம்
    • கல்வெட்டு எண் : 196
  1. கல்வெட்டு உள்ள இடம் : கொடியிடை நாயகி அம்மன் முன்னுள்ள மண்டபத்தின் தரையில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : கோப்பார்த்திபேதிரனின் ஆட்சி காலம்-பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு
  3. கல் வெட்டின் கருத்து:ஆவூர் கூற்றத்து விளத்தூர் கிழவன் சிங்கள வீரநாரணன் ஒரு நந்தா விளக்கு ஏற்றுவதற்குகொடுத்த ஆடுகள்-90
    • கல்வெட்டு எண் : 720
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலம்-பொ.ஊ. 1201-1202.
  3. கல் வெட்டின் கருத்து:பஞ்செட்டியில் தேவதானம் வழங்கியதைக் குறிக்கின்றது.(கல்வெட்டு முடிவு பெறவில்லை)
    • கல்வெட்டு எண் : 721
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :இரண்டாம் ஹரிஹரன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1403.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார் நாயனாருக்கு ஏழாவது நாள் விழாவான திரு ஊடல் திருவிழாவிற்கு அம்பத்தூரைச் சேர்ந்த செய்ய நாராயண தேவன் நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது.(கல்வெட்டு முடிவு பெறவில்லை)
    • கல்வெட்டு எண் : 722
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :இரண்டாம் தேவராயர் ஆட்சி காலம்-பொ.ஊ. 1424
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு ஒற்றி மன்னன் என்னும் உடையார் ஒற்றி அரசரும், அரசு பெருமாள் என்னும் காடவராயரும் 4000 குழி நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 723
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1265-1266.
  3. கல் வெட்டின் கருத்து:புழற்கோட்டத்து நாட்டவரும், ஈக்காட்டு நாட்டவரும் திருமுல்லைவாயில் உடையாருக்கு வரிகளின் வருவாயை வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 724
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலம்-பொ.ஊ. 1198-1199.
  3. கல் வெட்டின் கருத்து:இரண்டு நந்தா விளக்குகளை எரிப்பதற்காக கோயம்பேட்டைச் சேர்ந்த சிவபூதன் வானவர் நாயகன் 24 புசபலபுது மாடைகளை (புழற்கோட்டத்து நாணயம்) வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 725
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :இரண்டாம் புக்கராயர் ஆட்சி காலம்-பொ.ஊ. 1406 (26-01-1406).
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்குத் திருபள்ளி எழுச்சி வழிபாட்டுக்காக அய்யலுப்ப கடையார் 800 குழி நிலம் வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 726
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் மேற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :பரகேசரி வர்மன் உத்தம சோழதேவர் ஆட்சி காலம்-பொ.ஊ. 985.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு அம்பத்தூர் மகாசபையோரிடமிருந்து 9300 குழி நிலத்தை மழவராயர் மகளும், கண்டராதித்தரின் பட்டத்து அரசியார் பிராட்டியார் செம்பியன் மாதேவியார் வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 727
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் மேற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1268-1269.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு பூசைக்கும், திருப்பணிக்கும் புழற்கோட்டத்து மக்கள் 148 மாடைகள் (புழற்கோட்டத்து நாணயம்) வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 728
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் மேற்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :இரண்டாம் ஹரிஹரன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1400.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு நற்பாக்கிழான் கோற்றளப்பான் சூரியதேவன் என்பவர் 200 எடை கொண்ட தட்டுமுட்டுகளை வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 729
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :மூன்றாம் இராச இராச்சோழருக்குப் பண்ணைக்குடி உரிமை பெற்ற மதுராந்தக பொத்தப்பிச் சோழர் ஆட்சி காலம்-பொ.ஊ. 1251-1252.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு திருப்பணிக்கு வரிவிலக்கும் வரிகள் வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 730
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலம்-பொ.ஊ. 1216-1217.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு புஞ்சை நிலம் 113 வேலி, நஞ்சை நிலம் 72 3/4 வேலி நிலங்கள் இறையிலியாக வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 731
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் :மூன்றாம் இராசிராச சோழனின் ஆட்சி காலம்-பொ.ஊ. 1231-1232.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு கோழிப்பதாகை மகா சபையோர் நிலம் விற்று வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 732
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் வடக்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : இரண்டாம் ஹரிஹரன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1388.
  3. கல் வெட்டின் கருத்து:திருமுல்லைவாயில் உடையார்க்கு அம்பத்தூர்வாசிகள் 400 குழி நிலங்களை திருத்தோப்பில் சுவாமிகளை ஏளப்பண்ணவும், படவேட்டைத் திருநாளுக்கும் வழங்கியதைக் குறிக்கின்றது.
    • கல்வெட்டு எண் : 733
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறைக்கு எதிரிலுள்ள மண்டபத்தின் தரையில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : பார்த்திபேந்திர வர்மன் ஆட்சி காலம்-பொ.ஊ. 985 முன்பு.
  3. கல் வெட்டின் கருத்து: கல்வெட்டு முடிவு பெறவில்லை
    • கல்வெட்டு எண் : 734
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறை மண்டபத்தின் தூணில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழ சக்ரவர்த்தியின் ஆட்சி காலம்-பொ.ஊ. 1014-1015.
  3. கல் வெட்டின் கருத்து: இசக்கன் அறிவாளன் மண்டபத்தைக் கட்டியதைப்பற்றிக் கூறுகின்றது.
    • கல்வெட்டு எண் : 735
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் இரண்டாவது தூணில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : முதலாம் இராச இராசசோழன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1018-1019.
  3. கல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு அம்பத்தூர் சபையினர் ஒரு நந்தா விளக்கை எரிப்பதற்கு வில்லிபாக்கம் வெள்ளானுக்கு 4000 குழி நிலம் விற்றதை கூறுகின்றது. (கல்வெட்டு சிதைந்து சொற்கள் அங்கங்கே அழிந்துள்ளது.
    • கல்வெட்டு எண் : 736
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையிலுள்ள மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : இரண்டாம் தேவராயர் ஆட்சி காலம்-இல்லை
  3. கல் வெட்டின் கருத்து: வரிப்பணத்தைக் கோவிலுக்கு வழங்கும் அரசு ஆணை பற்றி கூறுகின்றது.
    • கல்வெட்டு எண் : 737
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையிலுள்ள மண்டபத்தின் நுழைவாயிலில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : மல்லிகார்சுன ஆட்சி காலம்-பொ.ஊ. 1452.
  3. கல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் கொடியிடை நாயகியின் திருப்பூர விழாவிற்கு அமுதுபடி முதலியவற்றுக்கு கோழிப்பதாகை சபையினர் நிலம் அளித்ததை கூறுகின்றது.
    • கல்வெட்டு எண் : 738
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் திருக்கோவிலின் முதல் சுற்று கிழக்குச் சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1014-1015.
  3. கல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு, நந்தா விளக்கை எரிப்பதற்கு, நாகன் வெள்ளியென் என்பவர் திருமுல்லைவாயிலைச் சேர்ந்த இடையன் சம்பியானிடம் 90 ஆடுகளை கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.
    • கல்வெட்டு எண் : 739
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் திருக்கோவிலின் முதல் சுற்று சுவற்றில் தூணில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1015-1016.
  3. கல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயிலில் உள்ள பாசுபத தேவருக்கும், அசுத்ர தேவருக்கும் பொன், மாணிக்கம், வைரம், மரகதம், இரத்தினம், முத்து, அமுதுக்கான அரிசி ஆகியவை கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.(இக்கல்வெட்டு இடையில் நின்று போனதால் கொடுத்தவர் பெயர் இல்லை)
    • கல்வெட்டு எண் : 741
  1. கல்வெட்டு உள்ள இடம் :கொடியிடை நாயகி கருவறையின் எதிரிலுள்ள மண்டபத்தின் தெற்கு வாயிலிலுள்ள தூணில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சி காலம்-பொ.ஊ. 1014-1015.
  3. கல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு 1200 குழி நிலத்தை அச்சரப்பாக்கத்துத் திருநல்லூழான் இசக்கன் அறிவாளன் என்பவர் கொடுத்தது பற்றிக் கூறுகின்றது.
    • கல்வெட்டு எண் : 719
  1. கல்வெட்டு உள்ள இடம் :மாசிலாமணீசுவரர் கருவறையின் தெற்கு சுவற்றில் உள்ளது.
  2. கல்வெட்டின் காலம் : மூன்றாம் இராச இராச்சோழருக்குப் பண்ணைக்குடி உரிமை பெற்ற மதுராந்தக பொத்தப்பிச் சோழர் காலம்-பொ.ஊ. 1251-1252
  3. கல் வெட்டின் கருத்து: திருமுல்லைவாயில் உடையார்க்கு சித்திரைத் திருநாள் விழாவிற்கும், அந்தி அமுதுக்கும் திருமுல்லைவாயில் கிராமத்து வரிகள் எல்லாவற்றையும் நீக்கியது பற்றிக் கூறுகின்றது.

இவற்றையும் பார்க்க[தொகு]

சான்றாவணம்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. 2.0 2.1 வடதிருமுல்லைவயில் தலபுராணம்-தொண்டமான் சக்ரவர்த்தி பதிப்பகம்-சென்னை-53, பதிப்பாண்டு-சூலை-1994

வெளி இணைப்புகள்[தொகு]