ராணி (திரைப்படம்)
ராணி | |
---|---|
![]() 1952 ராணி திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் (ஜுபிடர் பிக்சர்ஸ்) |
இசை | சி. ஆர். சுப்புராமன் பி. சி. தத் |
நடிப்பு | எஸ். பாலச்சந்தர் ராஜகவாப் எஸ். வி. சுப்பைய்யா எம். கே. முஸ்தபா பி. பானுமதி அங்கமுத்து எம். சரோஜா சச்சு |
வெளியீடு | ஏப்ரல் 26, 1952 |
நீளம் | 16689 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், ராஜகவாப் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]மங்களபுரி அரசன் புதல்வி "ரஞ்சனி" யிடம் பாசத்தால் கட்டுண்டவன். அன்று ரஞ்சனிக்கு அரசாங்க முத்திரை பொறிக்கும் நாள். பரம்பரை வழக்கம் அது. சிறுமி வேதனையை மறக்க எத்தனையோ களியாட்டங்கள். இனிது முடிந்தது விழா.
இரவு–பணிப் பெண்கள் தாலாட்ட, அரசன் தொட்டிலாட்ட கண் அயர்ந்தாள். ரஞ்சனி. முத்திரை பொறிக்கும் கூட்டத்தில் ஒருவன் பீமன். பயங்கரமான மனித மிருகம். அவன் கண் ரஞ்சனி மீது விழுந்தது. நடு நிசி, இளவரசியை கவர்ந்து சென்றான் தன் மனைவி பாலாவின் உதவியுடன்.
தன் பிறவியைப்பற்றி உண்மையறியாமல் இளவரசி "ராணி" யாக பல வருடங்கள் பீமனிடம் வளர்ந்தாள். அடுத்த நாட்டிலே அற்புத அழகியாய் வாலிபர்களின் உள்ளங்களிலே ஓர் பொற்பதுமை போல.
புத்திர வாஞ்சை. அரசனின் புத்தி பேதலித்தது. நாட்டிலுள்ள யுவதிகளை ஒருவர் பின் ஒருவராக ஒரு நாள் "ராணி" யாக்கி, மறுநாள் தூக்கிலிடுவதை வழக்கமாகக் கொண்டான்.
ராணி வளர்ந்த நாட்டிலே தளபதி கர்னாசிங்கிடம் போர் பயிற்சி பெற வந்தவன் விஜயன். ராணியைச் சந்தித்தான். அவள் நாடோடிப் பெண் என அறிந்தான். ஆனாலும் அவன் உள்ளத்திலே இடம் பெற்றாள். அவள் தெருவிலே வியாபாரம் செய்து கிடைக்கும் பணத்தால் தன் கூட்டத்தினரைக் காப்பாற்றுவது வழக்கம்.
அன்று தளபதி வீட்டின் முன் வியாபாரம் நடந்தது. கூட்டம் கூடியது. அங்கு சத்தம் போடக் கூடாதென்பது தளபதியின் வேலைக்காரி அங்காவின் கட்டளை. மீறினாள் ராணி. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை மூண்டது. முடிவில் ராணி சிப்பாய் விஜயனால் அதிகாரியிடம் கொண்டு செல்லப்படும் போது தப்பிச் சென்றாள். கடமை தவறிய குற்றத்திற்கு விஜயன் தண்டிக்கப்பட்டான்.
தன் சாகசத்தால் தளபதியை ஏமாற்றி நடனத்தால் சேனாதிபதியை மயக்கி தன் காதலனை விடுவித்தாள் ராணி. ராணியின் போக்கிலே வெறுப்புற்றான் பீமன்.
தான் ஒரு நாடோடிப் பெண்னால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபங் கொண்ட தளபதி அவளைக் கைது செய்ய நடோடி வட்டாரத்தினுள் புகுந்தான். அங்கே விஜயனும் – ராணியும். தளபதி அவளைக் கைது செய்ய முயன்றபோது விஜயனுக்கும் தளபதிக்கும் சண்டை மூண்டது. சமயம் பார்த்து விஜயனை ஒழிக்க எண்ணிய பீமனால் கொலை செய்யப்பட்டான் தளபதி. அதோடு அக் குற்றத்தையும் விஜயன் மீது சுமத்தினான் – பாலா பதறினாள்–அவளை அடக்கினான் பீமன். தப்பிச் சென்றனர் விஜயன், ராணி. அவள் தோழி சொக்கம்மா மூவரும். விஜயனைக் கண்டுபிடிப்பவர்கட்கு 5000-ம் வெள்ளி நாணயங்கள் வெகுமதி யளிப்பதாக அறிவிக்கப்பட்டது. சிப்பாய்கள் தேடி அலைந்தனர். பீமன் முயற்சியால் கண்டு பிடிக்கப்பட்டான் விஜயன். அவனுக்கும் சிப்பாய்களுக்கும் சண்டை மூண்டது. முடிவில் வீரர்கள் துரத்தப்பட்டு தன் இடத்திற்கு வந்தான் விஜயன். அங்கு பீமனை ஏமாற்ற ராணி கூறிய வார்த்தைகளைக் கேட்டு ராணியின் மீது தப்பு அபிப்பிராயங் கொண்டு அவளை அடித்துத் துரத்தினான். தப்பியோடிய சிப்பாய்களுடன் திரும்பி வந்த பீமனால் விஜயன் பிடித்துச் செல்லப்பட்டு நடுத்தெருவில் கட்டி வைக்கப்பட்டான். விஜயன் மீது ஏற்பட்ட கோபத்திலே ராணி மங்களபுரி எல்லை வரை சென்றாள். அந்த அரசாங்க சிப்பாய்கள் அவளை "ஒரு நாள் ராணி"யாகும்படி வருந்தியழைத்தார்கள். அவளுக்கு விஜயனைப் பற்றிய நினைவு வர, எங்கே அவன் தேடித் திரியும் சிப்பாய்களிடம் அகப்பட்டு விடுவானோ என்கிற பயத்தில் அவனைக் காப்பாற்ற ஒடி வந்தாள். தன் இடம் சேர்ந்ததும் விஜயனின் கதியை சொக்கம்மாள் சொல்லக் கேட்டாள். மனந்துடித்தாள். அவனைக் காப்பாற்ற தன் கூட்டத்தின் உதவியை நாடினாள். விஜயனின் தொடர்பால் தங்களை விட்டுப் பிரிந்து சென்ற அவள் மீது ஆத்திரங் கொண்டு கூட்டத்தார் அடித்தனர். துடித்தாள் ராணி. பீமன் அவளைக் காப்பாற்றி தன் மிருக இச்சைக்கு பலியாக்க முயன்றான் குறுக்கிட்டாள் பாலா. அவளை கொலை செய்தான் பீமன். மறைந்து நின்ற ராணி அவளைக் காப்பாற்ற முயன்றாள். இறக்கும் தருவாயில் தளபதியின் கொலை ரகசியத்தை அவளிடம் வெளியிட்டாள். விஜயன் நிரபராதி என அறிந்த ராணி சேனாதிபதியிடம் ஓடினாள். அவர் சாட்சியம் கேட்டார். ஒரே சாட்சியான பாலா இறந்து விட்டாள். தனக்காக, தன் காதலன் தூக்கிலே தொங்கப் போகிறான், தான் வாழ்வதற்கு எதற்கு? யாருக்காக? சிந்தித்தாள் . . . மங்களபுரியின் "ஒரு நாள் ராணி" பதவி அவள் நினைவுக்கு வந்தது. ஓடினாள். ஒரு நாள் ராணி மறுநாள் தூக்கிலிடப்படுவாள் என அறிந்தாள். என்றாலும், தன் காதலனுக்காகத் தன்னைத் தியாகம் செய்து ராணியானாள்.
அவள் உத்திரவுப்படி, பீமனும், விஜயனும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். விஜயனை மீட்டுச் செல்ல வந்த அடுத்த நாட்டு அதிகாரிகளின் முன்னிலையில், அவள் சாகசத்தில் மயங்கிய பீமன் தன் பெருமையை வெளியிடுவதாக எண்ணி கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டான். விஜே விடுதலை, செய்யப்பட்டான். இவ்வளவும் தன்னைக் காப்பாற்றுவதற்காகவே என்பதை அறியாத விஜயன் ராணியின் நடத்தையில் சந்தேகித்து அவளை விஷம் போல வெறுத்தான். அதே சிறைக்குக் கொண்டு வரப்பட்ட பீமனால் ராணியின் உயிரைக் காப்பாற்றும் ரகசியம் ஒன்று இருப்பதாக விஜே அறிந்தான். எனினும் அவளைப்பற்றி அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? 'ராணியின் பதவிக்காலம் முடிந்தது. தூக்குக் கயிற்று வட்டம் அவள் கழுத்தை இறுக்கத் தயாராய் இருந்தது. எங்கும் ஒரே கூட்டம். அதில் விஜயனும் ஒருவன். தன்னை வஞ்சித்த அவள் உயிர் பிரிவதை பார்க்கும் ஆனந்தத் திலே அவன்.......
தன் தோழியைக் காப்பாற்ற வழியறியாது துடித்த சொக்கம்மாள் விஜயனைப் பார்த்து அவனிடம் ஓடி வந்தாள். அவள் மூலம் உண்மையை அறிந்த அவன் பீமனிடம் இருக்கும் ரகசியத்தை அறிவதற்கு ஓடினான். அவனைச் சந்தித்தான். இருவருக்கும் பலத்த சண்டை மூண்டது.
ராணியின் கழுத்திலே தூக்குக் கயிறு. விஜயனின் கழுத்தை நோக்கி பீமனின் கட்டாரி. பின்னர் நடந்ததென்ன என்பது மீதிக்கதை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (20 மே 2010). "Rani (1952)". தி இந்து. Archived from the original on 14 ஏப்ரல் 2021. Retrieved 3 மார்ச் 2023.