ராட்டர்டாம் சண்டை

ஆள்கூறுகள்: 51°55′51″N 4°28′45″E / 51.93083°N 4.47917°E / 51.93083; 4.47917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராட்டர்டாம் சண்டை
நெதர்லாந்து சண்டையின் பகுதி

ஜெர்மானிய குண்டுவீச்சில் ராட்டர்டாம் அருகிலுள்ளா வால்ஹாவென் விமானத்தளம் பற்றி எரிகிறது
நாள் மே 10–14, 1940
இடம் ராட்டர்டாம், நெதர்லாந்து
51°55′51″N 4°28′45″E / 51.93083°N 4.47917°E / 51.93083; 4.47917
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
நெதர்லாந்து நெதர்லாந்து நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
நெதர்லாந்து பி. டபிள்யூ. ஷாரூ நாட்சி ஜெர்மனி கர்ட் ஸ்டூடண்ட்
பலம்
7,000 பேர்
12 பீரங்கிகள்
1,000 பேர்
இழப்புகள்
185 (மாண்டவர்) [1] 123 (மாண்டவர்)[1][2]

ராட்டர்டாம் சண்டை (Battle of Rotterdam) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் ராட்டர்டாம் நகரைத் தாக்கிக் கைப்பற்றின.

மே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. ராட்டர்டாம் நகர் நெதர்லாந்தின் எல்லையிலிருந்து சற்று தொலைவிலிருந்ததால் அதில் பலமான பாதுகாவல் படைகள் நிறுத்தப்படவில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு வான்குடை வீரரகளை மிதவை ஊர்திகளின் மூலமாக ராட்டர்டாம் நகரில் தரையிறக்கி அதைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டனர் ஜெர்மானிய தளபதிகள். மே 10ம் தேதி ஜெர்மானிய வீரர்கள் ராட்டர்டாம் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தரையிறங்கத் தொடங்கினர். ராட்டர்டாமின் பாதுகாவல் படைகள் இதை எதிர்பார்க்காததால் பெரிய எதிர்வினை ஒன்றும் ஆற்றவில்லை. அடுத்த நான்கு நாட்களுக்கு இரு தரப்புக்கும் நடையே நடந்த சண்டையில் யாருக்கும் வெற்றி கிட்டவில்லை. நகரின் மத்தியில் ஓடிய மியூசே ஆற்றின் வடகரை நெதர்லாந்து படைகளின் வசமும் தென்கரை ஜெர்மானியர் வசமும் இருந்தன. ஜெர்மானியப் படைகளால் ஆற்றைகடந்து நகரைக் கைப்பற்ற முடியவில்லை. நெதர்லாந்தின் மற்ற பகுதிகளில் ஜெர்மானிய ராணுவம் வேகமாக முன்னேறி வந்ததால் ராட்டர்டாம் நகரம் விரைவில் சரணடைந்து விடுமென்று ஜெர்மானிய போர்த் தலைமையகம் நினைத்தது. ஆனால் நெதர்லாந்துப் படைகள் அவ்வாறுச் சரணடையாமல் இழுத்தடித்தன. இரு தரப்புக்குக்கும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபேயின் தளபதி ஹெர்மன் கோரிங் ராட்டர்டாம் நகரின் மீது குண்டுவீசுமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்ட்டர்.

நகரில் பெரும் நாசத்தை ஏற்படுத்தினால், ராட்டர்டாம் அதிகாரிகள் பயந்து சரணடைந்து விடுவார்கள் என்று அவர் எண்ணினார். லுஃப்ட்வாஃபே குண்டு வீசிகள் ராட்டர்டாம் நகரை அடையும் முன்னரே ராட்டர்டாமின் ஆட்சியாளர்கள் சரணடைய ஒத்துக்கொண்டனர். ஆனால் இந்த செய்தி குண்டு வீசிகளுக்கு வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டு அவைகளைத் திருப்பி அழைக்குமுன் அவற்றுள் ஒரு பகுதி, ராட்டர்டாம் நகரை அடைந்து குண்டுகளை வீசியது. மொத்தம் 1150, ஐம்பது கிலோ குண்டுகளும் 158 இருநூற்று ஐம்பது கிலோ குண்டுகளும் வீசப்பட்டன. இந்த குண்டுகளால் நகரில் பெருந்தீ மூண்டு சுமார் 25,000 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாயின. 2.6 சதுர கி.மீ பரப்பளவுள்ள பகுதி முற்றிலும் நாசமானது. சுமார் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு ராட்டர்டாம் பிளிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ராட்டர்டாம் நகரம் ஏற்கனவே சரணடைந்துவிட்டதால் இந்த குண்டுவீச்சு தேவையற்ற ஒன்றாகிப் போனது.


அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Dutch History Site
  2. The exact number of German casualties in Rotterdam is unknown, due to the listing for KIA in Rotterdam and Waalhaven being combined at 123.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்டர்டாம்_சண்டை&oldid=1357518" இலிருந்து மீள்விக்கப்பட்டது