ராஜயோகம் (திரைப்படம்)
| ராஜ யோகம் | |
|---|---|
திரைப்படப் பாடல் நூலட்டைப் படம் | |
| இயக்கம் | பி. சம்பத் குமார் |
| தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் |
| கதை | நளன் (வசனம்) |
| இசை | எஸ். வேல்சாமி |
| நடிப்பு | டி. கே. சம்பங்கி எம். நடராஜன் எம். எஸ். முத்துகிருஷ்ணன் கே. கோகிலா டி. எஸ். கிருஷ்ணவேணி யு. ஆர். ஜீவரத்னம் |
| வெளியீடு | செப்டம்பர் 21, 1940 |
| நீளம் | 16500 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜ யோகம் 21. 09 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சமங்கி, எம். நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். வேலுசாமி இசையமைத்திருந்தார்.
கதைச் சுருக்கம்
[தொகு]பல்லவநாட்டை சேரன் முற்றுகைபோட்டு குடிமக்களை திண்டாடவைக்கும் காலம். நாடோடி முத்துப்புலவனைத் தலைவனாகக்கொண்ட சமதர்மக் கூட்டத்தார் நாட்டின் அரண்மனையை பகல்கொள்ளையடிக்கிறார்கள். சிப்பாய்கள் துறத்த, தப்பியோடிய முத்துப்புலவன் ஒரு கோவிலில் நுழைகிறான். அங்கு நாட்டின் நன்மையைக்கோரி அம்பிகையை வேண்டி நிற்கும் (ராணியின் உறவினள்) தேவசேனையைக்கண்டு காதல் கொண்டு, தன் உள்ளக் கருத்தை ஒரு கவியாக எழுதி அவளிடம் கொடுத்து மறைகிறான்.
சமதர்மக் கூட்டத்தார் மூலைச்சாவடி சாராயக் கடையில் ஒன்று கூடுவார்கள் என்பதை ஒரு உளவாளிமூலம் அறிந்த பல்லவராயன், உளவை நேரில் தெரிந்துகொள்வதற்காகத் தனது மந்திரி பூர்ணையனுடன் மாறுவேடத்தில் சாராயக் கடைக்கு வந்து நடப்பதை கவனிக்கிறார்கள். அது சமயம் முத்துப்புலவன் வந்து குடித்துவிட்டு, தான் காதல் தேவிக்கு அடிமையானதைக் கூறுகிறான். இதைக் கேட்டதும் புலவனை உயிராகக் காதலிக்கும் தங்கம் கோபிக்கிறாள். பிறகு மாறுவேடத்தில் வந்துள்ள அரசனுக்கும், முத்துப்புலவனுக்கும் சிறிது வாக்கு வாதம் ஏற்படுகிறது. அதுசமயம் புலவன் "நான்மட்டும் அரசனானால், பல்லவ நாட்டை செல்வ ஈடாக்குவேன்" என்கிறான். இதைக்கேட்ட மன்னன்–தனது கனவையும் ஞாபகப்படுத்திக்கொண்டு சிறிதுயோசனை யிலிருக்கிறான். அப்பொழுது தேவசேனை மாறுவேடத்தில் அங்கு வந்து முத்துப்புலவனை சந்தித்து, சேரனுக்கு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் பல்லவ சேனாதிபதி கபந்தனை கொன்றுவிடும்படி கேட்டுக்கொள்ளுகிறாள். கபந்தனும் அது சமயம் அங்குவர, முத்துப்புலவன் அவனை எதிர்த்துச் சண்டையிட்டு படுகாயப்படுத்துகிறான். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த மன்னன் தன் சுய உருவத்தைக்காட்டி எல்லோரையும் கைதுசெய்து சிறைப்படுத்துகிறான்.
கைதியாக இருக்கும் புலவனுக்கு "ராஜயோகம்" இருப்பதாக ஜோதிடன்மூலம் தெரிந்துகொண்ட பல்லவராயன்- தன் எண்ணத்தை நிறைவேற்றும் முறையில், புலவனுக்கு - வீரசேனன் என்ற மாற்றுப் பெயரிட்டு, ஒரு வாரத்திற்கு சர்வாதிகாரம் கொடுக்கிறான். எட்டாம் நாள் அவனை தூக்கிலிடுவதாகவும் கூறுகிறான். புலவன் திகைக்கிறான். ஆனால், இந்த ஒரு வாரத்தில் தேவசேனையின் காதலைப் பெற்றுவிட்டால் - மன்னித்து தேசப்ரஷ்டம் செய்துவிடுவதாக ஒரு சலுகை காட்டுகிறான். ஒப்புக்கொண்ட புலவன் அன்று முதல் சர்வாதிகாரம் செலுத்தி - நாட்டிற்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்து வருகிறான்.
தலைவனை இழந்த தங்கமும்- அவளின் கோஷ்டியாரும் விடுதலைசெய்யப்பட்டு, தங்களின் தொழிலை தொடர்ந்து நடத்த வழியில்லாமல் இருக்கும் சமயம் ராஜாங்க உத்தியோகஸ்தனான முகுந்தன் அவளை காதலிக்கிறான். அவனிடம் கள்ளக் காதல் காட்டி பணம் பறிக்க நினைத்த தங்கம் சாகஸமாக அவனை பலமுறை ஏமாற்றிவருகிறாள். சிறையிலிருந்து தப்பியோடிய சேனாதிபதி கபந்தன் சேரனுடன் சதியாலோசனை செய்து-பல்லவ மன்னனை ஏமாற்றித் தூக்கிச்செல்ல முடி வுசெய்து, அதற்கு உதவிசெய்யும் படி தங்கத்தை தனது உளவாளிமூலம் வேண்ட, அவள் முகுந்தனைக்கொண்டு காரியத்தை சாதிக்கலாமென்ற முடிவில் ஒப்புக்கொண்டு, அதற்குவேண்டிய ஏற்பாடுகளைச்செய்கிறாள்.
ஏழாம் நாள் இரவு - வீரசேனனாகிய முத்துப்புலவன் சேரனிடம் போரிடப் புறப்படும் சம்பவம். அரண்மனைத் தோட்டத்தில் கொண்டாட்டம். இந்த வைபவத்தில் - அரசனை தூக்கிப்போவதென்ற முடிவில் தங்கத்தின் முன்னேற்பாட்டுடன் ஜோதிடன் வேஷத்தில் வந்திருக்கும் கபந்தனும், மற்றும் பல மாறுவேடத்தில் வந்திருக்கும் தங்கம் கோஷ்டியாரும், அரசன் வரவை எதிர்பார்த்துநிற்கிறார்கள். அது சமயம் வீரசேனன் தங்கத்தை சந்தித்து உண்மையைத் தெரிந்துகொண்டு அரசன்போல் மாறுவேடமிட்டுவந்து வழிமறித்த கபந்தனிடம் போரிடும்போது, கபந்தன் ஒரு கத்தியை வீரசேனன்மீது வீசுகிறான். அதைத் தடுக்கும்முறையில் தங்கம் குறுக்கிட, கத்தி பாய்ந்து தங்கம் இறக்கிறாள். பிறகு வீரசேனனால் கபந்தனும் கொல்லப்படுகிறான்.
குறிப்பிட்ட நேரத்தில் வீரசேனன் சென்று சேரனிடம் போரிட்டு ஜெயகோஷத்துடன் திரும்பிவருகிறான். அன்று எட்டாவது நாள் காலை. தேவசேனையின் காதலை இது வரையில் பெறாத வீரசேனன் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறான். "காதலுக்கு ஏற்றத்தாழ்வில்லை" என்பதை உணர்ந்த தேவசேனை அங்குவந்து வீரசேனனைக் காதலிப்பதாகச்சொல்லி, தூக்கிலிருந்து காப்பாற்றுகிறாள். இறுதியில் இருவருக்கும் அரசன் திருமணம் செய்துவைக்கிறான்.
நடிகர்கள்
[தொகு]- கே. நடராஜன் - முத்துப்புலவன்
- டி. கே. சம்பங்கி - பல்லவராயன்
- ஜி. ஆர். வரதாச்சாரி - கபந்தன்
- எம். எஸ். முத்துகிருஷ்ணன் - முகுந்தன்
- பி. ராமய்யசாஸ்திரி - மந்திரி பூரணய்யன்
- எஸ். பி. ஆர். உடையார் - சாலிவாகனன்
- வி. எம். ஏழுமலை - புளிப்பட்டை
- வேணு - தயிர்ப்பட்டை
- கே. கோகிலா - தேவசேனா
- டி. எஸ். கிருஷ்ணவேணி - தங்கம்
- யு. ஆர். ஜீவரத்னம் - யோகினி
- என். பி. எஸ். சந்திராபாய் - அஞ்சுகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-24. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)