ரத சப்தமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரத சப்தமி(Ratha Saptami) இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும்.[1] இது குறிப்பாக சூரிய தேவன் (இந்து சமயம்) ஏழு குதிரைகள் (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன) பூட்டிய தனது ரதத்தை வடகிழக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.[2] சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும். இது பருவங்களின் அடிப்படையில், வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது. இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.[3][4][5]

வரலாறு[தொகு]

சூரிய கடவுளின் ரதம்

சூரிய வழிபாடு இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் அதன் பழமை சீனா, எகிப்து மற்றும் மெசப்படோமியா போன்ற உலகின் பல பகுதிகளில் புராணங்களுடன் தொடர்புடையது. காயத்ரி மந்திரம் என்பது சூரியக் கடவுள் மீது இந்துக்களால் ஒவ்வொரு நாளும் மிகுந்த பயபக்தியுடன் ஓதப்படும் மந்திரம் ஆகும். புராண இந்து மதம் உருவான போது, சூரிய வழிபாடு தோன்றியதாக கருதப்படுகிறது.[4][5]

பழமையான வேதமான இருக்கு வேதத்தில் சூரிய தேவனின் மனைவி இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் அமர்ந்திருந்ததாக குறிப்புகள் உள்ளது. எனவே இந்த அடையாளம் நார்ஸ் புராணங்களுக்கும் வேத வரலாறுக்கும் பொதுவானதாக உள்ளது.

சூரியனின் ரத அமைப்பு[தொகு]

ரத சப்தமி என்பது, சூரிய தேவன் (இந்து சமயம்) ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும். சூரிய தேவனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில் ஐ குறிப்பதாகும். மற்றும் ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பதாகவும் கருத்து நிலவுகிறது. அதாவது சூரியனுக்கு உகந்த தினமான ஞாயிற்றுக் கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான ஏழு நாட்களைக் குறிக்கிறது. மேலும், ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகளைக் குறிக்கின்றன. சூரியனின் சொந்த வீடாக சிம்ம ராசி உள்ளது. சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழாவாக உள்ளது.[3]

ரத சப்தமி அன்று முதல் தென்னிந்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக உயர்வதை உணர முடியும். மேலும் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பம், அதைத்தொடர்ந்து வரும் தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி, மற்றும் சித்திரை வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களை மக்கள் எதிர்பார்க்கும் விதமாக உள்ளது.

சூரியக் கோவில்கள்[தொகு]

Sun Temples in India
Surya-Konarak.jpg Modhera SunTemple.JPG
சூரிய தேவன் (இந்து சமயம்) சிலை உள்ள கொனார்க் கோயில் சூரியன் கோயில், குஜராத்

இந்தியாவில் பரவலாக உள்ள சூரியக் கோயில்களில், ரத சப்தமி விழா ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிகவும் பிரபலமான உலகப் பாரம்பரியக் களம் எனப் போற்றப்படும் கொனார்க் சூரியக் கோயில், கொனார்க்கில் உள்ளது. ஒடிசா மாநிலத்தில் மற்றொரு சூரியக் கோயிலான பிரான்ச்சி நாராயணா கோயில் புகுடா, கஞ்சாம் மாவட்டத்தில் உள்ளது. பிற சூரிய கோயில்களாக, சோலாங்கிப் பேரரசுவின் அரசராக இருந்த பீம்தேவால் கட்டப்பட்ட மொதேரா, குசராத்து, அசாம், ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அரசவல்லி சூரியக் கோயில், மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நவக்கிரகக் கோயில்கள் போன்றவை உள்ளது. The Sun Temple at (சம்மு காசுமீர்) மாநிலத்தில் இருந்த மார்டன்ட் சூரிய கோயிலும், முல்தானில் இருந்த சூரியக் கோயிலும் இசுலாமிய மோதல்களின் போது அழிக்கப்பட்டன.[3]

திருமலையில் ரத சப்தமி[தொகு]

திருப்பதி திருமலையில் ரதசப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.[6] ரத சப்தமி அன்று திருமலையில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏழு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். அதனால் அன்றைய தினம் "சிறிய பிரம்மோற்சவம்" என்று அழைக்கப்படுகிறது.

ரத சப்தமியன்று விடியற்காலை 5.30 மணியளவில், சூரிய பிரப வாகனத்திலும், அதைத் தொடர்ந்து சின்ன ஆதிசேஷன் வாகனம் காலை 9 மணியளவிலும், கருட வாகனம் 11 மணியளவிலும், அனுமன் வாகனம் பிற்பகல் 1 மணியளவிலும், சக்கரஸ்நானம் பிற்பகல் 2 மணியளவிலும், கற்பகம் (மரம்) வாகனம் மாலை 4 மணியளவிலும், சர்வ பூபால வாகனம் மாலை 6 மணியளவிலும் திருமாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறுகின்றன. அன்று இரவு 8 மணியளவில் சந்திர பிரப வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவதுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. திருப்பதி வெங்கடேசுவர சுவாமி ஒவ்வொரு வாகனத்திலும் ஒருமணி நேரத்திற்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.[7]

சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "சூரியனுக்கு உகந்த ரத சப்தமி". தி இந்து. 23 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Tirumala TTD Ratha Saptami Ardha Brahmotsavam 2019 Schedule". TTO. TTO. 7 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "Rathasaptahmi". Scribd. 2009-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Hindu Fasts and Festivals". Ratha Saptami. 2009-11-26 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 Narayan, K.K.V (2007). Flipside of Hindu Symbolism: Sociological and Scientific Linkages in Hinduism. Fultus Corporation. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59682-117-5. https://books.google.com/books?id=ewRfp4qpvt4C&pg=PT26&dq=Ratha+Sapthami#v=onepage&q=Ratha%20Sapthami&f=false. பார்த்த நாள்: 2009-11-26. 
  6. "திருமலையில் ரதசப்தமி: ஆர்ஜித சேவைகள் ரத்து". தினமணி. 23 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. K, Kandaswamy. "Ratha Saptami in Tirumala Tirupati". Live Trend. K Kandaswamy. 23 November 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத_சப்தமி&oldid=2867373" இருந்து மீள்விக்கப்பட்டது