யெஸ். பாலபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெஸ்.பாலபாரதி
பிறப்பு(1974-01-24)சனவரி 24, 1974 .
இராமேஸ்வரம்
குடியுரிமைஇந்தியா
காலம்2000-தற்காலம்
வகைசிறுகதை, கவிதை
இலக்கிய இயக்கம்கு. அழகிரிசாமி பள்ளி
இணையதளம்
http://blog.balabharathi.net/

யெஸ். பாலபாரதி (பி. ஜனவரி 24, 1974) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தமிழகத்தின் கடைகோடியில் உள்ள இராமேஸ்வரத்தில், முந்தைய தலைமுறையிலேயே குடியேறிவிட்ட மலையாளிக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் பாலபாரதி. எட்டாவது குழந்தையாக பிறந்ததால், குடும்பத்தினரால் பாலகிருஷ்ணன் என்று பெயர்சூட்டப்பெற்றவர். சில காரணங்களுக்காக சொந்த ஊரைவிட்டு, கிளம்பியபின் மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் பல்வேறு பணிகளை செய்து வந்தார். பின் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கேயும் தையல் பணி, வெல்டிங் பணி, ரப்பர் கம்பெனி, கண் மை தயாரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தவர் ஒரு நண்பரின் மூலம் பத்திரிக்கைத் துறைக்குள் நுழைந்தார்.

பணி வாழ்க்கை[தொகு]

பாலபாரதி, மும்பையில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த பல தமிழ் பத்திரிக்கைகளில் பணியாற்றியுள்ளார். குமுதம் குழுமத்தின் மும்பை செய்தியாளராக இருந்துள்ளார். கச் பூகம்பம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஒட்டி நடந்த கலவரம் ஆகிய சமயங்களில் நேரடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்று செய்தி சேகரித்துள்ளார். அப்படி செய்தி சேகரித்த ஒரே தமிழ்ப் பத்திரிக்கையாளார் இவர் என்பதால், பத்திரிக்கைத் துறையில் தனி கவனம் பெற்றார். மற்ற தமிழ்ப் பத்திரிக்கைகள் ஏஜென்சி வழி செய்திகளை மட்டுமே வெளியிட்டன. சில காலம் டில்லியிலும் குமுதம் குழுமத்திற்காக பணியாற்றியுள்ளார். அதன் பின் மும்பையிலேயே சில காலம் விகடன் குழும இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.

2005ம் ஆண்டு மத்தியில் சென்னைக்கு வந்தவர், முதலில் கிழக்கு பதிப்பகத்தின் வித்லோகா புத்தக விற்பனை நிலையத்தில் பணியில் சேர்ந்தார். பின் சன் குழுமத்தின் தொலைக்காட்சியில் செய்திப்பிரிவில் பணியாற்றி உள்ளார். அதன் பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவில் பணியாற்றியுள்ளார். 2005 முதல் வலைப்பதிவுகளிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருகிறார். தமிழ் வலைப்பதிவர்களின் கூட்டு முயற்சியில் நடந்த சென்னை வலைப்பதிவர் பயிற்சி பட்டறைக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இலக்கியப் பங்களிப்புகள்[தொகு]

1994ல் பாலபாரதியின் முதல் கவிதை பிரசுரமானது. தொடர்ந்து புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளை எழுதிவந்தவர், சிறுகதைகளிலும் தன் பங்களிப்பை செலுத்தி உள்ளார். 2000ம் ஆண்டு இவரது படைப்பான ‘இதயத்தில் இன்னும்’ என்ற ஹைக்கூ கவிதைகள் நூல் வெளிவந்தது.

என்ற இவரது ஹைக்கூ மிகவும் பிரபலமானது. 2008ம் ஆண்டு திருநங்கைகளில் வாழ்க்கையை மையமாகக்கொண்ட, ”அவன் – அது= அவள்” என்ற நாவலை எழுதி உள்ளார்.

இராமேஸ்வரத்தில் இருந்த போது நண்பர்களுடன் சேர்ந்து பிரகடனம் என்ற சிறுபத்திரிக்கையையும், மும்பையில் வாழ்ந்த போது கவிஞர் மதியழகன் சுப்பையாவுடன் சேர்ந்து குயில்தோப்பு என்ற சிறுபத்திரிக்கையையும் நடத்தியுள்ளார்.

சிறுகதை எழுத்தில் கு.அழகிரிசாமிப் பள்ளியைச் சேர்ந்தவராக இவர் அடையாளம் காணப்பெறுகிறார். வறுமையின் காரணமாக அடிமைப்படுத்தப்பட்டு, மும்பையில் வேலை செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றிய ’துரைப்பாண்டி’ சிறுகதை குறிப்பிடத்தகுந்தது என்று எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் குறிப்பிடுகிறார். 1993ல் மும்பையில் ஏற்பட்ட மதக்கலவரத்தை அடிப்படையாகக்கொண்ட இவரது ‘கடந்து போதல்’ சிறுகதை புதிய பார்வை இதழில் வந்தபோது பரவலான கவனத்தை பெற்றது. அதே போல கிராமங்களில் ஊடுறுவி உள்ள சாதி வேறுபாடுகளைப் பற்றி பேசும் ‘சாமியாட்டம்’ சிறுகதையும் பரவலாக கவனத்தைப் பெற்றது. தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

பால சாகித்திய அகாதமி விருது[தொகு]

2020ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழில் பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற சிறுவர்களுக்கான படைப்புக்கு 2021 செப்டம்பர் 3 இல் அறிவிக்கப்பட்டது.[1] குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படைப்பு இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாலபாரதிக்கு பால சாகித்ய விருது!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-01-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெஸ்._பாலபாரதி&oldid=3380059" இலிருந்து மீள்விக்கப்பட்டது