யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் (நூல்)
யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் | |
---|---|
நூல் பெயர்: | யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் |
ஆசிரியர்(கள்): | எஸ். சிவலிங்கராஜா |
வகை: | பண்பாட்டியல் |
துறை: | யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கூறுகள் |
காலம்: | 2014 |
இடம்: | கொழும்பு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | x + 201 |
பதிப்பகர்: | குமரன் புத்தக இல்லம் |
பதிப்பு: | முதற்பதிப்பு |
யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் என்பது, இலங்கையின் யாழ்ப்பாணப் பிரதேசத்து மக்களின் வழக்கிழந்த, உருமாற்றம் அடைந்துவிட்ட அல்லது மறைந்துபோன பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஆராயும் ஒரு நூலாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் சி. சிவலிங்கராஜா இந்நூலை எழுதியுள்ளார். இந்நூல் குமரன் புத்தக இல்லம் என்னும் பதிப்பகத்தினால் 2014 ஆம் ஆண்டு கொழும்பில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
நூல் வரலாறு[தொகு]
முதலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பேராசிரியர் சு. வித்தியானந்தன் நினைவுப் பேருரைக்காக இதே தலைப்பிலான 45 நிமிட நேர உரையொன்றை இந்நூலாசிரியர் நிகழ்த்தினார். இந்த உரை பின்னர் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்தது. ஆசிரியர் இதையே விரிவாக்கி கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி என்னும் நாளிதழின் மாத வெளியீடான கலைக்கேசரியில் தொடராக எழுதினார்[1]. பின்னர் அது மேலும் மெருகேற்றப்பட்டு நூலுருவில் வெளியிடப்பட்டது.
நோக்கம்[தொகு]
இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை ஆய்வு செய்து பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்நூல் என்பது நூலாசிரியரின் முன்னுரைக் குறிப்பில் இருந்து தெரிகிறது. ஆனாலும், அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக இந்த ஆய்வு யாழ்ப்பாணப் பகுதிக்குள் சுருங்கிவிட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[2]
உள்ளடக்கம்[தொகு]
இந்நூலின் உள்ளடக்கம் அறிமுகத்தைத் தவிர்த்து 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி விளக்குகின்றன. இந்நூலில் கையாளப்பட்டுள்ள பண்பாட்டுக் கூறுகள் பின்வருமாறு:[3]
- உணவு
- உறையுள்
- ஆடை அணிகலன்கள்
- புழங்கு பொருட்கள்
- போக்குவரத்து
- மொழிசார் பண்பாட்டுக் கூறுகள்
- ஆட்பெயர் வழக்காறுகள்
- உறவுமுறைச் சொற்கள்
- மரபுவழிச் சீர்மியம்
- பாரம்பரிய விளையாட்டுக்கள்
- பாரம்பரியத் தொழில்கள்
- திட்டுக்கள்
- யாழ்ப்பாணத்தில் அரைவாய் மொழிப் பாடல்கள்
- யாழ்ப்பாணத்து வாய்மொழி இலக்கியம்
- யாழ்ப்பாணத்துக் கோயில் திருவிழாக்கள்
- பிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள்
- பூப்பு நீராட்டற் சடங்கு
- திருமணச் சடங்கு
- மரணச் சடங்கு முறைமைகள்
- ஒப்பாரிப் பாடல்கள்
- யாழ்ப்பாணத்து வாழ்வியலில் பஞ்சாங்கம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கலைக்கேசரி இணையப் பதிப்பில் தொடரின் 2ம் பகுதி.
- ↑ சிவலிங்கராஜா, எஸ்., 2014. பக். vii
- ↑ சிவலிங்கராஜா, எஸ்., 2014. பக். ix, x.
உசாத்துணைகள்[தொகு]
- சிவலிங்கராஜா, எஸ்., யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2014.