மெசொப்பொத்தேமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மொசப்பத்தேமியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிலவரைபடம்
மெசொப்பொத்தேமியா நாகரீக கால அசிரியா, பாபிலோன், சுமேரியா மற்றும் ஈலாம் பகுதிகள்

மெசொப்பொதாமியா (Mesopotamia), பண்டைய அண்மை கிழக்கின் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியாகும். இதன் வடக்குப் பகுதிகளை மேல் மெசொப்பொத்தேமியா என்றும், தெற்குப் பகுதிகளை கீழ் மெசொப்பொத்தேமியா என்றும் பிரிப்பர்.

இது இன்றைய ஈராக், சிரியா மற்றும் வடமேற்கு ஈரான், துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. இதன் மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களாலும், வடக்கில் சிஞ்சார் மலைகளாலும் சூழப்பட்ட மேற்சொன்ன டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், சுற்ற தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், அக்காதிய நாகரீகம், பாபிலோனிய நாகரிகம் மற்றும் சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவில் சுமேரியர்கள் அறிமுகப்படுத்திய ஆப்பெழுத்து எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.

பெயர் வரலாறு[தொகு]

மெசொப்பொத்தேமியாவிற்கு வரைவிலக்கணமாக உள்ள டைகிரிஸ் யூப்ரதீஸ் நதிகளைக் காட்டும் வரைபடம்.

பிராந்திய இடப் பெயராகிய மெசொப்பொத்தேமியா என்பது புராதன கிரேக்கச் சொற்களாகிய μέσος (மெசொ) "மத்திய" மற்றும் ποταμός (பொத்தேமியா) "ஆறு" என்பவற்றிலிருந்து தோன்றியது இச்சொல்லுக்கு ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம் எனப் பொருளாகும். ஹீப்ருவில் உள்ள நகரைம் என்பதை மொழிபெயர்ப்பதற்கு, இது கிரேக்க செப்துவசிந்தா (கி.மு. 250) முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, அலெக்சாந்தரின் காலத்தைக் குறிக்கும் அனபாசிஸ் அலெக்சாந்திரி என்ற நூலில் மெசொப்பொத்தேமியா என்ற சொல் உள்ளது, கிரேக்கர்கள் இச்சொல்லை முன்பிருந்தே பயன்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அனபாசிசில் மெசொப்பொத்தேமியா என்பது யுப்பிரதீஸ் நதிக்குக் கிழக்கே, வட சிரியாவில் அமைந்துள்ள நிலப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரமேய வார்த்தையான பிரிடம் / பிரிட் நரிம் (biritum / birit narim) இதே போன்ற புவியியல் கருத்தை ஒத்திருந்தது.[1] பின்னர், மெசொப்பொத்தேமியா என்பது பொதுவாக யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அனைத்துப் பிரதேசத்தையும் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சிரியாவின் பகுதிகள் மட்டுமல்லாமல் ஈராக் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் கிட்டத்தட்ட அனைத்து பிரதேசங்களும் இதனுள் உள்ளடங்கின.[2] யூப்ரதீசின் மேற்கிலும் ஜக்ரோஸ் மலைகளின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ள ஸ்டெப்பிஸ் புல்வெளியானது, பெரும்பாலும் பரவலான வகையில் மெசொப்பொத்தேமியாவின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது.[3][4][5] மேலும் சில வேறுபாடுகள் பொதுவாக உயர் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் கீழ் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையே செய்யப்படுகின்றன.[6] உயர் மெசொப்பொத்தேமியாவானது ஜெசிரா என்றும் அழைக்கப்படுகின்றது. இது யூப்ரதீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் பக்தாத்திற்குக் கீழுள்ள பிரதேசமாகும்.[3] கீழ் மெசொப்பொத்தேமியாவானது தெற்கு ஈராக், குவைத் மற்றும் மேற்கு ஈரானின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.[7][8][9] நவீன கல்விசார் பயன்பாட்டில், மெசொப்பொத்தேமியா எனும் சொல் பெரும்பாலும் ஒரு கால உட்பொருளைக் கொண்டுள்ளது. முசுலிம்கள் வெற்றிபெற்ற வரையான பகுதிகளைக் குறிக்கவே இது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சிரியா, ஜெசிரா மற்று ஈரான் ஆகிய பெயர்கள் இப்பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.[2][10] இதன் பின்னர் இடக்கரடக்கல் பல்வேறு 19 ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய ஆக்கிரமிப்பின் மத்தியிலான பிராந்தியத்தின் காரணமாக இன்றும் நிலுவையில் இச் சொற்கள் உள்ளன என்று வாதிட்டனர்.[10][11]

வரலாறு[தொகு]

வார்ப்புரு:பண்டைய மெசொப்பொத்தேமியா பெருமளவு பண்டைக்கால நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் பகுதிகளில் குடியேறியும், அதனைக் கைப்பற்றி ஆட்சி செய்தும் உள்ளனர். பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிகழ்வுகளுக்கான காலத்தை நிர்ணயிப்பது இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருவதுடன், பல்வேறுபட்ட கால நிர்ணய முறைகளும் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதன் காரணமாக, இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள காலக் குறிப்புகள் அண்ணளவானவை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

கி.மு 2090 ஆண்டு ஆட்சியாளர்களான குடியா இனத்தைச் சேர்ந்த 18 சிலைகளில் ஒன்று.
  • மெசொப்பொத்தேமியா, சுமேரியர், அக்காதியர்,அசிரியர் மற்றும் பபிலோனியர் போன்றோரின் நாகரிகங்களையும் உள்ளடக்கிய பல பண்டைய நாகரிகங்கள் வளர்ந்தோங்கிய ஒரு இடமாகும்.
  • இப்பிரதேசத்துக்குள் எப்பொழுது நுழைந்தார்கள் என்பதில் அறிஞர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், சுமேரியர்களே இங்கு முதன் முதலில் குடியேறியவர்களென நம்பப்படுகிறது. இந்த வளமான பகுதியில், கி.மு 10,000 க்கும், கி.மு 5000 க்கும் இடைப்பட்ட காலத்தில், பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறி வாழ்ந்துள்ளார்கள். இம்மக்களால் அசுன்னா பண்பாடு, உபைதுகள் பண்பாடு, ஹலாப் பண்பாடு, செம்தேத் பண்பாடு, உரூக் பண்பாடு, சமார்ரா பண்பாடுகள் வளர்ச்சியுற்றது. பொதுவாகச் சிக்கலாகச் சமூக அமைப்புகள் கிமு 6000 ஆண்டுகள் அளவிலேயே வளர்ச்சி பெற்றதாகக் கொள்ள வேண்டும். அக்காலத்திலேயே ஜெரிக்கோ நகரம் நீர்பாசனத் தொழில் நுட்பங்களையும் கொண்ட மக்கள் நெருக்கடி மிக்க நகரமாக இருந்திருக்கிறது.அவர்களின் சுமேரியருடைய மொழி, அறியப்பட்ட வேறு மொழிகளுடன் தொடர்பில்லாததாகக் கருதப்படுவதால், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டறிவது கடினமானதாக உள்ளது. அவர்களுடைய பழங்கதைகளில் சூழவுள்ள இடங்கள்பற்றிய குறிப்புகள் காணப்பட்டபோதும், அவர்கள் தோற்றம்பற்றி அறிந்து கொள்வதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுமேரிய மொழி கி.மு 3200–2900 காலப்பகுதியை அண்டிப் பயன்பாட்டில் இருந்தது அறியப்பட்டுள்ளது.
  • கி. மு நாலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியிலிருந்து கி.மு மூன்றாவது ஆயிரவாண்டுகளூடான காலப்பகுதியில் பல்வேறு நகர இராச்சியங்கள் காலத்துக்குக் காலம் அதிகரித்த பலமுள்ளவையாக விளங்கின. எரிது, உரூக், ஊர், லகாசு, கிர்சு (Girsu) போன்றவை முக்கிய நகரங்களாக விளங்கின. சிறப்பாக நாலாவது ஆயிரவாண்டில் "உரூக்" இப்பகுதியின் முக்கிய நகர மையமாக விளங்கியது. இக்காலப் பகுதியில்தான் "உருக்" நகரிலும், வேறுசில நகரங்களிலும் எழுதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டது. உலோக உற்பத்தி கல்வேலை என்பவற்றிலும் அதிகரித்த முயற்சிகள் காணப்பட்டன.
  • கி. மு மூன்றாவது ஆயிரவாண்டு அளவில், மேற்சொன்ன நகர மையங்கள் மேன்மேலும் சிக்கல் தன்மை கொண்ட சமூகங்களாக உருவாகின. நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியது மூலம், உணவு உற்பத்தி அதிகரித்து, மேலதிகமாக உணவு பெறப்பட்டது. பாரிய கட்டிட வேலைத் திட்டங்கள் ஆட்சியாளர்களால் ஆரம்பித்து நடத்தப்பட்டன. அரசியல் நிறுவனங்களும் முன்னெப்போதும் இல்லாதவாறு சிக்கல் தன்மை கொண்டவைகளாயின.
  • கி. மு மூன்றாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில், சர்கன் (Sargon) என்பவனால் மெசொபொதேமியாவில் அக்காதியப் பேரரசு நிறுவப்பட்டது. அப்போது தான் முதன்முறையாக முழுப் பிரதேசமும் ஒரு மைய அரசின் ஆட்சியின் கீழ் ஒருமைப்படுத்தப்பட்டது. அக்காத்தியர்கள் செமிட்டிக் இன மக்களாவர். இவர்கள்பற்றிய குறிப்பிடத்தக்க அக்காத் மொழி ஆவணங்கள் கி.மு 2300 இலிருந்து கிடைக்கின்றன. சுமேரிய மொழி நிர்வாகம் மற்றும் இலக்கியங்களுக்கான மொழியாகத் தொடர்ந்து வந்தபோதும், மற்றெல்லா வகைகளிலும் அக்காத் மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இவ்வம்சம் கி. மு 2000 வரை தொடர்ந்தது.
  • இவ்வம்ச ஆட்சி முடிவுக்கு வந்தபின்னர், பல்வேறு நகர இராச்சியங்கள் அதிகாரத்தைத் தம் கையில் எடுத்துக்கொள்ளப் போட்டியிட்டன. அதே நேரம், சக்ரோசு மலைத்தொடர் பகுதியைச் சேர்ந்த குடியா அரசமரபினர் இப்பகுதியை ஆக்கிரமித்துச் சிலகாலம் ஆண்டனர்.
  • இப்பகுதியின் ஆட்சி அதிகாரம் முடிவில் "ஊர்" எனப்பட்ட நகர இராச்சியத்திடம் சேர்ந்தது. ஊரின் மூன்றாவது வம்ச ஆட்சியின்போது, கைத்தொழில்கள் மீது அரசின் கட்டுப்பாடு உச்சநிலையை அடைந்தது. "ஊர்-நம்மு", "ஷுல்கி", "ஹம்முராபி" என்பவர்கள் மூன்றாவது ஊர் வம்சத்தின் புகழ் பெற்ற அரசர்களாவர்.
  • கி. மு 1600 ஆண்டளவில் "மித்தானியர் என்னும் கிழக்கு இந்தோ ஐரோப்பிய இன மக்கள், துருக்கிக்குத் தென்கிழக்கே உள்ள மெசொப்பொத்தேமியப் பகுதியில் குடியேறினர். கி.மு 1450 ல், நடுத்தர அளவுள்ள பேரரசை மெசொப்பொத்தேமியாவின், கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இவர்கள் நிறுவியதுடன், மற்றப்பகுதிகளைச் சேர்ந்த அரசர்களிடமிருந்து சிலகாலம் திறையும் பெற்று வந்தனர். இவர்களுடைய அதிகாரம் "காப்தி" (மினோயிக் கிறீட்) பரவியிருந்ததனால் இவர்கள் எகிப்தின் பாரோக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர்.
  • இவர்கள் கி.மு 1300 இல், சின்ன ஆசியாவின் (Asia Minor) பெரும்பகுதியில் அதிகாரம் பெற்று, ஹத்துசாஷ் (இன்றைய துருக்கி) பகுதிலிருந்து ஆட்சி புரிந்து வந்த, மேற்கு இந்தோ-ஐரோப்பிய இனத்தவரான ஹத்திகளுக்குக் (Hatti) கீழ் சிற்றரசு நிலைக்குத் தாழ்ந்தனர்.

மொழி மற்றும் எழுத்து வடிவங்கள்[தொகு]

மெசபடோமியாவில் வழங்கப்பட்ட மொழி ஒரு தனிப்பட்ட வடிவம் உடைய சுமேரிய மொழியாக இருந்தது.

Square, yellow plaque showing a lion biting in the neck of a man lying on his back
கி.மு.9-7 ஆம் நூற்றாண்டு- புதிய அசிரியக் காலத்தைச் சேர்ந்த நிமுருத் தந்தச் சிலைகளில் ஒன்று. சிங்கம் மனிதனை உண்பது போல் செய்யப்பட்டது.

சுமேரியர்களிடையே செமிட்டிக் இனத்தாரிடையே ஒரு வட்டார வழக்கும் சொகுரு இனத்தாரிடையே சுபார்ட்டு என்ற மொழியும் வழங்கப்பட்டது.[12] இவை ஹுரோ உரார்தியன் மொழி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் தனிப்பட்டு, பெயர்கள், நதிகள் மலைகளின் பெயர்கள் மற்றும் கைவினைப்பொருட்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது.

அக்காடியர்கள் காலத்திலும் அசிரியர்கள் காலத்திலும் அக்காடிய மொழி பரவலாக ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் நிர்வாகம், சமய, இலக்கிய, விஞ்ஞான நோக்கங்களுக்காகச் சுமேரிய எழுத்து வடிவமானது பயன்படுத்தப்பட்டது. பல்வேறுபட்ட அக்காடிய மொழிகள் புதிய பாபிலோனியக் காலம் வரை புழக்கத்தில் இருந்தது. அதன் பின்பு மெசபத்தோமியாவெங்கும் பொதுவாக அராமைக் மொழியே வழங்கி வந்தது. இது பின்னர் புதிய அசிரியப் பேரரசு காலத்தில் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. அதன்பின்னர் வந்த அக்கீமெனிட் பேரரசு காலத்திலும் பெர்சிய பேரரசிலும் இம்மொழியே வழங்கப்பட்டது. இவை விழ்ச்சியுற்ற போதும் ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தது.

முந்தைய மெசபத்தோமியாவில் (கி. மு நான்காம் நூற்றாண்டின் இடையில்) கியூனிபார்ம் என்ற எழுத்துமுறை சுமேரிய மொழியில் கண்டறியப்பட்டது. கியூனிபார்ம் என்பதற்கு ஆப்பு வடிவிலான என்பது பொருள். முக்கோனவடிவ முனையுள்ள எழுத்தாணி கொண்டு ஈரமான களிமண் பலகைகளில் செதுக்கி உருவாக்கப்படும் எழுத்து முறையாகும். பட எழுத்திலிருந்து திருத்தமாக உருவாக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்து முறை உருவாயிற்று. பழங்காலத்தில் உர்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கோயில் பெண்கடவுளான இனன்னாவிற்கு அர்பணிக்கப்பட்டதை இவ்வெழுத்து முறையில் குறிப்பிட்டுள்ளனர்.

முற்காலத்தில் சின்னங்கள் வடிவிலான எழுத்து முறையிலிருந்து கியூனிபார்ம் எழுத்துமுறை செம்மைபெற பல ஆண்டுகளாயின. ஒரு சிலர் மட்டுமே பயிற்சியால் இவ்வெழுத்த்களை எழுதக் கற்றிருந்தனர். சர்கோன்களின் ஆட்சி காலத்தில் தான் இம்முறை பரவலாக அறியப்பட்டது. அதன் பின்னர் மெசபடோமியாவில் கல்வியறிவு வளர வளரப் பல்வேறு முறையிலான எழுத்துருக்கள் உருவாயின. இவை பாபிலோனியாவில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டன.

மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் மெசபடோமியாவில் நாகரிக மாற்றம் காரணமாகச் சுமேரிய மற்றும் அக்கடிய மொழி வளர்க்கவும் பரவவும் செய்தது.[13] மெசபடோமியாவில் அனைத்து பகுதியிலும் சுமேரியர்களின் மீதானாக்கடியர்களின் செல்வாக்கு காரணமாகவும் அவர்களின் மொழியில் இலக்கண விதிகள், வரிவடிவம், மற்றும் பேச்சொலிகளில் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் கி.மு மூன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் சுமேரிய மொழி மெல்ல மெல்ல மறைந்து அக்கடிய மொழியே பரவலாக மக்களின் பேச்சுமொழியாக இருந்தது.[14] ஆனால் கி. பி. முதலாம் நூற்றாண்டு வரை இறைவழிபாடு, புனிதச் சடங்குகள், இலக்கிய மற்றும் விஞ்ஞான மொழியாகச் சுமேரிய மொழியே மெசபடோமியாவெங்கும் பயன்படுத்தப்பட்டது.

இலக்கியம்[தொகு]

பாபிலோனிய பேரரசின் நகரங்கள் மற்றும் கோயில்களில் நூலகங்கள் நடைமுறையில் இருந்தன. ஆண்களும் பெண்களும் மிகச்சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர்.[15] மற்றும் செமிட்டிக் பாபிலோனியர்களின் இந்தத் தொடர்பு காரணமாகவும் சிக்கலான, விரிவான அசையெழுத்து கொண்ட சுமேரிய மொழியானது அழியும் நிலைக்கு ஆளானது. மேலும் பேரளவிலான சுமேரிய இலக்கியங்கள் பாபிலோனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.

மதம் மற்றும் சட்டங்கள் பழைமையான சுமேரிய மொழியிலேயே நீண்ட காலமாகத் தொடர்ந்தன. சொற்களஞ்சியம், இலக்கணம், ஆகியவை மாணவர்களின் கல்விக்காகத் தொகுக்கப்பட்டன. அதே போன்று பழைமையான நூல்களுக்கான தெளிவுரைகள் மற்றும் விளக்கவுரைகளும், புரியாத சொற்கள், சொற்றொடர்களுக்கான விளக்கங்களும் எழுதப்பட்டன. மேலும் அவைகளுக்கன பெயர்களுடன் விரிவாகப் பட்டியலிடப்பட்டன. பாபிலோனிய இலக்கியங்கள் இன்றளவிலும் பயிலப்பட்டு வருகின்றன. அவற்றுள் புகழ்பெற்ற ஒரு காப்பியம் 12 நூல்களாக உள்ள கில்கமேஷ் காப்பியமாகும். இது சுமேரிய மூல மொழியிலிருந்து சின்-லிக்-உன்னினி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகும். மேலும் இது வானவியல் கொள்கைகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் கில்கமேஷால் நிகழ்த்தப்பட்டதாக ஒரு சாகசக் கதையைக் கொண்டதாகும். புனைவுக்கதைகளாயினும் அவை அனைத்தும் காப்பிய மையக்கருவை தொடர்பு படுத்தியதாகக் காணப்படுகின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்[தொகு]

கணிதம்[தொகு]

மெஸோபோடமியர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறுபதினை அடிப்படையாக (அடியெண் 60) கொண்ட எண் முறையைக் கொண்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 60 நிமிடம் ஒரு மணி நேரமாகவும்,24 மணி நேரம் ஒரு நாளாகவும் மற்றும் வட்டத்தின் கோணத்தை 360 பாகைகளாகவும் கணக்கிட்டனர்.சுமேரிய நாட்காட்டி ஏழு நாள்களை அடிப்படையாகக் கொண்ட வாரத்தை உடையது. இக்கணக்கீட்டு முறையே முற்காலத்தில் வரைபடங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பாபிலோனியர்கள் பல வடிவங்கள் மற்றும் திட பொருட்களின் சுற்றளவு ஆகியவற்றை கணக்கிட சமன்பாடுகளை உருவாக்கினர். வட்டத்தின் சுற்றளவு, உருளையின் கன அளவு ஆகியவற்றையும் கணக்கிட அவர்கள் அளவை முறைகளைப் பயன்படுத்தினர். அவர்களின் தூரக் கணக்கீட்டு முறை பாபிலோனிய மைல் எனப்படும் தூர அளவைக் கொண்டிருந்தது. அது தற்காலத்திய 7 மைல்களுக்கு (11 கி.மீ) சமமானதாகும். இதன் அடிப்படையிலேயே அவர்கள் சூரியனுடைய பயண தூரத்தையும் கால அளவையும் கணக்கிட்டனர்.[16]

வானவியல்[தொகு]

சுமேரியர்களின் காலம் முதல் கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தை பொருத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அசிரியர்கள் லிம்மு (உயர் அரசு அலுவலரின் பதவியின் பெயர்) எனப்படும் அரசு அலுவலர்களின் பெயரில் ஒவ்வொரு வருடத்திற்குமான பட்டியல் தயரித்தனர். அது மேற்கண்ட முறையில் நடப்பு நிகழ்வுகளுடன் கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இது மிகச் சரியான முறையில் மெசொப்பொத்தேமியாவின் காலக்கணக்கீட்டு முறையில் வரலாற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது.

அவர்கள் ஒரு வருடத்திற்கான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய,சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர். இது மதம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையதாகவே இருந்தது. அவர்கள் சந்திரனின் பயணத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்தினர். கோடை மற்றும் குளிர் காலம் என இரண்டு பருவங்களாக ஓர் ஆண்டின் பருவங்களைப் பகுத்திருந்தனர். இக்காலத்திலிருந்து தான் வானவியல் என்ற ஒன்று தோற்றம் பெற்றது.

கி.மு. 8 மற்றும் 7 வது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானவியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தின் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும் கோள்களோடும் தொடர்புபடுத்தி புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இவர்களின் இப்பங்களிப்பு 'விஞ்ஞானப் புரட்சி' எனக் குறிப்பிடப்படுகிறது.[17] இப்புதிய முறையிலான வானியலை கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர்.

செல்யூசிட் மற்றும் பார்த்தியம் முறையிலான வானிலை அறிக்கைகள் முற்றிலும் அறிவியல் முறையிலேயே கணக்கிடப்பட்டது. அறிவியல் வளர்ச்சியடையாத அக்காலத்திலேயே இது போன்று துல்லியமாக நிகழ்வுகளைக் பாபிலோனியர்கள் மிகச்சிறந்த அறிவியல் முறையில் கணக்கிட்டது எவ்வாறென இன்றளவும் அறிய முடியாததாவே உள்ளது. பாபிலோனியர்களின் கோள்களின் இயக்கங்களை முன்கூட்டியே கணிக்கும் இவ்வானியல் முறை மெசொப்பொத்தேமியா வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. [| வரலாறு வானியல்] வானியல் # மெசபடோமியா [வரலாறு] கிரகங்கள் இயக்கங்கள் கணிக்கும் முறைகள் பாபிலோனிய வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

கிரேக்க பாபிலோனியரும் வானியலாளருமான செலூசியா (கி.மு. 190) என்பவர் அவருக்கு முன் வாழ்ந்த வானியல் அறிஞரான புளூடார்க் என்பவரது சூரிய மையக் கொள்கையைக் கற்றிருந்தார்.[18][19][20] எனவே, புளூடார்க்கின் கொள்கையான பூமியானது தனது சொந்த அச்சில் சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கொள்கையை அவர் ஏற்றார். இதனை அவர் நிரூபிக்க முயன்றார். ஆனால் சந்திரனின் ஈர்ப்புவிசையால் கடலில் ஓதங்கள் உருவாகின்றன என்ற இவரது கொள்கையைத் தவிர இவரது வாதஙகள் கிடைக்கப்பெறவில்லை.

பாபிலோனிய வானியலானது கிரேக்க வானியல்,பாரம்பரிய இந்திய வானியல், சசாந்தியப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, சிரியா, இடைக்கால இஸ்லாமிய வானியல், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவற்றின் வானியலுக்கு மிகவும் அடிப்படையாக அமைந்தது.[21]

மருத்துவம்[தொகு]

கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பழமையான மருத்துவ நூல்கள் பாபிலோனிய பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மிக விரிவான பாபிலோனிய மருத்துவ நூலானது மருத்துவக் கையேடுஎன்றறியப்படும், உம்மானு அல்லது தலைமை அறிஞர் என்றழைக்கப்படும் போர்சிப்பாவின் ஈசகில்-கின்-அப்லி என்ற அறிஞரால் பாபிலோனிய அரசரான அதாத்-அப்லா-இத்தினியா என்பரது ஆட்சியில் (கி.மு.1069-1046) எழுதப்பட்டது.[22]

அக்காலத்தய எகிப்திய மருத்துவத்துடன் இணைத்துப் பாபிலோனியர்கள் அறுவை சிகிச்சை, நோய் பகுப்பாய்வு, உடல் பரிசோதனை, மற்றும் மருந்துகள் போன்றவற்றில் புதிய அனுகுமுறையை அறிமுகப்படுத்தினர். மருத்துவக் கையேடு நூலில் சிகிச்சை முறைகள், நோய்க்கான காரணிகள், முன்கணிப்பு முறைகள் ஆகியவையும் நோய்களை அறிவதற்கும் நோயாளியின் உடலில் கண்டறியப்பட்ட அறிகுறிகுறிகளை இணைத்து அவற்றை ஏரண, தருக்க விதிகளுடன் இணைந்து விரிவாகப் பகுத்தறிவதற்கான முறைகளும் நோயறிகுறிகளுக்கான பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.[23]

பாபிலோனிய மருத்துவ முறையில் காயத்திற்கு கட்டு போடுதல், களிம்பு தடவுதல், மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நோயைக் குணப்படுத்த முயன்றனர். இம்முறையில் குணப்படுத்த முடியாதவரைச் சபிக்கப்பட்ட நோயாளியாகக் கருதி பேயோட்டும் முறை அக்காலத்தில் நடைமுறையிலிருந்து வந்தது. ஆனால் ஈசகில்-கின்-அப்லி என்பவரது மருத்துவ நூல் வெளிப்படையான ஏரணங்களையும் ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்ட, நவீன முறையில் நோய்ப் பரிசோதனையும் ஆய்வும் செய்யும் முறையையும் கொண்டது. இதனடிப்படையில் ஒரு நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள நோய், நோய்க்காரணி, அதன் வளர்ச்சி ஆகியவற்றினை அறிந்து நோயாளியைக் குணப்படுத்த வாய்ப்பு இருந்தது.[24] இவர் தனது நூலில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளையும், நோய்களையும் அவற்றுக்கான அறிகுறிகளையும் விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாகப் பல்வேறு வகையான வலிப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய நோய்களையும் அதற்கான அறிகுறிகளையும் ஆய்வு முறைகளையும் இந்நூல் உள்ளடக்கியது.[25]

தொழில்நுட்பம்[தொகு]

மெசொப்பொத்தேமியர்கள் பல உயர் தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உலோக மற்றும் தாமிர வேலைகள், கண்ணாடி மற்றும் விளக்கு தயாரித்தல், ஜவுளி நெசவு, வெள்ள கட்டுப்பாடு, நீர் சேமிப்பு, மற்றும் பாசனமுறை போன்ற பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர். இவர்கள் உலகின் முதல் வெண்கல காலகட்ட மக்களுள் ஒருவராக இருந்தனர். அவர்கள் இரும்புடன் செம்பு, வெண்கலம், மற்றும் தங்கத்தையும் பயன்படுத்தினர். நூற்றுக்கணக்கான கிலோ கிராம்கள் கொண்ட மிக விலையுயர்ந்த உலோகங்களால் அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன. மேலும் அவர்கள் இரும்பு, தாமிரம் மற்றும் வெண்கலத்தைப் பயன்படுத்தி வாள்கள்,ஈட்டிகள்,கவசங்கள், ஈட்டிகள், குத்துவாள், தண்டாயுதம் போன்ற ஆயுதங்களையும் செய்தனர். சமீபத்திய கருதுகோள்களின் படி கி. மு. 7 ஆம் நூற்றாண்டின் சன்கெரிப் என்ற அசிரிய மன்னன் ஆர்க்கிமிடீசின் தத்துவ முறையில் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்தி பாபிலோனில் தொங்கும் தோட்டம் மற்ரிம் நினிவே என்ற இடத்திற்கான தண்ணீர் இறைக்கும் அமைப்புகளை ஏற்படுத்தினானென அறியப்படுகிறது. இக்கிரேக்கக் கண்டுபிடிப்பு பிற்காலத்திய தண்ணீர் இறைக்கும் அமைப்புகளுக்கு முன்மாதிரியாக உதவியது.[26] பின்னர் பார்தியன் அல்லது சசானியர்களின் காலங்களில் பாக்தாத் மின்கலம் எனப்பட்ட உலகின் முதல் மின்கலம் மெசொப்பொத்தேமியாவில் உருவாக்கப்பட்டது.[27]

சமயம் மற்றும் தத்துவங்கள்[தொகு]

கி.மு 1800 ஐச் சேர்ந்த முதல் பாபிலோனிய வம்சத்தின் நள்ளிரவு தேவதைச் சிலை.

மெசொப்பொத்தேமியா சமயமே முதலில் பதியப்பட வேண்டியதாகும். மெசொப்பொத்தேமியர்கள் உலகம் தட்டையானது. அது மிகப்பெரிய வெளியில் சூழப்பட்டுள்ளது. அதற்குமேல் சொர்க்கம் உள்ளதென நம்பினர். அதே போன்று நீரானது மேலே,கீழே மற்றும் பக்கங்களிலென எல்லா இடத்திலும் இருப்பதாகவும் நம்பினர். பிரபஞ்சமானது கடலிலிருந்து பிறந்தாக நம்பினர். அவர்கள் மதத்தையும் பின்பற்றினார்கள். மெசொப்பொத்தேமியாவெங்கும் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒன்றாகவே இருந்தன.

சுமேரியச் சொல்லான "அன்-கி" என்பது "அனு" என்ற ஆண்கடவுளையும் "கி" என்ற பெண்கடவுளையும் குறிக்கும்.. அவர்களுடைய மகன் என்லில் வாயுக் கடவுளாவார்.என்லில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என அவர்கள் நம்பினர். இவரே பாந்தியன்களின் முதன்மைக் கடவுளாவார்.இவர் கிரேக்கக் கடவுளர்களான சூயஸ், ரோமானியக் கடவுளான ஜூபிடர் ஆகியோருக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? இங்கு எப்படி பிறந்தோம்? போன்ற தத்துவ வினாக்களும் சுமேரியர்களிடையே இருந்தன. இதற்கான விடைகளும் விளக்கங்களும் அவர்களின் கடவுளிடமிருந்து வந்தவை என நம்பினர். தத்துவங்களின் தோற்றமெனக் கருதக் கூடியப் பண்டைய மெசொப்பொத்தேமியா தத்துவங்கள் அவர்களின் ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக இயங்கியல், உரையாடல்கள், காப்பியங்கள், செய்யுள்கள் நாட்டுப்புறப் பாடல்கள் உரைநடைகள் மற்றும் பழமொழிகள் ஆகியவற்றில் வாழ்க்கைத் தத்துவங்கள், நெறிமுறைகள் ஆகியன கூறப்பட்டுள்ளன. பாபிலோனியர்களின் காரண காரிய மற்றும் பகுத்தறிவானது உற்று நோக்கிய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்டு இருந்தது.[28]

பண்பாடு[தொகு]

நீண்ட கண்களுடன் கூடிய சுமேரிய பூசாரி அல்லது வழிபாட்டாளர். கி.மு. 2750-2600

விழாக்கள்[தொகு]

பண்டைய மெசொப்பொத்தேமியர்கள் ஒவ்வொரு மாதமும் விழாக்களைக் கொண்டாடினர். சடங்குகள் மற்றும் விழாக்களின் நோக்கமானது ஆறு முக்கிய காரணிகள்மூலம் தீர்மானிக்கப்பட்டது.

  1. சந்திரன் வளர்பிறையானது வளம் மற்றும் வளர்ச்சியையும் தேய்பிறையானது சரிவு, பாதுகாப்பு மற்றும் பூமியின் (கிழுலகின்) விழாக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
  2. ஆண்டு முழுவதும் பெற்ற விளைச்சல்.
  3. சம இராப்பகல் மற்றும் கதிர்.
  4. உள்ளூர் புனைகதைகளின் மற்றும் அதன் தெய்வீக நாயகர்கள்.
  5. ஆட்சியாளர்களின் வெற்றி.
  6. குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள்( இராணுவ வெற்றி, புதிய நிர்மானங்கள், கோவில் விடுமுறைகள் முதலியன).

இசை[தொகு]

சுமேரியர்களின் இசைப்பாடல்கள் கடவுள் வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. இவற்றுள் பல சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை விள்க்குவதாக அமைந்துள்ளன. மன்னர்களுக்காக எழுதப்பட்டனவாயினும் சாதாரன மக்களின் வீடுகளிலும் சந்தை முதலான மக்கள் கூடுமிடங்களிலும் இவை பாடப்பட்டும் அதற்கேற்ப நடனமாடியும் களிக்கப்பட்டன. இவை எழுதப்படாமல் வழிவழியாகப் பாடப்பட்டு வாய்ப்பாட்டின் மூலமாக அடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பபட்டன.

தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ள உருக் காலத்திய சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஒரு படத்தில் மெசொப்பொத்தேமியர்கள் பயன்படுத்திய ஔத் என்ற கம்பி இசைக்கருவி காணப்படுகிறது. இது உருளை வடிவிலான ஒரு இசைக்கருவியாகும். இப்படம் டாக்டர் டொமினிக் கொலோன் என்பவரிடமிருந்து பெறப்பெற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பெண் ஓடத்தில் வலது கையால் இவ்விசைக்கருவியை வாசிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. மெசப்பத்தோமிய வரலாற்றில் இவ்விசைக்கருவி நூற்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில் 18 ஆம் நூற்றாண்டில் நீண்ட கழுத்து, குறுகிய கழுத்துப்பகுதி கொண்ட இதன் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஔத் இசைக்கருவி ஐரோப்பியர்கள் வீணை (lute) இசைக்கருவிக்கு முன்னோடியாகும். ஔத் என்ற சொல் அரபு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ஔத் மரத்திலிருந்து இக்கருவி செய்யப்பட்டதால் இவ்விசைக் கருவியும் அப்பெயர் பெற்றது.

விளையாட்டு[தொகு]

வேட்டையாடுதல் அசிரிய மன்னர்களிடம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகிய கலைகளும் குதிரைகளுக்கு மாற்றாக மனிதனின் தோள்களில் அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டு போன்ற ஒன்றும் விளையாடப்பட்டது.[29] தற்போதைய கால் பந்தாட்டம் போன்று மரத்தால் செய்யப்பட்ட பந்தினைக் கொண்டு விளையாடினர். இதற்கு "மஜோர்" என்பது பெயர். மேலும் தற்போது பரவலாக அறியப்படும் செனென்ட், போக்கேமேன் ஆகிய விளையாட்டுகளைப் போன்று தலைநகரமான ஊர் என்ற இடத்தில் குழு விளையாட்டுகள் விளையாடப்பட்டன.

வாழ்க்கை[தொகு]

பாபிலோனியர்களின் திருமணச் சந்தை எட்வின் லாங் என்ற ஓவியரால் வரியப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு கால ஓவியம்.

மெசொப்பொத்தேமியாவில் உருக்ககினா, லிபித் இஸ்தார், ஹமுராபி ஆகிய சட்ட விதிகள் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் வரலாற்றை நோக்கும்போது ஆண்கள் பெண்களைவிட சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டு பெண்வழிச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக மாறியதை அறியலாம். உதராணமாகப் பண்டைய சுமேரிய காலத்தில் "என்" அல்லது தலைமைப் பூசாரியாகப் பெண்கடவுளுக்கு ஆணும் ஆண் கடவுளுக்குப் பெண்ணும் நியமிக்கப்பட்டிருந்தனர். தார்க்கிட் ஜாக்கோப்சென் மற்றும் பலரின் கூற்றுப்படி பண்டைய மெசொபொத்தேமிய சமூகம் "பெரியோர்களின் சபை" என்ற ஒன்றினால் ஆளப்பட்டு வந்துள்ளது. இச்சபையில் ஆண், பெண் இருபாலரும் சமமாக இருந்தனர். காலப்போக்கில் பெண்களின் நிலை தாழ்ந்து ஆண்கள் உயர் மதிப்பு பெற்றனர். அரசர்கள், உயர்பதவியில் இருப்போர்களான குருமார்கள், மருத்துவர்கள், கோயில் நிருவாகிகள், ஆகியோரின் பிள்ளைகள் கல்வி பயின்றனர். பெரும்பாலான ஆண்பிள்ளைகள் தங்களுடை தந்தையின் வணிகத்தைத் தானும் செய்ய வேண்டி வெளியிடங்களுக்குச் சென்று வணிகப்பயிற்சி பெற்றனர்.[30] பெண்கள் வீட்டு வேலைகள், சமையல் மற்றும் இளைய குழந்தைகளைப் பராமரிக்க வீட்டிலேயே இருந்தனர். சில குழந்தைகள் தானியங்களை உடைக்கவும் பறவைகளின் இறகினைப் பிரித்துச் சுத்தம் செய்யவும் உதவ வேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இச்சமூகத்தில் பெண்கள் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். பெண்களுக்குச் சொத்துரிமையும் தகுந்த காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் உரிமையும் இருந்தது.

இறப்பு[தொகு]

மெசொப்பொத்தேமியாவின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைகுழிகள் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் மெசொப்பொத்தேமியர்களின் அடக்கம் செய்யும் முறை பற்றிப் பல்வேறு விவரங்கள் கிடைக்கப்பெற்றன. ஊர் என்ற நகரத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகளுக்கடியிலேயே சில உடைமைகளுடன் புதைக்கப்பட்டனர். ஒரு சில உடல்கள் பாய்களும் கம்பளங்களும் சுற்றப்பட்ட நிலையில் இருந்தன. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பெரிய ஜாடிகளில் வைக்கப்பட்டு குடும்ப தேவாலாயங்களில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நகரின் பொதுவான இடுகாட்டில் புதைக்கப்பட்டனர். 17 கல்லறைகள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களுடன் காணப்படுகின்றன. எனவே இவை அரச கல்லறைகளாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் பஹ்ரைனின் அடக்க முறையானது சுமேரியர்களுடைய அடக்க முறையைப் போலவே இருப்பது அறியப்பட்டுள்ளது.[31]

பொருளாதாரமும் வேளாண்மையும்[தொகு]

பண்டைய மேற்கு ஆசியாவின் கனிம வளத்தைக் குறிக்கும் படம். முறையே ஆர்சனிக்-பழுப்பு, தாமிரம்-சிவப்பு, டின்- சாம்பல் நிறம், இரும்பு -செம்பழுப்பு, தங்கம்-மஞ்சள், வெள்ளி-வெண்மை, ஈயம்- கருப்பு ஆகிய நிறங்களில் காட்டப்பட்டுள்ளன.

கி.மு.5000 இலிருந்தே பாசன முறை விவசாயமானது சக்ரோசு மலை அடிவரத்திலிருந்து சமரா மற்றும் ஹாஜி முகம்மது கலாச்சாரம் வரை பரவியிருந்தது.[32]

சுமேரியக் கோவில்கள் ஒரு வங்கிகள்போலச் செயல்பட்டன. மேலும் உலகின் முதல் பெருந்தொழில் கடனுதவி வங்கிகளாகவும் அவை வளர்ச்சியடைந்தன. ஆனால் பாபிலோனியர்கள் பண்டைய வங்கிமுறை வனிக வங்கிகளாகும். இது நவீன கெயின்சினுக்கு பிந்தைய பொருளாதாரத்துடன் சில வழிகளில் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.[33] பழங்காலத்தில் 'ஊர்' நகரில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் கோவிலின் உடைமைகளாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அரசர்கள் மற்றும் தனியார்கள் இந்நிலங்களை வைத்திருந்தனர்.

'இன்சி' என்ற சொல் அலுவல் முறையில் கோவிலின் விவசாய வேலைகளைக் கவனித்து வருபவரைக் குறிக்கும். 'வில்லீன்கள்' எனப்படுவோர் விவசாயத்துடன் தொடர்புடைய பணியாளகளாவர். குறிப்பாக அரண்மனை அல்லது கோவில் நிலங்களில் வேலை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.[34] தெற்கு மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு விவசாயத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்ததாகும். நீர்ப்பாசன மற்றும் நிறந்த வடிகால் அமைப்பு காரணமாகச் செழிப்பான விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமிய நாகரிகத்தில் இதனால ஒரு சிறந்த பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.

வேளாண்மைக்கான நீர்ப்பாசனத் தேவை காரணமாகச் சுமேரியர்கள் காலம் முதல் பிந்தைய அக்கடியர்கள் காலம் வரை யூப்ரடிஸ், டைகரிஸ் மற்றும் அதன் கிளையாறுகளின் கரைகளில் தங்கள் நகரங்களை அமைத்தனர். ஊர், உருக், ஆகிய முக்கிய நகரங்கள் யூப்ரடிஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டது. மற்றொரு குறிப்பிடத் தக்க நகரமான லகாஸ் டைகரிஸ் ஆற்றின் கிளையாற்றில் அமைந்ததாகும். நீர்ப்பாசனம் (உணவிற்கு) மீன்கள்(உணவு மற்றும் உரமாகப் பயன்படுத்தப்பட்டது),நாணல்,களிமண் (கட்டுமானப் பொருள்களுக்கு) ஆகிய பல நன்மைகளை இவ்வாறுகள் இம்மக்களுக்கு வழங்கின. இதனால் மெசொப்பொத்தேமிய நிலங்கள் கனடிய சதுப்பு நிலங்களுடன் ஒப்பிடப்படுகிறது.[35]

செழிப்பான பிறை போன்ற வடகிழக்குப் பகுதியானது டைக்ரிஸ், யூப்ரதிஸ் நதிப் பள்ளத்தாக்குகள் மற்றும் நைல், ஜோர்டான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய வளமான பகுதியாகும். எனவே ஆற்றுப் பகுதிகள் வளமிகுந்ததாகவும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருந்தன. தண்ணீருக்குத் தொலைவில் இருந்த பகுதிகள் வறண்டதாகவும் குடியேற முடியாததாகவும் இருந்தன. எனவே மெசொப்பொத்தேமியாவில் குடியேறிவர்களுக்கு நீர்ப்பாசன வளர்ச்சி மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

அணைகள்மூலம் நீரைத்தேக்கி வைத்ததும் கால்வாய்களை அமைத்ததும் மெசொப்பொத்தேமியர்களின் முக்கிய கண்டுபிடிப்பாகும். பண்டைய குடியேறிகள் வளமான நிலங்களை மரக்கலப்பை கொண்டு பதப்படுத்திப் பார்லி, வெங்காயம், திராட்சை, முள்ளங்கி, ஆப்பிள் போன்ற வற்றை பயிரிட்டனர். இவர்களே முதன் முதலில் "பீர்" "ஒயின்" ஆகியவற்றை உற்பத்தி செய்தனர். இவர்கள் விவசாயத்தில் தின்வாய்ந்தவர்களாக இருந்ததால் விவசாய வேலைகளுக்கு அடிமைகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாமலிருந்தது. ஒரு சில இடங்களில் இதற்கு மாறாக அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். அடிமைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் கலகங்களில் ஈடுபடுதல், தப்பித்துப் போதல் ஆகிய பல இடர்ப்பாடுகள் இருந்தன. இம்மக்களின் வாழ்வாதாரங்களான ஆறுகள் அடிக்கடி வெள்ளப்பெருக்கின் காரணமாக நகரங்களை முற்றிலுமாக அழித்தன. முன்கூட்டியே குறிப்பிட்டுக் கணிக்க முடியாத எதிர்பாராத இதன் வானிலை விவசாயிகளுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனவே பயிர்கள் மிகவும் சேதமடைந்தன. அதனால் இவர்கள் உணவுக்காகப் பசு, ஆடுகள் போன்ற கால்நடைகளையும் வைத்திருந்தனர். காலப்போக்கில் சுமேரிய மெசொப்பொத்தேமியாவின் தென்பகுதியில் மண்ணில் உவர்ப்புத் தன்மை கூடியதன் காரணமாக வடபகுதியிலிருந்த அக்காடியர்களின் சக்தி வாய்ந்த மையங்களான நகர்ப்புறங்களை நோக்கி இவர்கள் மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.

அரசியல்[தொகு]

மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு அதன் அரசியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கால்வாய்களை இணைத்துக் கட்டப்பட்ட இதன் புதிய நகரங்கள் தொலைவிலிருந்த நீண்ட பாலைவனத்திற்கு அப்பால் இருந்த நகரங்களிலிருந்து அலலது பழங்குடி மக்கள் குடியேறியிருந்த சதுப்பு நிலங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. எனவே இந்நகரங்களுக்கிடையேயான தகவல் தொடர்புகள் கடினமானதாகவும் அதே நேரத்தில் ஆபத்தானதாகவும் இருந்தன. இதனால் சுமேரிய நகரங்கள் மாநில நகரங்களாக மாறின. தன்னிச்சையான சுதந்திரத்தைக் கொண்டதாகவும் அவை அமைந்தன. அதே நேரத்தில் ந்கரங்கள் ஒன்றுக்கொன்று மற்ற நகரங்களை ஆக்கிரமிக்கவும் தனது நகரங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டடன. ஆனால் நூற்றாண்டுகளாக இம்முயற்சிகளில் சில தடுக்கப்பட்டன. சில தோல்வியில் முடிந்தன. இதனால் சுமேரிய அரசியல் வரலாறு பெரும்பாலும் போராட்டத்திலேயே கழிந்தது. இறுதியாகச் சுமேரியா ஏன்னட்டம் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆனால் அடுத்த தலைமுறையிலேயே அக்காடியர்கள் கி.மு. 2331 இல் சுமேரியாவைக் கைப்பற்றியதால் இவ்வொன்றிணைப்பு தோல்வியடைந்தது. அக்காடியகள் இப்பகுதியைக் கைப்பற்றி முதன் முதலில் வெற்றிகரமாக அமைதியாக இப்பகுதியை ஆண்டனர். ஆனால் இது குறுகிய காலமே நீடித்தது. சில தலைமுறைகதொடர்ந்த இப்பேரரசினை பாபிலோனியர்கள் கைப்பற்ரினர்.

அரசர்கள்[தொகு]

மெசொப்பொத்தேமியர்கள் தங்களுடை அரசன், அரசி ஆகியோரைக் நகரின் கடவுளர்களாக நம்பினர். ஆனால் பண்டைய எகிப்தியர்கள் தங்களுடை அரசர்களை எப்போதும் கடவுளாக நம்பியதில்லை.[36] பெரும்பாலான மன்னர்கள் 'பிரபஞ்சத்தின் மன்னர்' 'பேரரசர்' போன்ற பெயர்களைத் தாங்களாகவே சூட்டிக்கொண்டனர். மற்றொரு பொதுவான பெயர் 'மேய்ப்பர்' ஆகும் தன் மக்களைப் பாதுகாப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார்.

அதிகாரம்[தொகு]

அசிரியா பேரரசாக வளர்ச்சியுற்றபோது, மாகாணங்கள் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.அவை ஒவ்வொன்றும் அதன் முக்கிய நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. நினெவே, சமாரியா, டமாஸ்கஸ், அர்பத் ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொரு நகரமும் அதற்கெனத் தனிப்பட்ட ஆளுநரால் நிருவாகிக்கப்பட்டது. இவர்கள் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளைக் கண்காணித்தனர். இவ்வாளுநர்கள் போர்க்காலங்களின் படைவீரகளை வைத்திருக்கவும் கோவில் கட்டுமானத்திற்கான பணியாட்களை வழங்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர். இவர்கள் அரசின் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பில் இருந்தனர். எனவே மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிதானதாக இருந்தது. பாபிலோனியா சுமேரியர்களின் மிகவும் அமைதியான, இறையாண்மை மிக்க நகரமாகும். இது ஆட்சியாளர் ஹமுராபியின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய குறிப்பிடத் தக்க வளர்ச்சியினை அடைந்தது. இவர் சடடத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். விரைவில் பாபிலோன் மெசொப்பொத்தேமியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆனது. பின்னாளில் இது கடவுளர்களின் நுழைவாயிலென அழைக்கப்பட்டது. மேலும் இது வரலாற்றில் ஒரு சிறந்த கற்றல் மையமாகவும் விளங்கியது.

போர்கள்[தொகு]

போருக்குச் செல்லும் வீரர்கள்- வல்லூறு சாசனம். கி.மு. 2600-2350
புதரின் பின் ஆடு. ஊர் பகுதியில் அரச இடுகாட்டில் கிடைத்த இரண்டு சிலைகளில் ஒன்று. கி.மு. 2600-2400

உருக் கால கட்டம் முசிவுக்கு வந்த நிலையில் உபைதிய நகரங்கள் பல தனிமைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர்களால் பிரிக்கப்பட்ட பல நகரங்கள் உருவாயின. இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது. பண்டைய அரசரான லுகல்பந்தா என்பவர் நகரைச் சுற்றிலும் வெண்மையான சுற்றுச் சுவரை அமைத்தார். நகரங்கள் வளர்ச்சியுற்றபோது, அவைகள் ஒன்றன் மேலொன்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன. இச்சண்டைகள் சுமேரியப் பலகைச் சாசனத்தில் கி. மு 3200 இலேயே பதியப்பட்டுள்ளது. பின்னர் இது போன்ற பதிவுகள் பொதுவாகக் கி. மு 2500 களில் நடைமுறையில் இருந்தது.

இரண்டாவது சுமேரிய அரச வம்சத்தின் அரசரான உருக்கின் அரசர் இன்சி, கில்கமேஷ் (கி. மு 2600), ஆகியோர் சிடார் மலையின் காப்பாளரான ஹம்பாபா என்பவருக்கெதிராக எடுத்த இராணுவ நடவடிக்கைகள் பெரிதாகப் பாராட்டப்பட்டன பிற்காலத்தில் இந்நிகழ்வுகள் விழாக்களாகக் கொண்டாப்பட்டன. இதுகுறித்த கவிதைகளும் பாடல்களும் பாடப்பட்டன. இக்கவிதைகளில் இவ்வரசர்கள் மூன்றிலொரு பாகம் கடவுளாகவும் ஒரு பாகம் மனிதர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்

மூன்றாம் வம்ச முடிவில் (கி. மு 2600–2350) களில் வல்லூறு வடிவவில் அமைந்த ஒரு நினைவுச்சின்னத்தில் லாகாஷின் அரசரான இன்னட்டம் என்பவர் அண்மையில் உள்ள உம்மா நகரை வெற்றிகொண்ட வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான படுகொலைகளைக் கொண்டாடிய முதல் சாசனமாகும்.[37]

இது ஒருபடி முன்னேறிப் போர் என்ற ஒன்று மெசப்பொத்தேமிய அரசியலமைப்பில் இன்றியமையாததாக இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் இவைகளில் ஈடுபடாமல் நடுநிலை வகித்த நகரங்கள் இரு போட்டி நகரங்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்து ஒற்றுமை ஏற்பட உதவியாக இருந்தன.[36] பேரரசுகள் உருக்கொண்டு வலிமை பெற்றபோது அவைகள் பிற நாடுகளுடன் சண்டையிடச் சென்றன. சான்றாக அரசர் சார்கோன் சுமேரின் அனைத்து நகரங்களையும், மாரியின் சில நகரங்களையும் வெற்றி கொண்டு வட சிரியாவையும் வென்றார். பல அசிரிய, பாபிலோனிய அரண்மனைகளின் சுவர்கள் இம்மன்னர்களின் வெற்றியையும் எதிரி மன்னர்கள் தப்பிச்சென்று ஒளிந்து கொண்டதனையும் சித்தரிக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன.

சட்டம்[தொகு]

மெசொப்பொத்தேமியா நகரங்களில் தான் முதன்முதலில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசர்களின் அரச ஆணைகளும் அரசரின் முடிவுகளும் சட்டங்களாக உருவாயின. உருக்ககினியா, லிபிட் இஷ்தார் ஆகிய இடங்களில் இவ்வகைச் சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கி. மு 1780 களில் உருவாக்கப்பட்ட சாசனமான ஹமுராபியின் சட்டங்கள் இவ்வகையில் மிகவும்புகழ் பெற்றவையாகும். இதுவே உலகின் மிகப் பழைமையான சட்டத் தொகுப்பாகவும் மெசொப்பொத்தேமியாவின் பதியப்பட்ட சாசனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இதில் இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை விதித்துள்ளார்.

கலை[தொகு]

கி.மு 4000 லிருந்து பெர்சிய அக்கிமெனிடியப் பேரரசு இப்பகுதியை வெற்றி கொள்ளும் காலம் வரை (கி. மு 600 வரை) மேற்கத்திய யுரேசியப் பகுதியில் பண்டைய எகிப்தியக் கலைகளோடு ஒப்பிடக்கூடிய வகையில் மெசொப்பொத்தேமியக் கலை மிகவும் சிறந்ததாகவும் அதிநவீனத்துவம் கொண்டதாகவும் விளங்கியது. கற்களாலும் களிமன்னாலும் செய்யப்பட்ட சிலைகளும் ஓவியங்களும் சிதிலங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றைய கணித அடிப்படையில் தீட்டப்பட்டு தாவர நிறமிகளைக் கொண்டு வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சில ஓவியங்களே எஞ்சியுள்ளன. பெரும்பாலான சிலைகள் வண்ணங்கள் பூசப்பட்ட நிலையில் உள்ளன.

இலக்கியத்திற்கு முற்பட்ட காலத்திய கலை மற்றும் தொழில் நுட்பத்தில் உருக் மக்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது அவற்றுள் மண்பாண்டத்தில் செய்யப்பட்ட வார்க்கா சாடி, உருளை முத்திரை ஆகியவற்றைக் கூறலாம். எலாம் பகுதியில் கண்டறியப்பட்ட கி. 3000–2800 ஆண்டுகள் பழைமையான, இன்றளவும் காணக்கிடைக்கும், சுண்ணாம்புக் கல்லினால் செய்த சிங்கச் சிலை பாதியளவு மனிதனும் பாதி மிருகமும் கொண்ட ஒரு பெண்சிங்கத்தின் வடிவில் உள்ளதாகும்.[38] அதற்குப் பிந்தைய காலத்திய உருவங்களில் நீண்ட கண்களுடன் பூசாரிகள் மற்றும் பக்தர்களின் ஒரு அடி உயரத்தில் இருக்கும் சிலைகள் கிடைக்கின்றன. இவற்றும் ஒரு சிலவே எஞ்சியுள்ளன.[39] சுமேரிய மற்றும் அக்கடியர்கள் காலத்தில் பொதுவாக நீண்ட கண்கள், பிதுங்கிய விழிகள், நீண்ட தாடியுடன் கூடிய சிலைகள் வடிக்கப்பட்டன. உர் பகுதியில் அரசர்களின் இடுகாட்டில் கண்டறியப்பட்ட கி.மு 2650 களைச் சேர்ந்த இரண்டு மனித உருவங்கள், புதரின் பின் ஆடு, செம்பிலாலான காளை, காளையின் தலை ஆகியவை மிகச்சிறந்த அக்காலத்திய படைப்புகளாகும்.[40]

புதிய அசிரிய காலத்திற்கும் முன்பே மெசொப்பொத்தேமியாவில் கலைகள் செழித்தோங்கியே இருந்துவந்துள்ளது. உருளை முத்திரைகள், வட்டத்திற்குள் சிறிய உருவங்கள், பல்வேறு அளவிலான தேவதைச் சிலைகள், வீட்டில் பயன்படுத்தும் மண்பாண்டங்களாகியவற்றைக் கூறலாம். இவை மதம் சார்ந்தவையாகவும் வாழ்வியலுக்கானவையாகவும் உள்ளன.[41] இக்காலத்திய மிகச்சிறந்த அளவில் பெரிய படைப்பாக நள்ளிரவு தேவதைச் (Burney Relief) சிலையைக் கூறலாம். சுடுமண் சிற்பமான இது (20 x 15 அங்குலம்) அளவில் வார்ப்படமாகச் செய்யப்பட்ட சிலையாகும். இது நிர்வாணக் கோலத்தில் சிறகுகளுடனும் பறவைக் கால்களுடனும் தோறமளிக்கிறது. இதன் காலடியில் இரண்டு சிங்கங்களும் அருகில் இரண்டு ஆந்தைகளுடனும் காணப்படுகிறாது. இது 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.[42] கோயில்களில் கிடைத்துள்ள சிற்பங்கள்மூலம் வெற்றி நிகழ்வுகளும் விழாக்களும் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.[43] வல்லூறு சாசனம், கல்பெட்டகம், ஆகியவை கற்களால் பொறிக்கப்பட்ட சிலைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அசிரியர் காலத்திய கருங்கல் தூபி மிகப்பெரிய மற்றும் திடமான கல்லால் செய்யப்பட்ட பொறிக்கப்பட்ட தூணாகும்.[44]

அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய பின்பு முன்பிருந்ததை விட அதனை மிகப்பெரிய செல்வவளம் மற்றும்ம் கலைவளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். மிகப்பெரிய தூண்களுடன் கூடிய பெரிய அரண்மனைகளை உருவாக்கிச் சிற்பங்கள் ஆகியவற்றால் எகிப்துக்கு நிகரான வளமிக்கதாக மாற்றினார்கள். இவர்கள் காலத்திய போர் வேட்டைச் சிற்பம் இவர்களது மிகச் சிறந்த கலைப்படைப்பாகும். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறைந்த அளவிலான வட்ட வடிவச் சிற்பங்களையே செய்தனர். பாதுகாவலர் சிலைகள், முக்கோண வடிவில், ஐந்து கால்களும், அனைத்து திசைகளையும் பார்க்கக்கூடிய வகையில் தலைகளும் கொண்ட தேவதைச் சிலையும் இவர்கள் காலத்திய படைப்பகும். அடுத்த நாகரிக மாற்றம் ஏற்படும் வரை இப்பாரம்பரியமே தொடர்ந்தது. இவர்களும் உருளை வடிவ முத்திரையினையே பயன்படுத்தினார்கள்.[45]

கட்டடக் கலை[தொகு]

மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலைபற்றி அறிய தொல்பொருள் ஆய்வுகளே சான்றாக உள்ளன. கட்டடங்களின் மாதிரிகளை விளக்கும் படங்கள், கட்டடக் கலைபற்றிய குறிப்புகள், கோவில்களைப் பற்ரிய இலக்கியச் சான்றுகள், இடங்கள், நகரச் சுற்றுச் சுவர்கள் மற்றும் வாயில்கள், மேலும் நினைவுச் சின்னங்களாக நிற்கும் கட்டடங்கள் ஆகியவை மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் சான்றுகளாகும்.[46]

மெசொப்பொத்தேமியாவில் செங்கற்களே முதன்மைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தபப்ட்டுள்ளன. இவை இப்பகுதியில் ஏராளமாகக் கிடைத்தன. தேவையான கற்கள் தொலைவில் உள்ள நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. தனித்துவமான அமைப்பினைக் கொண்ட சிகுரத் எனப்படும் மிகப் புகழ்பெற்ற கோயிலானது இஸ்தார் வாயில் எனப்பட்ட மிகப்பெரிய நுழைவாயில்களுடன் விலங்கிழைகளால் ஆன செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டதாகும். இது பெர்லினில் உள்ள பெர்கமான் அருங்காட்சியகத்தில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கி. மு 4000 ஆண்டின் மிகச்ச் இறந்த கட்டடக்கலைச் சான்றாக உருக்கில் உள்ள கோயில் கட்டமைப்புகள், முந்தைய சுமேரிய வம்சக் கோவில்கள்,டையலா நதிக் கரையில் அமைந்துள்ள கஃப்பாஜா மற்றும் டெல்அஸ்மர் ஆகிய தொல்லியல் இடங்களைக் கூறலாம். மூன்றாம் உர் வமிச்த்தினி நினைவூட்டும் சான்றுகளாக நிப்பூர் என்லில் அருங்காட்சியகம், ஊரில் உள்ள சின்னனா அருங்காட்சியகம், மத்திய வெண்கலக் காலகட்டத்தை நினைவூட்டும் சிரியா மற்றும் துருக்கியில் உள்ள எல்பா தொல்லாய்விடங்கள், மாரி, அலலாக், அலெப்போ, குல்டெபே ஆகிய இடங்களைக் கூறலாம். பிந்தைய வெண்கலக் காலகட்ட இடங்கள் போகஸ்கோய், அட்டுஷா, நிவெனவா, பாபிலோனிய பாபிபலோன், உரர்தியன், முதலானவையாகும்.

வீடுகளின் கட்டமைப்புகளை நிப்பூர் மற்றும் ஊர் ஆகிய பகுதிகளில் காணலாம். கட்டடக் கட்டுமானம்குறித்த குறிப்புகளும், குடியாக்களின் உருளைகளும், 3000 ஆண்டுகால பழமையும், இருப்புக் காலத்தைச் சேர்ந்த அசிரிய மற்றும் பாபிலோனிய கல்வெட்டுகளும் இவர்களின் கட்டடக் கலைச் சான்றுகளாக இன்றும் நிற்பவையாகும்.

களிமண் உருண்டைகள்[தொகு]

மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகளில் மிகவும் பழமையான தரவுகள் உள்ளதாக அண்மையில் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். இதுவே மனிதர்களின் முதல் தரவு சேமிப்பகமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.[47]

மெசொப்பொத்தேமியாவின் நகரங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Finkelstein, J.J. (1962), "Mesopotamia", Journal of Near Eastern Studies, 21 (2): 73–92, doi:10.1086/371676, JSTOR 543884
  2. 2.0 2.1 Foster, Benjamin R.; Polinger Foster, Karen (2009), Civilizations of ancient Iraq, Princeton: Princeton University Press, ISBN 978-0-691-13722-3
  3. 3.0 3.1 Canard, M. (2011), "al-ḎJazīra, Ḏjazīrat Aḳūr or Iḳlīm Aḳūr", in Bearman, P.; Bianquis, Th.; Bosworth, C.E.; van Donzel, E.; Heinrichs, W.P. (eds.), Encyclopaedia of Islam, Second Edition, Leiden: Brill Online, OCLC 624382576
  4. Wilkinson, Tony J. (2000), "Regional approaches to Mesopotamian archaeology: the contribution of archaeological surveys", Journal of Archaeological Research, 8 (3): 219–267, doi:10.1023/A:1009487620969, ISSN 1573-7756
  5. Matthews, Roger (2003), The archaeology of Mesopotamia. Theories and approaches, Approaching the past, Milton Square: Routledge, ISBN 0-415-25317-9
  6. Miquel, A.; Brice, W.C.; Sourdel, D.; Aubin, J.; Holt, P.M.; Kelidar, A.; Blanc, H.; MacKenzie, D.N.; Pellat, Ch. (2011), "ʿIrāḳ", in Bearman, P.; Bianquis, Th.; Bosworth, C.E.; van Donzel, E.; Heinrichs, W.P. (eds.), Encyclopaedia of Islam, Second Edition, Leiden: Brill Online, OCLC 624382576 {{citation}}: Invalid |display-authors=9 (help)
  7. "Who Were The Babylonians?", Bill T. Arnold, p. 2, 2004
  8. "From Adam to Noah-The Numbers Game: Why the Genealogy Puzzles of Genesis 5", Leonard Timmons, 2012
  9. "Southern Mesopotamia During the Bronze Age", Lisa E. Gross, 2003
  10. 10.0 10.1 Bahrani, Z. (1998), "Conjuring Mesopotamia: imaginative geography a world past", in Meskell, L. (ed.), Archaeology under fire: Nationalism, politics and heritage in the Eastern Mediterranean and Middle East, London: Routledge, pp. 159–174, ISBN 978-0-415-19655-0
  11. Scheffler, Thomas; 2003. “ 'Fertile crescent', 'Orient', 'Middle East': the changing mental maps of Southeast Asia,” European Review of History 10/2: 253–272.
  12. Finkelstein, J.J. (1955), "Subartu and Subarian in Old Babylonian Sources", (Journal of Cuneiform Studies Vol 9, No. 1)
  13. Deutscher, Guy (2007), Syntactic Change in Akkadian: The Evolution of Sentential Complementation, Oxford University Press US, pp. 20–21, ISBN 978-0-19-953222-3
  14. Woods C. 2006 “Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian”. In S.L. Sanders (ed) Margins of Writing, Origins of Culture: 91-120 Chicago [1] பரணிடப்பட்டது 2013-04-29 at the வந்தவழி இயந்திரம்
  15. Tatlow, Elisabeth Meier Women, Crime, and Punishment in Ancient Law and Society: The ancient Near East Continuum International Publishing Group Ltd. (31 March 2005) ISBN 978-0-8264-1628-5 p. 75
  16. Eves, Howard An Introduction to the History of Mathematics Holt, Rinehart and Winston, 1969 p. 31
  17. D. Brown (2000), Mesopotamian Planetary Astronomy-Astrology, Styx Publications, ISBN 90-5693-036-2.
  18. Otto E. Neugebauer (1945). "The History of Ancient Astronomy Problems and Methods", Journal of Near Eastern Studies 4 (1), p. 1-38.
  19. George Sarton (1955). "Chaldaean Astronomy of the Last Three Centuries B.C.", Journal of the American Oriental Society 75 (3), p. 166-173 [169].
  20. William P. D. Wightman (1951, 1953), The Growth of Scientific Ideas, Yale University Press p.38.
  21. (Pingree 1998)
  22. Marten Stol (1993), Epilepsy in Babylonia, p. 55, Brill Publishers, ISBN 90-72371-63-1.
  23. H. F. J. Horstmanshoff, Marten Stol, Cornelis Tilburg (2004), Magic and Rationality in Ancient Near Eastern and Graeco-Roman Medicine, p. 97-98, Brill Publishers, ISBN 90-04-13666-5.
  24. H. F. J. Horstmanshoff, Marten Stol, Cornelis Tilburg (2004), Magic and Rationality in Ancient Near Eastern and Graeco-Roman Medicine, p. 99, Brill Publishers, ISBN 90-04-13666-5.
  25. Marten Stol (1993), Epilepsy in Babylonia, p. 5, Brill Publishers, ISBN 90-72371-63-1.
  26. Stephanie Dalley and John Peter Oleson (January 2003). "Sennacherib, Archimedes, and the Water Screw: The Context of Invention in the Ancient World", Technology and Culture 44 (1).
  27. Twist, Jo (20 November 2005). "Open media to connect communities". BBC News. http://news.bbc.co.uk/2/hi/technology/4450052.stm. பார்த்த நாள்: 6 August 2007. 
  28. Giorgio Buccellati (1981), "Wisdom and Not: The Case of Mesopotamia", Journal of the American Oriental Society 101 (1), p. 35-47.
  29. Karen Rhea Nemet-Nejat (1998), Daily Life in Ancient Mesopotamia
  30. Rivkah Harris (2000), Gender and Aging in Mesopotamia
  31. Bibby, Geoffrey and Phillips, Carl (1996), "Looking for Dilmun" (Interlink Pub Group)
  32. Richard Bulliet, Pamela Kyle Crossley, Daniel Headrick, Steven Hirsch, Lyman Johnson, David Northup. The Earth and Its Peoples: A Global History. Cengage Learning, 1 Jan 2010. http://books.google.co.uk/books?id=jvsVSqhw-FAC&pg=PA29&dq=mesopotamian+agriculture&hl=en&sa=X&ei=NeDFT-3PDcPW8gPMg_iRBg&redir_esc=y#v=onepage&q=mesopotamian%20agriculture&f=false. பார்த்த நாள்: 2012-05-30. 
  33. Sheila C. Dow (2005), "Axioms and Babylonian thought: a reply", Journal of Post Keynesian Economics 27 (3), p. 385-391.
  34. H. W. F. Saggs - Professor Emeritus of Semitic Languages at University College, Cardiff. Babylonians. University of California Press, 1 Jun 2000. http://books.google.co.uk/books?id=BPdLxEyHci0C&pg=PA58&lpg=PA58&dq=agricultural+practice+in+Babylonia&source=bl&ots=sTSSaHbcs5&sig=t6CxtOHRU2qHWgyaVma06YoN46o&hl=en&sa=X&ei=oCnFT_TxEImA8wPFgcnnCg&sqi=2&ved=0CHkQ6AEwCA#v=onepage&q=agricultural%20practice%20in%20Babylonia&f=false. பார்த்த நாள்: 29 May 2012.  ISBN 0-520-20222-8
  35. Roux, Georges, (1993) "Ancient Iraq" (Penguin)
  36. 36.0 36.1 Robert Dalling (2004), The Story of Us Humans, from Atoms to Today's Civilization
  37. Winter, Irene J. (1985). "After the Battle is Over: The 'Stele of the Vultures' and the Beginning of Historical Narrative in the Art of the Ancient Near East". In Kessler, Herbert L.; Simpson, Marianna Shreve. Pictorial Narrative in Antiquity and the Middle Ages. Center for Advanced Study in the Visual Arts, Symposium Series IV. 16. Washington DC: National Gallery of Art. pp. 11–32. ISSN 0091-7338.
  38. Frankfort, 24–37
  39. Frankfort, 45–59
  40. Frankfort, 61–66
  41. Frankfort, Chapters 2–5
  42. Frankfort, 110–112
  43. Frankfort, 66–74
  44. Frankfort, 66–74; 167
  45. Frankfort, 141–193
  46. Dunham, Sally (2005), "Ancient Near Eastern architecture", in Daniel Snell (ed.), A Companion to the Ancient Near East, Oxford: Blackwell, pp. 266–280, ISBN 0-631-23293-1
  47. "Prehistoric code found in clay balls could be 1st data storage system". Archived from the original on 2013-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.

உசாத்துணைகள்[தொகு]

  • Atlas de la Mésopotamie et du Proche-Orient ancien, Brepols, 1996 ISBN|2503500463.
  • Benoit, Agnès; 2003. Art et archéologie : les civilisations du Proche-Orient ancien, Manuels de l'Ecole du Louvre.
  • Jean Bottéro; 1987.Mésopotamie. L'écriture, la raison et les dieux, Gallimard, coll. « Folio Histoire », ISBN|2070403084.
  • Jean Bottéro; 1992. Mesopotamia: writing, reasoning and the gods. Trans. by Zainab Bahrani and Marc Van de Mieroop, University of Chicago Press: Chicago.
  • Edzard, Dietz Otto; 2004. Geschichte Mesopotamiens. Von den Sumerern bis zu Alexander dem Großen, München, ISBN 3-406-51664-5
  • Hrouda, Barthel and Rene Pfeilschifter; 2005. Mesopotamien. Die antiken Kulturen zwischen Euphrat und Tigris. München 2005 (4. Aufl.), ISBN 3-406-46530-7
  • Joannès, Francis; 2001. Dictionnaire de la civilisation mésopotamienne, Robert Laffont.
  • Korn, Wolfgang; 2004. Mesopotamien – Wiege der Zivilisation. 6000 Jahre Hochkulturen an Euphrat und Tigris, Stuttgart, ISBN 3-8062-1851-X
  • Kuhrt, Amélie; 1995. The Ancient Near East: c. 3000-330 B.C. 2 Vols. Routledge: London and New York.
  • Liverani, Mario; 1991. Antico Oriente: storia, società, economia. Editori Laterza: Roma.
  • Matthews, Roger; 2005. The early prehistory of Mesopotamia – 500,000 to 4,500 BC, Turnhout 2005, ISBN 2-503-50729-8
  • Oppenheim, A. Leo; 1964. Ancient Mesopotamia: Portrait of a dead civilization. The University of Chicago Press: Chicago and London. Revised edition completed by Erica Reiner, 1977.
  • Pollock, Susan; 1999. Ancient Mesopotamia: the Eden that never was. Cambridge University Press: Cambridge.
  • Postgate, J. Nicholas; 1992. Early Mesopotamia: Society and Economy at the dawn of history. Routledge: London and New York.
  • Roux, Georges; 1964. Ancient Iraq, Penguin Books.
  • Silver, Morris; 2007. Redistribution and Markets in the Economy of Ancient Mesopotamia: Updating Polanyi, Antiguo Oriente 5: 89-112.
  • Snell, Daniel (ed.); 2005. A Companion to the Ancient Near East. Malden, MA : Blackwell Pub, 2005.
  • Van de Mieroop, Marc; 2004. A history of the ancient Near East. ca 3000-323 BC. Oxford: Blackwell Publishing.

இதனையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mesopotamia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெசொப்பொத்தேமியா&oldid=3854377" இலிருந்து மீள்விக்கப்பட்டது