மெசீனியா (பண்டைய பிராந்தியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெசீனியா
Μεσσηνία
பண்டைக் கிரேக்க பிராந்தியம்
Burial chamber, Pylos
Burial chamber, Pylos
Map of ancient Messenia
Map of ancient Messenia
LocationPeloponesse
Major citiesMessene
DialectsDoric

மெசீனியா (Messenia அல்லது Messinia, கிரேக்கம்: Μεσσηνία‎ ) என்பது பண்டைய கிரேக்கத்தின் தென்மேற்கு பெலோபொன்னீசின் ஒரு பண்டைய மாவட்டமாகும். இது கிரேக்கத்தின் நவீன மெசேனியா நிலப் பகுதியை கூடியோ, குறைத்தோ கொண்டதாக உள்ளது. இதன் எல்லையாக வடக்கே நெடா ஆறு பாய்கிறது. அந்த ஆறு எலிசுடனான எல்லையாக உள்ளது. அங்கிருந்து ஆர்காடியாவுடனான எல்லையானது எலியாம் மலை மற்றும் நோமியா மலையின் உச்சியில் இருந்து, பின்னர் டெய்கெட்டஸின் அடிவாரம் வழியாக செல்கிறது. லாகோனியாவுடனான கிழக்கு எல்லையானது டெய்கெட்டஸ் முகடு வழியாக கோஸ்கரகா ஆறு வரை சென்று, பின்னர் அந்த ஆற்றின் வழியாக அபியா நகருக்கு அருகில் கடல்வரை சென்றது.

பண்டைய மெசீனியாவானது பெயர் மாற்றம் இல்லாமல், அதே பெயரில் கிரேக்கத்தின் நவீன பிராந்திய அலகாக சிறிய அளவிலான மாற்றத்துடன் தொடர்ந்து உள்ளது.

வரலாறு[தொகு]

வெண்கலக் காலம்[தொகு]

மெசீனியாவின் ஆரம்பகால குடிமக்கள் பாரம்பரிய காலத்தின் கிரேக்கர்களால் கிரேக்கத்தின் பிற பகுதிகளைப் போலவே 'பெலாசுசியர்கள்' என்று கருதப்பட்டனர். மேலும் எலனிக் பழங்குடியினரும் கிரேக்கத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் மெசீனியர்கள் ஏயோலியன் கிரேக்கர்களால் குடியேறப்பட்டனர். மெசீனிய நகரமான பைலோஸ், மேற்கு மெசீனியாவில் உள்ள அனோ எங்லியானோசின் நவீன தளத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. பைலோஸ் மற்றும் நிக்கோரியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளால், மெசீனியாவின் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் (கிமு 14 ஆம் நூற்றாண்டு) பைலோசில் உள்ள வானாக்சால் ஆளப்பட்ட ஒரு விவசாய இராச்சியம் என்று தெரியவருகிறது. மெசீனியர்கள் மெசீனிய கிரேக்க மொழி பேசினர், மேலும் எசுபாகியன்ஸ் போன்ற உள்ளூர் ஆலயங்களில் கிரேக்க கடவுள்களை வணங்கினர். கிரேக்க இருண்ட காலங்களில் பெலோபொன்னீஸின் புகழ்பெற்ற டோரியர் படையெடுப்பின் போது, ஆர்காடியாவிலிருந்து வந்த கிரெஸ்போன்டெசின் கீழ் டோரியர்களால் மெசேனியா படையெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வடக்கு சமவெளியில் உள்ள ஸ்டெனிக்ளரஸைத் தலைநகராகக் கொண்டு, முதலில் தங்கள் மேலாதிக்கத்தையும், பின்னர் முழு மாவட்டத்திலும் தங்கள் ஆட்சியை நீட்டித்தனர்.

பண்டைய காலம்[தொகு]

பண்டைய காலத்தில், இதன் வளமான மண்ணும், சாதகமான காலநிலையும், செல்வமும் அண்டை நாடான எசுபார்த்தன்களை ஈர்த்தது. இதனால் முதல் மெசீனியன் போர் வெடித்தது — ஸ்பார்டான் மன்னர் டெலிக்லஸ் மெசீனியர்களால் கொலை செய்யப்பட்டதன் விளைவாக, இப்போர் துவங்கியதாக கூறப்படுகிறது. மன்னர் யூபேஸ் மற்றும் அவரது வாரிசான அரிஸ்டோடெமசு ஆகியோர் வீரமாக போரிட்டபோதிலும், எசுபார்த்தா கிமு 720 இல் மெசீனியாவைக் கைப்பற்றுவதில் முடிந்தது. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு, மெசீனியர்கள் கிளர்ச்சி செய்தனர். இவர்கள் அரிஸ்டோமினெஸ் தலைமையில் எசுபார்டான்களை சுமார் பதினேழு ஆண்டுகள் (கிமு 685 — கிமு 668) எதிர்த்து போராடினர். இந்த கிளர்ச்சி குறிப்பிடுவது என்னவென்றால் முதல் போருக்குப் பிறகு மெசீனியா ஒரு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சியுடன் இருந்ததைக் குறிக்கிறது. ஏனெனில் இவர்களுக்கிடையிலான மோதல்கள் இரு தரப்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளுக்கு இடையிலான போர்களாக விவரிக்கின்றன. இருப்பினும், பதினொரு ஆண்டு முற்றுகைக்குப் பிறகு இரா (ஈரா) கோட்டை இறுதியாக வீழ்ந்தது. எசுபார்த்தன்களின் நோக்கம் தங்கள் குடிமக்களுக்கு ஏராளமான நிலங்கள் தேவைப்பட்டதால், அடிமையாக்கபட்ட பல மெசீனியர்கள் (அப்பகுதியை விட்டு வெளியேற முடியாதவர்கள்) எலட்களின் நிலைக்கு தாழ்த்தப்பட்டனர்.[1] எசுபார்த்தன் கவிஞரான டைர்டேயஸ், எசமானர்களின் கொடுமையை மெசேனியர்கள் எவ்வாறு சகித்தார்கள் என்பதை விவரித்துள்ளார்.

பாரம்பரிய காலம்[தொகு]

கிமு 464 இல், எசுபார்த்தாவை அழித்து பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்திற்குப் பிறகு, மெசீனியர்கள் மீண்டும் கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சியாளர்கள் முதல் மெசீனியன் போரில் செய்ததைப் போலவே, இதோமின் பாறைக் கோட்டையில் சில ஆண்டுகள் தங்களைத் தற்காத்துக் கொண்டனர். எசுபார்டான்களால் அவர்களை இதோம் மலைக் கோட்டையிலிருந்து வெளியேற்ற முடியவில்லை. அதனால் ஏதெனியன்கள் இடைக்கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் முன்னணி மெசீனியர்கள் பெலோபொன்னீசை விட்டு வெளியேறினர். மேலும் ஓசாலியன் லோக்ரிசின் பிரதேசத்தில் உள்ள நௌபாக்டஸில் ஏதெனியர்களால் குடியேற்றப்பட்டனர்.

எலனிஸ்டிக் காலத்திற்கு முந்திய காலம்[தொகு]

கிமு 371 இல் கடுமையான லியூக்ட்ரா சமருக்குப் பிறகு, தீப்சினால் எசுபார்டான்கள் மோசமான தோல்வியை சந்தித்தபோது, ​​எபமினோண்டாசு மெசீனியா மீது படையெடுத்து, எசுபார்டாவின் ஆட்சியிலிருந்து விடுவித்தார். எபமினோண்டாசு இத்தாலி, சிசிலி, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் சிதறியிருந்த நாடுகடத்தப்பட்ட மெசீனியர்களை தங்கள் நாட்டிற்குத் திரும்பிவர வேண்டி அழைத்தார். நாட்டின் தலைநகராக கிமு 369 இல் மெசிசீன் நகரம் நிறுவப்பட்டது. மற்ற நகரங்களும், இந்த நேரத்தில் நிறுவப்பட்டன அல்லது புனரமைக்கப்பட்டன. இருப்பினும் நிலத்தின் பெரும்பகுதியில் இன்னும் மக்கள்தொகை குறைந்தே இருந்தது. முற்றிலும் சுதந்திரமான நாடாக இருந்தபோதிலும், மெசீனியா உண்மையில் சக்திவாய்ந்த நாடாக மாறவில்லை அல்லது வெளிப்புறத்தில் ஆதரவு கிடைக்கததால் நிலைத்து நிற்க தடுமாறியது. எசுபார்த்தாவை தீபன் தோற்கடித்தபிறகு, இது மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பின் கூட்டாளியாக ஆனது. பின்னர், மெசேனியர்கள் அச்சேயன் கூட்டமைப்புடன் இணைந்தனர், மேலும் கிமு 222 இல் செல்லாசியாவில் மெசேனியன் துருப்புக்கள் அச்சேயன்கள் மற்றும் ஆன்டிகோனர்கள் டோசனுடன் இணைந்து போரிட்டன. ஐந்தாம் பிலிப் மெஸ்சீனைக் கைப்பற்றுவதற்காக பரோசின் டெமெட்ரியசை அனுப்பினார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து டெமெட்ரியசின் உயிரையும் பறித்தது.

உரோமானிய காலம்[தொகு]

கிமு 146 இல், மெசீனியா, கிரேக்கத்தின் மற்ற அரசுகளுடன் சேர்ந்து, நேரடியாக உரோமானிய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. பல நூற்றாண்டுகளாக டெய்கெட்டசின் மேற்கு சரிவில் உள்ள ஏஜர் டென்தெலியல்ஸ் துய்ப்புரிமை பற்றி மெசீனியாவிற்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே சர்ச்சை இருந்துவந்தது: மக்கெடோனின் இரண்டாம் பிலிப், ஆன்டிகோனஸ், லூசியஸ் மம்மியஸ், ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி, அகஸ்டஸ் சீசர் மற்றும் பலரின் வேறுபட்ட முடிவுகளுக்குப் பிறகு, கி.பி. 25 கி.பி.யில் திபேரியசு மற்றும் செனட் ஆகியோரால் மெசேனியர்களுக்கு ஆதரவாக இந்த சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. 6. ஸ்ப்பார்ட்டா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். பக். 105-105.