முத்து வயிரவநாத சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்து வயிரவநாத சேதுபதி என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் இரகுநாத கிழவன் சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவராவார். இவர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் தங்கை மகனான திருஉத்திரகோச மங்கை கடம்பத்தேவர் என்பவரின் மகனாவார்.

இரகுநாத கிழவன் சேதுபதி மன்னருக்கு ரணசிங்கத் தேவர், பவானிசங்கரத் தேவர் என்ற இரு ஆண் மக்கள் இருந்தனர் என அறியப்படுகிறது. கி.பி. 1702ல் சேதுபதி மன்னருக்கும் மதுரை அரசி இராணி மங்கம்மாவிற்கும் ஏற்பட்டப் போரில் ரணசிங்கத் தேவர் வீரமரணம் அடைந்தார் என்றும் தெரியவருகிறது. அடுத்த மகனான பவானிசங்கரத்தேவர் சேதுபதி மன்னருக்கும் செம்பிநாட்டு மறக்குல பெண்மணிக்கும் பிறக்காதவர் என்பதால், இராமநாதபுரம் அரண்மனை மரபின்படி அவரது அரசு உரிமை மறுக்கப்பட்டது.

இதையடுத்து ரெகுநாத கிழவன் சேதுபதியின் தங்கையின் பெயரனான முத்துவயிரவநாத சேதுபதி இராமநாதபுரம் மன்னராகத் தேர்வு செய்யப்பட்டார். கி.பி. 1713 வரை ஆட்சி செய்த இவரது ஆட்சிக் காலத்தை குறிக்கும் இரண்டு செப்பேடுகள் கிடைத்துள்ளன. முதலாவது செப்பேடானது கி.பி. 1710ல் செவ்விருக்கை நாட்டு அழகன் குளத்தை அடுத்து பின்னாணியாரேந்தல் ஊரினை அழகன்குளம் மூர்த்தி மடத்துக்கு வழங்கியது குறித்தது. இரண்டாவதாக கி.பி. 1711ல் இராமாயண பிரசங்க சேவையினைப் பாராட்டி மேலச்செல்வனுர் சர்க்கரைப் புலவருக்கு உளக்குடி, கோடாகுடி என்ற இரண்டு ஊர்களை வழங்கியது குறித்தது ஆகும். ஆனால் இவரது ஆட்சியானது நீண்டகாலம் தொடராமல் போனது. என்ன காரணத்தினால் இவரது ஆட்சி மேலும் தொடரவில்லை என்பதை அறிந்து கொள்வதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. சேதுபதி மன்னர்களது பல வரலாறுகளில் கிழவன் ரெகுநாத சேதுபதியை அடுத்து கி.பி. 1710-ல் முத்து விஜய ரகுநாத சேதுபதி சேதுநாட்டு மன்னரானார் என்ற செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவரைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. முத்து வயிரவநாத சேதுபதி (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 51. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl9jZMy.TVA_BOK_0004058. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_வயிரவநாத_சேதுபதி&oldid=3583174" இலிருந்து மீள்விக்கப்பட்டது