முத்துடையார்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துடையார்பாளையம்: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் சர்க்கார் ஒடுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சிற்றூர். நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள புதன் சந்தை என்னும் ஊரிலிருந்து மேற்கே இரண்டு கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. உடையார், கொங்கு வேளாளர், அருந்ததியர் ஆகிய சாதியினர் இவ்வூரில் அதிகம் வசிக்கின்றனர். உடையார் சாதியைச் சேர்ந்த முத்து என்பவர் பெயரைச் சிறப்புக் கூறாகக் கொண்டுள்ளது. அவர் எக்காலத்தில் வாழ்ந்தவர், அவர் பெயரில் ஊர் அமையக் காரணம் என்ன முதலிய விவரங்கள் தெரியவில்லை. பாளையம் என்னும் பொதுக்கூறு இவ்வூர்ப் பெயரில் உள்ளது. இவ்வூரில் உழவு, கோழிப்பண்ணை ஆகிய தொழில்கள் நடைபெறுகின்றன. அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோயில் சிறப்பானது. அடைக்கலம் காத்தவன், மல்லாண்டவன், கருப்பசாமி ஆகிய சிறுதெய்வங்கள் முக்கியமாக இவ்வூரில் வழிபடப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துடையார்பாளையம்&oldid=2033881" இலிருந்து மீள்விக்கப்பட்டது