முதலாம் விமலதர்மசூரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முதலாம் விமலதர்மசூரிய இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதலாம் விமலதர்மசூரியன்
கண்டியின் அரசன்
1602இல் முதலாம் விமலதர்மசூரியனை ஸ்பில் பேர்ஜன் சந்தித்தல்
ஆட்சி1591–1604
முன்னிருந்தவர்தொன் பிலிப்
பின்வந்தவர்செனரத்
துணைவர்தொனா கதரீனா
தந்தைவீரசுந்தர பண்டாரன்
பிறப்புஇலங்கை
இறப்பு1604
இலங்கை
அடக்கம்இலங்கை

முதலாம் விமலதர்மசூரியன் அல்லது கோணப்பு பண்டாரன் அல்லது தொன் ஜூவான் (Vimaladharmasuriya I அல்லது Konappu Bandara அல்லது Don Juan, சிங்களம்: පළමුවන විමලධර්මසූරිය அல்லது කොනප්පු බණ්ඩාර அல்லது දොන් ජුවන්) என்பவர் இலங்கையில் 1591 இலிருந்து 1604 வரை ஆட்சி செய்த கண்டி இராச்சிய மன்னராவார்.[1] போர்த்துக்கேயருக்கு எதிராக இவர் புரிந்த தந்துரேப் போர், பலனப் போர் என்பன குறிப்பிடத்தக்கவை.[2]

வரலாறு[தொகு]

கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார்.[3] முதலாம் இராஜசிங்கன் கண்டிராச்சியத்தை பரிபாலுப்பதற்காக பிரதிநிதியாக வீரசுந்தர பண்டாரவை நியமித்தார். பின்னர் இவர் மீது சந்தேகப்பட்டு அவரை பொறிக்கிடங்கில் வீழ்த்திக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தார்.[4] கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் கத்தோலிக்கப் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.[5] இதன் பின்னர், போர்த்துக்கேயர் தொன் ஜூவானின் தலைமையிலான படையைக் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற அனுப்பி வைத்தனர்.[6] கண்டி இராச்சியம் கைப்பற்றவுடன், தொன் பிலிப் (யமசிங்க பண்டாரன்) அரசனானார்.[7]

ஆனாலும் யமசிங்க பண்டாரனைக் கொன்று, தொன் ஜூவான் போர்த்துக்கேயருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து 1591ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.[8]

போர்கள்[தொகு]

1592 போர்[தொகு]

முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்கு அரசனானதும் 1592இல் முதலாம் இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.[9] ஆனாலும் இவ்வாக்கிரமிப்பு முதலாம் விமலதர்மசூரியனால் முறியடிக்கப்பட்டது.[10] முதலாம் இராஜசிங்கன் போரில் தோல்வியுற்றுத் திரும்பிச் செல்லும் தருணத்தில் 1593ஆம் ஆண்டு பெத்தங்கொடை என்னும் இடத்தில் மூங்கிற் சிராய் குத்தி இறந்தார்.[11]

தந்துரேப் போர்[தொகு]

1594ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் பேரோ லோபேஸ் டிசூசா என்ற தளபதியின் கீழ் ஒரு படையைக் கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படையுடன் தொன் பிலிப் என்கின்ற யமசிங்க பண்டாரவின் மனைவி குசமாசனதேவியையும் கூடவே அனுப்பினர். [12] முதலாம் விமலதர்மசூரியன் இப்போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்.[13] தந்துரே எனும் இடத்தில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறியடித்ததால் இப்போர் தந்துரேப் போர் என அழைக்கப்படுகின்றது.[14] இதன்பின் குசமாசனதேவியை விமலதர்மசூரியன் மணம்செய்து தனது ஆட்சி உரிமையை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.

பலனப் போர்[தொகு]

1602ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்காகத் தொன் ஜெரனிமோ டி அசவேது எனும் படைத் தளபதியின் கீழ் ஒரு படையை அனுப்பி வைத்தனர்.[15] இவ்வாக்கிரமிப்பின்போது போர்த்துக்கேயர் வெற்றிகரமாக முன்னேறிச் சென்றனர். ஆனாலும் போர்த்துக்கேயரின் படையில் சேவை செய்து வந்த இலங்கைப் படை வீரர்கள் (லஸ்கரின் படையினர்) முதலாம் விமலதர்மசூரியனின் படையுடன் இணைந்து கொண்டதால் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டனர். பலன எனும் இடத்தில் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டதால் இப்போர் பலனப் போர் என அழைக்கப்படுகின்றது.

சேவைகள்[தொகு]

சமயப் பணிகள்[தொகு]

முதலாம் விமலதர்மசூரியன் சப்பிரகமுவ மாகாணத்தி்ல் போர்த்துக்கேயரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தெல்கமுவ விகாரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தரின் தந்ததாதுவைக் கொண்டு வந்து கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வைப்பித்தார்.[16] அத்தோடு, ஒவ்வோர் ஆண்டும் தலதா ஊர்வலத்தை நடத்துவித்தார். மேலும் பர்மாவின் தென் பகுதியிலிருந்து புத்த பிக்குகளை வரவழைத்து உபசம்பதா என்னும் சடங்கைச் செய்வித்தார். இலங்காதிலக, கடலாதெனிய, ரிதி, தெகல்தொருவ முதலிய விகாரைகளைப் புனருத்தாரணம் செய்தார்.

பொருளாதாரப் பணிகள்[தொகு]

கொத்மலை, ஹரிஸ்பத்துவ, ஹேவாஹெட்ட, யடிநுவர, உடதும்பர, உடுநுவர, வலப்பன முதலிய இடங்களில் விவசாய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார். அத்தோடு ஊவாவில் இரும்புத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.பருத்திச் செய்கையை விருத்தி செய்தமை

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. கண்டி இராச்சியம் (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "கண்டி ராஜ்யம் (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-02-22. பார்க்கப்பட்ட நாள் 2012-03-30.
  3. சுருக்கமான மகாவம்சம் இலங்கையில் பௌத்தத்தின் வரலாறு (ஆங்கில மொழியில்)
  4. கண்டி ராச்சியம் (சிங்களத்தில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. கண்டியின் 1ஆம் விமலதர்மசூரியன் (ஆங்கில மொழியில்)
  6. இளவரசன் தொன் பிலிப்-கண்டியின் புதிய அரசன் (ஆங்கில மொழியில்)
  7. ["1513-1521 கோட்டை இராச்சியம் & போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31. 1513-1521 கோட்டை இராச்சியம் & போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு (ஆங்கில மொழியில்)]
  8. கண்டி இராச்சியம்-கண்டி (ஆங்கில மொழியில்)
  9. இலங்கையின் ஒரு சிறிய வரலாறு (ஆங்கில மொழியில்)
  10. சீதாவக்கையினதும் போர்த்துக்கல்லினதும் எழுச்சி (ஆங்கில மொழியில்)
  11. சீதாவாக்கையின் இராஜசிங்க மன்னனின் இறப்பு (ஆங்கில மொழியில்)
  12. ["தந்துரேயின் வரலாற்றுப் போர் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31. தந்துரேயின் வரலாற்றுப் போர் (ஆங்கில மொழியில்)]
  13. கண்டியின் 1-ம் விமலதர்மசூரியன் (ஆங்கில மொழியில்)
  14. ["கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31. கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் (ஆங்கில மொழியில்)]
  15. போர்த்துக்கேயரின் இலங்கை வருகை (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]
  16. ["இலங்கையிலுள்ள புராதனப் பௌத்தப் புண்ணிய இடங்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2006-07-05. பார்க்கப்பட்ட நாள் 2012-04-01. இலங்கையிலுள்ள புராதனப் பௌத்தப் புண்ணிய இடங்கள் (ஆங்கில மொழியில்)]