முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்வு மேலாண்மை திட்டம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி அவர்களால் 13 பிப்ரவரி 2021 அன்று துவக்கப்பட்டது.[1][2] [3] இத்திட்டத்தை தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயல்படுத்துகிறது. முதல் கட்டமாக, பொது மக்கள் தங்கள் குறைகளை, அரசுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண், 1100 வழியாக தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், இராஜிவ்காந்தி சாலையில் நுாறு இருக்கைகளுடன், முதல்வரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் குறைகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இம்மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் CMHelpline.tnega.org மற்றும் cmhelpline@tn.gov.in போன்ற தமிழ்நாடு அரசின் இணையதளங்களில் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை இம்மையத்திற்கு தெரிவிக்கலாம். கூடுதலாக CMHelpline Citizen எனும், மொபைல் போன் செயலியை தரவிறக்கம் செய்தும் குறைகளை தெரிவிக்கலாம். இத்திட்டத்தில் பெறப்படும் பொதுமக்களின் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்திகள் வழியாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து முதல்- அமைச்சர், அரசு தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சிததலைவர்கள் உரிய காலத்திற்குள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.[4][5]

வரலாறு[தொகு]

15.9.2020 அன்று தமிழக சட்டப்பேரவையில் சட்டப் பேரவை விதி எண் 110 கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு அரசு துறைகளின் கீழ் செயல்படும் எல்லா குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதை கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது என்பதால், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்கு தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது என அறிவித்தார்.[6]

மேலும் பேசும் போது, மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள், மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்தோறும் நடைபெறும் மனுநீதி நாள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அரசு அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன. இதனால் ஒரே நபர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே தமிழ்நாடு அரசுத்துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது. எனவே பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து அவற்றிற்கு தீர்வு காண ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து 1100 தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு: 1100 எண் தொலைபேசி சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
  2. பொது மக்கள் குறை தீர்ப்பு மேலாண்மை திட்டம் துவக்கம்
  3. தமிழக அரசின் "1100" சேவை எண் திட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
  4. Dial 1100 toll-free helpline to air grievances to Tamil Nadu
  5. Dial 1100 to resolve your grievances
  6. "ரூ.12.78 கோடி மதிப்பில் முதலமைச்சரின் உதவி மையம்: முதல்வர் அறிவிப்பு". Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.