முடியரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீறுகவியரசர் முடியரசன் (இயற்பெயர்: துரைராசு, அக்டோபர் 7, 1920 - டிசம்பர் 3, 1998) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர். எனவேதான் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் 'சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை' என்று போற்றினார். சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

இலக்கியப் பங்களிப்புகள்[தொகு]

வ.எண் நூல் வகைமை ஆண்டு பதிப்பகம் குறிப்பு
01 முடியரசன் கவிதைகள் கவிதை 1954 ?
02 காவியப் பாவை கவிதை 1955 முத்துநிலையம், காரைக்குடி[1]
03 கவியரங்கில் முடியரசன் கவிதை 1960 ?
04 பூங்கொடி காப்பியம் 1964 ?
05 தமிழ் இலக்கணம் இலக்கணம் 1967 ?
06 வீரகாவியம் காப்பியம் 1970 ?
07 பாடுங் குயில்கள் கட்டுரைகள் 1975 ?
08 பாடுங்குயில் இசைப் பாடல் 1983 ?
09 ஊன்றுகோல் காப்பியம் 1983 ?
10 நெஞ்சு பொறுக்கவில்லையே கவிதை 1985 ?
11 மனிதனைத் தேடுகின்றேன் கவிதை 1986 ?
12 சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார் வாழ்க்கை வரலாறு 1990 ?
13 தமிழ் முழக்கம் கவிதை 1999 ?
14 நெஞ்சிற் பூத்தவை கவிதை 1999 ?
15 ஞாயிறும் திங்களும் கவிதை 1999 ?
16 வள்ளுவர் கோட்டம் கவிதை 1999 ?
17 புதியதொரு விதி செய்வோம் கவிதை 1999 ?
18 எக்கோவின் காதல் சிறுகதை 1999 ?
19 அன்புள்ள பாண்டியனுக்கு கடிதம் 1999 ?
20 அன்புள்ள இளவரசனுக்கு கடிதம் 1999 ?
21 தாய்மொழி காப்போம் கவிதை 2000 ?
22 எப்படி வளரும் தமிழ்? கட்டுரை 2001 ?
23 மனிதரைக் கண்டு கொண்டேன் கவிதை 2005 ?
24 இளம்பெருவழுதி நாடகக் காப்பியம் 2008 ?
25 பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் தன்வரலாறு 2008 ?

சிறப்புகள்[தொகு]

  • இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
  • அழகின் சிரிப்பு கவிதை முதல் பரிசு- பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950
  • 'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
  • முடியரசன் கவிதைகள் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1966
  • வீரகாவியம் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1973
  • மாநில நல்லாசிரியர் விருது- 1974
  • சங்கப்புலவர் பட்டம்-குன்றக்குடி அடிகளார் (1974)
  • பாவரசர் பட்டம்,பொற்பேழை- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ்க்கழகம், பெங்களூரு- 1979
  • பொற்கிழி-பாவாணர் தமிழ்க்குடும்பம்,நெய்வேலி-1979
  • பொற்குவை உரூ.10,000-மணிவிழா எடுப்பு- கவிஞரின் மாணவர்கள், காரைக்குடி-1979
  • பொற்கிழி- பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, கவிஞர் மீரா,சிவகங்கை-1979
  • கவிப்பேரரசர் பட்டம், பொற்கிழி- கலைஞர், தி.மு.க மாநில இலக்கிய அணி-1980
  • தமிழ்ச்சான்றோர் விருது,பதக்கம்- தமிழகப்புலவர்குழு, சேலம்-1983
  • கலைஞர் விருது- என்.டி.இராமராவ்,ஆந்திர முதல்வர்,தி.மு.க முப்பெரும் விழா-1988
  • பாவேந்தர் விருது(1987க்கு உரியது) (தமிழ்நாடு அரசு) -1989
  • பூங்கொடி என்ற வீறுகவியரசர் இயற்றிய மொழிப்போர்க்காப்பியம் 1993-இல் இந்திராணி இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளது. இந்நூலைப்பற்றிப் பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை "உலக மொழிக்காப்பியங்கள். மூன்றனுள் ஒன்றாகக் கருதப்பெறும் சிறப்புடையது 'பூங்கொடி' என்று வாழ்த்தினார்.
  • பொற்கிழி- அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்-1993
  • சிறந்த தமிழ்த்தொண்டிற்கான 'அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்',வெள்ளிப்பேழை, பொற்குவை உரூ.50,000-அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை-1993
  • கல்வி உலகக் கவியரசு விருது- அகில இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், அழகப்பா பல்கலைக்கழகம்-1996
  • பொற்கிழி- பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி-1997
  • கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998
  • வீறுகவியரசரின் படைப்புகள் தமிழ்நாட்டரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. - 2000


முடியரசனார் பற்றிய புகழ்மொழிகள்[தொகு]

'கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன் -  தந்தை பெரியார்


'திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர் முடியரசன்'       -- பேரறிஞர் அண்ணா


தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கின்ற

மான் துள்ளும் வேகத்தைக் கவிதையினால்

வான்பெய்யும் கோடைமழைபோலப் பொழிகின்ற முடியரசர்

முன்னாள் தொட்டு இந்நாள்வரை இருக்கின்ற நம்கவியரசர்

தன்மானக் குன்றம் – கொள்கை மாறாச் சிங்கம்

'திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக, முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம். - கலைஞர் மு. கருணாநிதி


'கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.' -   மக்கள் திலகம் எம். ஜி. இராமச்சந்திரன்


 தமிழ் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார். - பேராசிரியர் க. அன்பழகன்


'என் மூத்த வழிதோன்றல் முடியரசனே.. எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்'  - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


      'இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்' - முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்


'சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும் மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை..'  -தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"கவிஞர் முடியரசன் ஓர் அற்புதக் கவிஞர். பொருளீட்டுவதற்காக, ஆபாசங்களையும் அருவருப்புகளையும் பாடும் கவிதாசர்களிடையே முடியரசன் ஒருவர்தான் வேறுபட்டுத் தனித்து நின்று மனித முன்னேற்றத்துக்காகவும், தமிழ் விடுதலைக்காகவு தமிழரின் அடிமை விலங்கை உடைக்கவும் பாடிய புரட்சிக் கவிஞராக நான் காண்கிறேன். சாகித்ய அகாடமிகளையும், ஞான பீடங்களையும் அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தன் கொள்கை இலக்கை நோக்கியே அவர் குறியாயிருந்தார்.” -ஞானபீடம் ஜெயகாந்தன்


வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந்

தீத்திறக் காலை தெளி மருந்தே – மூத்த

முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்

முடியரசன் செய்யுண் முறை -  மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்


பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்

மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்

இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்

கவிதை கோலாக்  கற்பனை கொடியா

வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா

யாப்புப் படையா நல்லணி துணையாப்

புரட்சி முரசாப் புதுமை துடியாத்

தமிழை இகழ்வார் தன்னுயிர் பகையா

அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்

தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன்

மொழியர சோச்சும் முதல்முடி யரசன்

குடியரசு போற்றுங் கொள்கை யோனே. -  முனைவர் வ.சுப. மாணிக்கனார்


முடியரசர் இவரென்றால் மக்க ளெங்கே?

              முன்னோடும பரி எங்கே ? படைக ளெங்கே?

முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே?

              முத்தமிழில் ஒரு தமிழ்தான் முடியோ மற்ற

இடைத்தமிழ்தான் அரசோ மூன் றாவதான

              எழிற்றமிழ்தான முரசோ ஓ.. சரிதான் இந்த

முடியரசர் பாவரசர் பாடுகின்றார் நாம்

              முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்போம்

மும்முடியை ஓர்தலையில் முடித்த முடியரசர்

எம்முடியும் தலைவணங்கும் இயற்கையிலே கவிஞர்

தம்மரிய கவிதையினால் கவியரசர் ஆனார்

தாய்த்தமிழே அவர்முடியை உனக்குத்தான் சாய்ப்பார்- - கவிஞர் கண்ணதாசன்


வளையாத முடியசரன் வைரத் தூண்தான்

              வளமார்ந்த பெரியாரின் கொள்கை வாள்தான்

தலையறுத்துத் தமிழ்ப்பகையின் தலை யறுக்கும்

              தளைதட்டா வெண்பாக்கள் இவரின் தோட்டா

குலைஇளநீர் கொட்டியதாய் இனிமைப் பேச்சு

              குடியறியாச் சிந்தனைகள் தமிழே மூச்சு

அலைகடலாய் கருத்துமனம் பெரியார் அண்ணா

              ஆழ்மனத்தில் வைத்திருந்த புதையல் காடு

எவரெவரோ எழுதுகின்றார் இவரைப் போன்றே

              எழுந்தவர்யார் எழுத்தாலோ? பாவேந்தர்தம்

தவப்புதல்வர் தமிழ்ப்புலவர் இவரின் பாட்டு

              தன்மான இயக்கத்தின் தளர்தா லாட்டு

யுகப்புரட்சி எழுத்தாளர் தமிழர் கைக்கு

              உயிர்நூற்கள் படைப்பாளர் உன்றன் தொண்டை

அகங்குளிர நினைக்கின்றேன் உருவம் கூட

              அகலவில்லை அடடாநீ எங்கே போனாய்? - உவமைக்கவிஞர் சுரதா


'கொட்டிக் கொடுத்தாலும் கோமான்கள் அழைத்தாலும்

எட்டியே பார்க்காத இளம்போத்துச் சிங்கமாய்

அட்டியின்றி பணத்தாசை அணுவளவும் இல்லாமல்

சுட்டி உரைக்கும் சுடர்க்கவியாய் கவியுலகில்

பாடிப்பறந்த பறவையாம் கவியரசர் முடியரசர்' - தமிழாகரர் தெ. முருகசாமி


உசாத்துணை நூல்கள்[தொகு]

  • முனைவர் ஸ்ரீகுமார், "முடியரசன் படைப்புகள் ஓர் ஆய்வு", சுபா பதிப்பகம், நாகர்கோவில் (1993)
  • முனைவர் மு.இளங்கோவன், " பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு", வயல்வெளிப்பதிப்பகம், கங்கைகொண்ட சோழபுரம் (1996)
  • முனைவர் இரா.மோகன், "இந்திய இலக்கியச்சிற்பிகள்- முடியரசன்", சாகித்திய அகாதெமி, புதுடெல்லி (2006)
  • கவிஞர் மனோ.இளங்கோ, "கவியழகில் முடியரசன்"(2007)
  • "கவியரசர் முடியரசன் படைப்புகள்" (13 தொகுதிகள்), தமிழ்மண் பதிப்பகம் (2008)
  • முடியரசன் தமிழ் வழிபாடு, தொ.ஆ. மு.பாரி, வீறுகவியரசரின் பெயர்த்தி ஓவியா மணவிழா வெளியீடு - 2011.
  • (தொ) பாரிமுடியரசன், "முடியரசன் கவிதை முத்துக்கள்", சாகித்திய அகாதெமி, புதுதில்லி (2015)
  • பாரிமுடியரசன், "கவிதைக்குப் பிறந்த மகன்", அண்ணாமலை பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம் & கலைஞன் பதிப்பகம் (2016)
  • பாரிமுடியரசன், " என் தந்தை முடியரசன்", மணிவாசகர் பதிப்பகம், சென்னை (2016)
  • (ப.ஆ) பேரா.சே.செந்தமிழ்ப்பாவை, முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்- "வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம்-தேசியக்கருத்தரங்க ஆய்வுக்கோவை"- நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரி & வீறுகவியரசர் அவைக்களம்
  • (தொ) பாரிமுடியரசன், "இவர்தாம் முடியரசர் வீறுகவியரசர்"- மணிவாசகர் பதிப்பகம்,சென்னை (2019)
  • (தொ) பாரிமுடியரசன், " வீறுகவியரசர் முடியரசன் கவிதைகள் பொருண்மை வகைத் தொகுப்பு" - சீதை பதிப்பகம், சென்னை (2019)
  • கவிஞர் சென்னிமலை தண்டபாணி, "திராவிட இயக்கத்தின் வானம்பாடி கவியரசர் முடியரசன்" -வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி (2019)
  • முனைவர்.தமிழ்முடியரசன், "மாணவச்செல்வங்களே.." - வீறுகவியரசர் நூற்றாண்டு வெளியீடு, மாணவர் செயற்களம், காரைக்குடி-1 (2019)
  • க. திருநாவுக்கரசு (1999) திராவிட இயக்கத் தூண்கள், நக்கீரன் பதிப்பகம், பக் 167-183
  • தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூல் பக்கம் - 144. (2011)

மேற்கோள்கள்[தொகு]

  1. திராவிடநாடு (இதழ்) நாள்:16-10-1955, பக்கம் 15

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

  • வீறுகவியரசர் முடியரசனாரின் வலைத்தளம் https://mudiyarasan.org/
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடியரசன்&oldid=3822615" இலிருந்து மீள்விக்கப்பட்டது