முகூர்த்தக்கால் நடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமண வீடுகளில் முகூர்த்தக்கால் நடுதல் அல்லது பந்தக்கால் நடுதல் என்பது சுபகாரியத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. திருமண வீடுகளில், திருமணம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சுபகூர்த்த நாளில், சுபமுகூர்த்தம் நேரத்தில்[1]முகூர்த்தக்கால் நடப்படுகிறது. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இல்லங்களிலும், திருமணம் செய்யும் இடத்திலும் வடகிழக்கு திசையில் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன் மற்றும் மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும், பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்காகும்.[2]

முகூர்த்தக்கால் நடும் முறை[தொகு]

வீட்டுத் திருமணத்தின் போது வடகிழக்கு திசையான ஈசான்ய மூலையில் முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடப்படும். முகூர்த்தக்கால் நடுவதற்கு மூங்கிலை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பூசி, அதன் உச்சியில் பூக்கள் சுற்றி அலங்கரித்து வீட்டின் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது.

கோயில்களில் முகூர்த்தக் கால் நடுதல்[தொகு]

தமிழகக் கோயில் விழாக்களுக்கு சில நாட்கள் முன்னர், விழா சிறப்பாக நடைபெற வேண்டி, பூஜை, புனஸ்காரங்களுடன் கோயிலின் ஈசானிய மூலையில் பந்தக்கால் நடுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகூர்த்தக்கால்_நடுதல்&oldid=3714350" இலிருந்து மீள்விக்கப்பட்டது