முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபி மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு ஹிஜ்ரத் செய்து சென்றபின் 622 இல் இருந்து தொடங்கியது.[1]

ஹிஜ்ரத்[தொகு]

மக்காவில் எதிரிகளின் கொடுமை அதிகமானதால் முகம்மது நபி மதீனாவிற்கு பயணம் செல்ல நாடினார்கள். இறைவனின் உத்தரவு கிடைத்ததும் முகம்மது நபி தமது தோழரான அபூபக்கர் அவர்களுடன் மதினா நகருக்கு இரகசியமாக இரவு வேளையில் பயணம் செய்தார். இருவரும் மூன்று நாட்கள் குகையில் தங்கினார்கள்.[2] பின்னர் இருவரும் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட கி.பி. 622ம் வருடம் இசுலாமிய நாட்காட்டியின் முதல் ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.

மதீனாவில் தங்குமிடம்[தொகு]

மதீனா நகரில் அனைத்து மக்களும் தமது வீட்டிலேயே முகம்மது நபி தங்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் முகம்மது நபி தமது ஒட்டகம் சென்று அமர்ந்த அபூ அய்யூப் அன்சாரியின் வீட்டுக்கருகிலுள்ள இடத்தில் தமது தங்குமிடத்தை அமைத்தார்.[3][4]

மஸ்ஜித்துன்நபவி[தொகு]

முகம்மது நபி தமது தங்குமிடத்திற்கு அருகில் தொழுகைக்கு பள்ளிவாசல் கட்ட தீர்மானித்தார். அந்த நிலம் இரண்டு அனாதைகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கி கட்டிடப் பணியைத் தொடங்கினார். அப்பணியில் பங்கெடுக்கும் முகமாக அவரும் கல், மண் சுமந்தார். அந்த பள்ளிவாசல் அல்-மஸ்ஜித் அந்-நபவி (முகம்மது நபி கட்டிய பள்ளிவாசல்) என்று அழைக்கப்படுகிறது.[3][4]

முசுலீம்களிடையே ஓப்பந்தம்[தொகு]

முகம்மது நபியைப் பின்பற்றி மக்காவில் இருந்து மதீனா வந்த முசுலிம்கள் முஹாஜிர்கள் (பயணம் செய்து வந்தவர்கள்) என அழைக்கப்பட்டனர். மதீனாவில் இருந்த முசுலிம்கள் அன்சாரிகள் (அடைக்கலம் கொடுத்தவர்கள்) என அழைக்கப்பட்டனர். இந்த இரு பிரிவினருக்கு மத்தியில் சகோதரத்துவ உடன்படிக்கையை முகம்மது நபி உறுதியாக அமைத்து அவர்களுக்கு மத்தியில் இசுலாத்திற்கு முன்பிருந்த மனக் கசப்புகளையும், குரோதங்களையும் அகற்றும் நட்பு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தங்களின் மூலம் இனவெறி உணர்வுகளை அழித்தார்கள்.[5]

மதீனா யூதர்களுடன் ஒப்பந்தம்[தொகு]

மதீனாவிற்கு அருகில் யூதர்கள்தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தார்கள். இவர்கள் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை அவர்களிடத்தில் சண்டை, சச்சரவு செய்யவுமில்லை. எனவே முகம்மது நபி மதீனா யூதர்களுடன் நட்புறவு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.[6] முகம்மது நபி யூதர்களுடன் கீழ்க்கண்ட உடன்படிக்கை மேற்கொண்டு அதை செயல்படுத்தினார்கள்.

  • யூதர்களின் செல்வத்திலும், மதத்திலும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
  • யூதர்களை மதீனாவை விட்டு விரட்டப்படவில்லை.
  • யூதர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யப்படவில்லை.
  • யாராவது மதீனாவின் மீது முற்றுகையிட்டால் அவர்களுக்கெதிராக முசுலிம்களும் யூதர்களும் சேர்ந்து போர் புரிய வேண்டும். தங்களுக்குள் உதவி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் பகுதியைப் பாதுகாக்க வேண்டும்.[7]

போர் புரிய அனுமதி[தொகு]

மதீனாவில் இருந்த அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக முகம்மது நபியையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக மக்கா நகர் அரபு மக்களின் தலைவர்கள் ஆலோசித்தனர்.[8][9] முஸ்லிம்கள் மதீனாவில் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரிகளை எதிர்த்துப் போர் புரியலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.[10] அதன்படி மதீனா நகரைச் சுற்றி குடியிருக்கும் அனைத்துக் கோத்திரத்தாருடனும் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இதன்பின்னர் மக்கா எதிரிகளை தாக்க, முகம்மது நபி 8 வெவ்வேறான படைப்பிரிவுகளை ஏற்படுத்தி பல திசையில் அனுப்பினார்.[11][12]

முகம்மது நபியின் போர்கள்[தொகு]

மக்கா எதிரிகள் பல நிலைகளிலும் முகம்மது நபிக்கு தொல்லைக் கொடுத்தார்கள். அவர்களை சமாளிக்க முகம்மது நபி பல போர்களில் ஈடுபட்டார். பதுருப் போர், உஹத் யுத்தம், கைபர் போர், அகழ்ப்போர், தபூக் போர், ஹுனைன் போர் உள்ளிட்ட பல போர்களில் முகம்மது நபி ஈடுபட்டார்.[13]

இசுலாமிய அழைப்பு[தொகு]

முகம்மது நபி எகிப்து அரசர் முகவகீஸ்க்கு அனுப்பிய கடிதம்.

முகம்மது நபி இசுலாமிய அமைப்புக்காக ஹபஷா மன்னர் நஜ்ஜாஷி, மிஸ்ரு நாட்டு மன்னர், பாரசீக மன்னர், ரோம் நாட்டு மன்னர்,பஹ்ரைன் நாட்டு ஆளுநர், யமாமா நாட்டு மன்னர், சிரியா நாட்டு மன்னர், ஓமன் நாட்டு மன்னர் போன்ற பல நாட்டு அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் அனுப்பினார்.[14]

மக்கா வெற்றி[தொகு]

முகம்மது நபி ஹிஜ்ரி 8 இல் ரமலான் 17 அன்று (கி.பி.630) மக்கா நகருக்கு தமது படையினருடன் அணிவகுத்து சென்றார். ஏற்கனவே பல மக்கா நகர தலைவர்கள் பலர் முசுலிமாக மாறியிருந்ததால் மக்காவில் முகம்மது நபியை எதிர்க்க ஆளில்லாமல் இராணுவ சண்டை இல்லாமலேயே மக்கா நகரம் முகம்மது நபியின் வசம் வந்தது.[15][16][17]

இறுதி ஹஜ்[தொகு]

மக்காவில் இருந்து மதீனா வந்த பின்னர் பத்து வருடங்கள் கழித்து முகம்மது நபி தமது இறுதி ஹஜ் கடமையை மக்காவிற்கு சென்று நிறைவேற்றியது பின்னர் மதீனா திரும்பினார்.[18]

இறப்பு[தொகு]

தமது கடைசி ஹஜ் யாத்திரைக்கு சில மாதங்களுக்கு பிறகு, முகம்மது அவர்கள் காய்ச்சல், தலைவலி, மற்றும் பலவீனத்தால் பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டார்.[19].அவர் கி.பி.632 ஆம் வருடம் ஜூன் 8 ஆம் தேதியன்று, மதினாவில், 62 அல்லது 63 வது வயதில், அவரது மனைவி ஆயிஷாவின் வீட்டில் மரணமடைந்தார்.[20] அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaikh, Fazlur Rehman (2001). Chronology of Prophetic Events. London: Ta-Ha Publishers Ltd.. பக். 51–52. 
  2. தப்சீர் தபரீ.பாகம்:14, பக்கம்:260
  3. 3.0 3.1 ஸஹீஹ் புகாரி - 3932 பரணிடப்பட்டது 2017-09-20 at the வந்தவழி இயந்திரம் தமிழ் குர்ஆன் இணையதளம்.
  4. 4.0 4.1 ஸஹீஹ் புகாரி, 63:3932
  5. அர்ரஹீக்குல் மக்தூம் (பக்கம் - 201)
  6. பார்க்க:
    • Esposito (1998), p.17
    • Neusner (2003), p.153
  7. அர்ரஹீக்குல் மக்தூம், (பக்கம் - 206)
  8. Lewis, "The Arabs in History," 2003, p. 44.
  9. Montgomery Watt, Muhammad, Prophet and Statesman, Oxford University Press, 1961, p. 105.
  10. John Kelsay, Islam and War: A Study in Comparative Ethics, p. 21
  11. Watt, Muhammad, Prophet and Statesman, Oxford University Press, 1961, p. 105, 107
  12. Bernard Lewis (1993), p. 41.
  13. "Ali". Encyclopædia Britannica Online. அணுகப்பட்டது 2007-10-12. 
  14. அர்ரஹீக்குல் மக்தூம் (பக்கம் - 386)
  15. Harold Wayne Ballard, Donald N. Penny, W. Glenn Jonas, A Journey of Faith: An Introduction to Christianity, Mercer University Press, p.163
  16. F. E. Peters, Islam, a Guide for Jews and Christians, Princeton University Press, p.240
  17. Watt (1956), p. 66.
  18. Alford Welch, Muhammad, Encyclopedia of Islam
  19. An Introduction to the Quran II (1895), p. 278
  20. The Last Prophet, p. 3. By Lewis Lord of U.S. News & World Report. 7 April 2008.