மார்கரெட் முர்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் முர்ரே
மார்கரெட் முர்ரே, ஆண்டு 1928
பிறப்புமார்கரெட் ஆலிஸ் முர்ரே
13 சூலை 1863
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா
இறப்பு13 நவம்பர் 1963(1963-11-13) (அகவை 100)
வெல்வைன், ஹெர்ட்போர்டுசயர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
பணிஎகிப்தியவியல், தொல்லியலாளர், மானுடவியலாளர், நாட்டுப்புற ஆய்வாளர்
பணியகம்இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி(1898–1935)
பெற்றோர்ஜேம்ஸ் முர்ரே-மார்கரெட் முர்ரே

மார்கரெட் ஆலிஸ் முர்ரே (13 சூலை 1863 - 13 நவம்பர் 1963) ஒரு பிரித்தானிய இந்திய எகிப்தியவியல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர், மானுடவியலாளர், வரலாற்றாசிரியர் மற்றும் நாட்டுப்புறவியலாளர் ஆவார். இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தொல்லியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவரே. இவர் 1898 முதல் 1935 வரை இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றினார்.[1] அவர் 1953 முதல் 1955 வரை நாட்டுபுறவியல் கழகத்தின் தலைவராக பணியாற்றினார்.

பிரித்தானிய இந்தியாவின் தலைநகராக விளங்கிய கொல்கத்தா நகரத்தின் ஒரு நடுத்தர வர்க்க ஆங்கிலக் குடும்பத்தில் பிறந்த முர்ரே, தனது இளமையை இந்தியா, பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாடுகளில் செவிலியராகவும், சமூக சேவகராகவும் பயிற்சி பெற்றார். இலண்டனுக்குச் சென்ற மார்கரெட் முர்ரே 1894ல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் எகிப்தியவியல் படிப்பை மேற்கொண்டார்.

1902-03ல் மார்க்கரெட் முர்ரே எகிப்தின் அபிதோஸ் நகரத்தில் பெட்ரியின் அகழ்வாராய்ச்சியில் பங்கேற்றார். அங்கு ஒசிரியன் கோவிலை கண்டுபிடித்ததார். பின்னர் சக்காரா நகரத்தின் கல்லறைகளை ஆய்வு செய்து எகிப்தியவியலில் தனது புகழை நிலைநிறுத்திக் கொண்டார்.

பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் மான்செஸ்டர் அருங்காட்சியகத்தில் பொது வகுப்புகள் மற்றும் விரிவுரைகளை வழங்குவதன் மூலம் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி இவருக்கு கூடுதல் ஊதியம் வழங்கியது. 1908ம் ஆண்டில் அவர் இரண்டு சகோதரர்களின்[2] கல்லறையில் இருந்து மீட்கப்பட்ட மம்மிகளில் ஒன்றான நும்-நாக்ட் மம்மியின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வழிவகுத்தார். பொது பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு எகிப்தியவியல் தொடர்பான பல நூல்களை மார்க்கரெட் முர்ரே எழுதினார்.[3]

மார்கரெட் முர்ரே முதல் அலை பெண்ணிய இயக்கத்தில் நெருக்கமாக ஈடுபட்டார். பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் இணைந்தார் மற்றும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பெண்களின் நிலையை மேம்படுத்த அதிக நேரம் செலவிட்டார். முதல் உலகப் போரின் காரணமாக எகிப்துக்குத் திரும்ப முடியாமல் போனதால், சூனிய-வழிபாட்டுக் கருதுகோள் மீது அவர் தனது ஆராய்ச்சியை மையப்படுத்தி ஒரு நூலை வெளியிட்டார்.[4] மார்கரெட் முர்ரே 1921ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டு வரை மால்டா மற்றும் மெனோர்காவில் வரலாற்றுக்கு முந்தைய தளங்களின் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார் மற்றும் நாட்டுப்புறவியல் மீது தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1927ல் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1928ல் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் மற்றும் 1935ல் ஓய்வு பெற்றார். அந்த ஆண்டு இவர் பாலஸ்தீனத்தின் பெட்ரியின் டால் அல்-அஜ்ஜுல் தொல்லியல் அகழ்வாராய்ச்சிக்கு உதவச் சென்றார. மேலும் 1937ல் அவர் ஜோர்டானின் பெட்ராவில் ஒரு சிறிய அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். பிற்கால வாழ்க்கையில் இலண்டன் நாட்டுப்புறவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இலண்டன் நகர இலக்கிய கழகத்தில் விரிவுரைகள் ஆற்றினார். மேலும் அவர் இறக்கும் வரை திறம்பட தொடர்ந்து செயல்பட்டார்.

மார்கரெட் ஆலிஸ் முர்ரேயின் எகிப்தியவியல் மற்றும் தொல்லியல் துறையின் பணிகள் பரவலாகப் பாராட்டப்பட்டு, "தி கிராண்ட் ஓல்ட் வுமன் ஆஃப் எகிப்தியலஜி" என்ற புனைப்பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருப்பினும் அவரது மரணத்திற்குப் பிறகு இந்தத் துறையில் அவர் செய்த பல பங்களிப்புகள் மறைக்கப்பட்டதுடன், நாட்டுப்புறவியல் மற்றும் மாந்திரீகத்தின் வரலாறு ஆகியவற்றில் இவரது பணி கல்வி ரீதியாக மதிப்பிழக்கப்பட்டது மற்றும் இந்த பகுதிகளில் அவரது முறைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மதம் மற்றும் இலக்கியம் இரண்டிலும் அவரது சூனிய-வழிபாட்டுக் கோட்பாட்டின் செல்வாக்கு பல்வேறு அறிஞர்களால் ஆராயப்பட்டது. மேலும் இவர் "சூனியக்காரப் பாட்டி" என்று அழைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_முர்ரே&oldid=3800057" இலிருந்து மீள்விக்கப்பட்டது