மாருதப்புரவீகவல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாருதப்புரவீகவல்லி சோழ மண்டலத்தை ஆண்ட திசையுக்கிரசிங்க மன்னனின் மகள்.

இளவரசி மாருதப்புரவீகவல்லி கூனல் தோற்றமுள்ள முனிவர் ஒருவரைக் கிண்டல் செய்ததினால் அவர் கொடுத்த சாபத்தால், குதிரை முகமும் குஷ்ட ரோகமும் அவளைப் பீடித்துக்கொண்டது, பல சிகிச்சைகள் செய்தும் அவளுக்கு நோய் மாறவில்லை. அவள் தரிசிக்காத கோவில்கள் இல்லை. அவளது நோய் தீராததைக் கண்டு, தவசி ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையில் உள்ள கீரிமலை என்ற திவ்விய தீர்த்தத்தில் நீராடச் சென்றாள். அவளுக்குத் துணையாகச் செவிலித்தாய், பணிப்பெணகள் போர்வீரர்களும்; சென்றார்கள். அவர்கள் தங்கியிருந்த இடம் “குமாரத்தி பள்ளம்” எனவும், அவள் குளித்த கிணறு இருந்த இடம் வல்லிக் கிணற்றடி என இடப்பெயர்களுடையன. இவ்விடங்கள் மாவிட்டபுரத்து அருகே காணப்படுகின்றன.

மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் பிறர், பார்வைக்கு நீங்கினாலும் அவளது சொந்த பார்வையிலிருந்தும் நினைவில் இருந்தும் நீங்கப் பெறவில்லை. அதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது முருகன் வழிபாட்டுக்கு முதல் பிள்ளையாருக்கு வழிபாடு செய்யாததே எனத் தெரியவந்தது. தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஏழு இடங்களில் பிள்ளையாருக்கு கோவில் அமைத்து மாருதப்புரவீகவல்லி வழிபட்டாள். கொல்லங்கலட்டி, வரத்தலம், ஆலங்கொல்லை, கும்பிழாவளை, பெருமாக்கடவை. ஆலங்குழாய், கல்வளை என்பனவே அப்பிள்ளையார் தலங்கலாகும். பிள்ளையாருக்குக் கோவில் அமைத்து வழிபட்ட பின் இளவரசியின் குதிரைமுகம் அவளது பார்வைக்கு முற்றாக நீங்கியது என்கிறது மரபு வழி வந்த கதை.

கி.பி 9-ஆம் நூற்றாணடில் வாழ்ந்த உக்கிரசிங்கன் என்ற மன்னன் குதிரைமுகம் நீங்கி அழகியத் தோற்றத்தோடு இருந்த மாருதப்புரவீகவல்லி பற்றி அறிந்தான். அவளை சந்தித்து அவள் மேல் காதல் கொண்டான். தான் உக்கிரசிங்கனை மணம் முடிக்க வேண்டுமாகில் முருகன் கோவில் ஒன்றினைக் கட்ட சம்மதிக்க வேண்டும் என்றாள். அவளது வேண்டுகோளின்படி மன்னனும் சம்மதம் தெரிவித்தான். மாவிட்டபுரம் முதலாகத் தென் திசைகளில் ஐந்து முருகன் கோவில்களை ஸ்தாபித்தாள். மாருதப்புரவீரகவல்லி முருகன் விக்கிரகத்தை தென்னிந்தியாவில் இருந்து தன் தந்தை மூலம் வரவழைத்தாள். காங்கேயன் (முருகன்) விக்கிரகம் இந்தியாவில் இருந்து வந்திறங்கிய துறைமுகம் காங்கேசன்துறை எனப்படுகின்றது. அத் துறைமுகம் மாவிட்டபுரத்துக்கு வடக்கே இரு மைல் தூரத்தில் உள்ள ஊராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதப்புரவீகவல்லி&oldid=3671560" இலிருந்து மீள்விக்கப்பட்டது