மாரியம்மன் கோயில், மேடான், வடக்கு சுமத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரியம்மன் கோயில்

மாரியம்மன் கோயில் (Sri Mariamman Temple, Medan) என்பது இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ரா மேடானில் உள்ள பழமையான இந்து கோயில் ஆகும். இந்த கோயில் மாரியம்மன் வழிபாட்டிற்காக 1884 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது [1] கம்பூங் மெட்ராஸ் அல்லது மேடானின் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து மதக் கடவுள்களுக்கான கோயிலாகும். திராவிடக் கட்டடக் கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கோயிலில் மாரியம்மனின் குழந்தைகளான விநாயகர், மற்றும் முருகன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்தக் கோயிலின் நுழைவாயில் பல தளங்களைக் கொண்டு அமைந்த கோபுரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கோபுரம் என்ற அமைப்பானது பொதுவாக தென்னிந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களின் வாயிலில் காணப்படுகின்ற அமைப்பாகும். கோயில் பொது வழிபாட்டாளர்கள் தைப்பூசம் மற்றும் தீபாவளி போன்ற திருவிழா நாட்களில் சந்திக்கும் இடமாக உள்ளது

வரலாறு[தொகு]

இந்தக் கோயில் 1884 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது மேரியன் நகரில் உள்ள மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். இது மாரியம்மனின் வழிபாட்டிற்கான இடமாக விளங்குகிறது. இந்த கோயில் மேடானில் ஆரம்ப காலத்தில் குடியேறிய தமிழ்க் குடியேற்றவாசிகள் அனைவரின் ஒன்றுபட்ட கூட்டுறவு முயற்சியால் கட்டப்பட்ட கோயிலாகும். அவர்கள் பின்னர் வடக்கு சுமத்ராவில் அமைந்துள்ள ஒரு தோட்ட நிறுவனத்தில் தொழிலாளர்களாகப் பணியாற்றினர். இந்த கோயிலின் கட்டுமானத்திற்காக நன்கொடையாளர்களாக இருந்த சாமி ரங்கா நாயக்கர் மற்றும் சோமுசந்திரம் வைத்தியர், ராமசாமி வைத்தியர் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.

மாரியம்மன் கோயில் தெக்கு உமர் 18 தெருவில் அமைந்துள்ளது. இந்த கோயில் கம்புங் மெட்ராஸ் எனப்படும் மதராஸ் கிராமம் அல்லது காலிங் கிராமம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது, இது மேடானில் உள்ள ஒரு பகுதியாகும், இந்துக்கள் முக்கியமாக தமிழர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். இந்த கோயில் சன் பிளாசாவை ஒட்டி அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் பிற பகுதிகளில் உள்ள பல இந்து கோவில்களைப் போலல்லாமல், ஜாவானிய அல்லது பாலினிய கலைப்பாணியுடன் ஒத்துப்போகின்ற தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பிற இந்து கோவில்களைப் போலவே இந்தக் கோயிலும் உள்ளது. இந்த மாரியம்மன் கோயில் இந்து தர்மத்திற்கான பயன்பாட்டிற்காக அக்டோபர் 23, 1991 ஆம் நாளன்று வடக்கு சுமத்ராவின் முன்னாள் ஆளுநர் எச்.ராஜா இனால் சிரேகர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

தெய்வங்கள்[தொகு]

மாரியம்மன் கோயிலுக்கு, மாரியம்மன் தெய்வத்தின் பெயரே சூட்டப்பட்டது. இந்து மத நம்பிக்கையின்படி மாரியம்மன் பல நோய்களைக் குணப்படுத்தல், சிறிய வடிவ நோய்களிலிருந்து விடுபட வைத்தல், கடுமையான நோய்களிலிருந்து காப்பாற்றல் ஆகியவற்றை பக்தர்களுக்குச் செய்கிறார். மேலும் வறட்சி காலத்தின்போது மழை பெய்யும் சக்தியும் மாரியம்மன் கொண்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர். தென்னிந்தியாவின் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற பல பகுதிகளில் இந்த தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். மாரியம்மனை வழிபடுவதோடு விஷ்ணு, விநாயகர், சிவன், துர்க்கை, முருகன் மற்றும் பிற கடவுள்களையும் வணங்குகின்றனர்.[2]

கட்டிடக்கலை[தொகு]

கோபுரத்தில் பல இந்துத் தெய்வ உருவங்கள் உள்ளன.

இந்த கோயிலைச் சுற்றி 2.5 மீட்டர் உயரமுள்ள சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், கோயிலின் நுழைவாயிலில் துவாரசக்தியைக் காணலாம். நுழைவாயிலுக்கு மேலே சிவபெருமானின் சிலை உள்ளது. துவாரசக்தி ஒரு பெண் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில் இது மாரியம்மனின் பாதுகாவலராகக் கருதுகின்றனர். மாரியம்மன் ஒரு அழகான முகம் கொண்டவர். அவருக்கு நான்கு கைகள் உள்ளன. ஒரு கையில் திரிசூலம், மற்றொரு கையில் பாசம் ஆகியவறைக் கொண்டுள்ளார். அவரது ஒரு கையானது அருள் தரும் நிலையில் உள்ளது.

வலதுபுறத்தில் உள்ள முன் சுவரில் லட்சுமியின் சிலை உள்ளது. நடுவில் உள்ள சிலை இந்து பூசாரியின் சிலை ஆகும். தலைப்பாகை அணிந்த நிலையில், அடர்த்தியான மீசையுடன் தமிழ் மக்களுக்கே உரிய பாணியில் அந்த சிலை சித்தரிக்கப்பட்டுள்ளது. முன் சுவரில், இடதுபுறத்தில் பார்வதியின் சிலை உள்ளது. இரு கைகளைக் கொண்ட பார்வதி சிலை, ஒரு கையில் தண்ணீர் பானை வைத்துள்ள நிலையில் உள்ளது.

கோயிலின் வழிபாடு நடைபெறும் இடத்தில் மூன்று அறைகள் உள்ளன. அந்த அறைகளில், விஷ்ணு, சிவா மற்றும் பிரம்மா உள்ளிட்ட பல சிலைகள் உள்ளன. கோயிலில் பல அழகிய ஆபரணங்கள் உள்ளன. மேலும் பிற சிலைகளும் உள்ளன. அவை பார்ப்பதற்கு அழகாக உள்ளன.

உள் சன்னதியில் முருகன், விஷ்ணு, குழந்தை முருகன், நாராயணன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இடது புறம் உள்ள சன்னதியில் விநாயகர், பிரம்மா, சிவன், விஷ்ணு, அகத்தியர், சிவன், பார்வதி, சிவனின் வாகனமான நந்தி ஆகிய சிலைகள் உள்ளன. பின்புறம் உள்ள சன்னதியில் கிருஷ்ணன், ராஜராஜேஸ்வரி, தில்லை நடராஜர் ஆகியோரின் சிலைகள் வழிபாட்டில் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]