எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாணிக்கவேலு நாயக்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
ஏப்ரல் 3, 1962 – ஏப்ரல் 15, 1964
பிரதமர்ஜவகர்லால் நேரு
வருவாய் துறை அமைச்சர் (மதராசு மாகாணம்)
பதவியில்
ஏப்ரல் 10, 1952 – ஏப்ரல் 3, 1962
பிரதமர்இராசகோபாலாச்சாரி,
காமராசர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-12-14)திசம்பர் 14, 1896
இறப்புசூலை 25, 1996(1996-07-25) (அகவை 99)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிசுயாட்சிக் கட்சி (1934),
காமன்வீல் கட்சி (1951-1954),
இந்திய தேசிய காங்கிரசு (1954 முதல்)
தொழில்அரசியல்வாதி

எம். அழகப்ப மாணிக்கவேலு நாயக்கர் (எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்)(M. Alagappa Manickavelu Naicker), திசம்பர் 14, 1896சூலை 25, 1996) நிழக்கிலாரும், வன்னியர் சமுதாயத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். இருமுறை தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும், ஆறாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகவும், இரு ஆண்டுகள் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பள்ளியர் சாதியில் பிறந்த மாணிக்கவேலு சட்டக் கல்வி கற்றவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில்[2] இணைந்து செயல்பட்ட அவர் பின்னர், அதிலிருந்து பிரிந்த சுராஜ்யக் கட்சியில் இணைந்தார். 1926 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 1937 வரை அப்பதவியில் நீடித்தார். 1935ல் சுராஜ்யக் கட்சி மீண்டும் காங்கிரசுடன் இணைந்து விட்டது. 1951ல் வன்னிய சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க காமன்வீல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இக்கட்சி வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் காமன்வீல் கட்சியும் எஸ். எஸ். ராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் இணைந்து போட்டியிட்டன).

மாணிக்கவேலு உட்பட 6 காமன்வீல் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆரம்பத்தில் த. பிரகாசம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று காமன்வீல் கட்சி. அரசுக்கு மாணிக்கவேலு அளித்த ஆதரவுக்கு பிரதிபலனாக அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் மாணிக்கவேலுவுக்கு விற்பனை வரித்துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. 1954ல் அவர் காமன்வீல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1957 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1962 வரை அமைச்சராகப் பணியாற்றினார். 1962-64ல் இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1964-70 காலகட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைத் தலைவராகப் பணியாற்றினார். 1996ம் ஆண்டு மரணமடைந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]