மல்லச்சந்திரம் கற்திட்டைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோரல் பாறையில் ஒரு கற்திட்டை
மோரல்பாறையில் உள்ள நூற்றுக்கணக்கான கற்திட்டைகளில் சில

மல்லச்சந்திரம் கற்திட்டைகள் என்பது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, மல்லச்சந்திரம் கிராமத்தில் உள்ள மோரல்பாறை என்ற சிறு குன்றின்மீது நூறுக்கும் மேற்பட்ட[1] பெருங்கற்கால கற்திட்டைகள் (dolmenoid cist) ஆகும். இவை மனிதன் தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தியதா அல்லது இவை ஈமச்சின்னக்களா என்றவற்றிலும் இதன் காலம் போன்றவற்றையும் கணிப்பதில் ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது. இவை, மோரல் பாறை குன்றில் நூற்றுக்கணக்காகக் காணப்படுகின்றன.[2] [3][4] இவை கி.மு. 500க்கு முற்பட்டவையாகக் கருதப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிதைக்கப்பட்டு உள்ளன. ஒன்றிரண்டுதான் அதன் வடிவம் தெரியும் விதத்தில் உள்ளன. இவை நான்கு புறமும் கற்பலகையைச் சுவர் போல வைத்து மேலே ஒருகற்பலகையைக் கூரையாக வைத்துள்ளனர். இந்தக் கற்திட்டைகளின் கிழக்குப்பக்கமாக வட்டவடிவிலான சிறிய துளை ஒன்று இருக்கின்றது. இதைச் சுற்றி அரை வட்டவடிவ உச்சியைக்கொண்ட உயரமான கற்பலகைகளை அமைத்துள்ளனர். இதைச்சுற்றி சுவர் போன்று கற்களால் வட்ட வடிவில் அமைத்துள்ளனர். இதைப்போன்ற கற்திட்டைகள் சென்னசந்திரம், பீமண்டபள்ளி, கங்கலேரி போன்ற இடங்களில் உள்ளன.

அமைப்பு மற்றும் அளவுகள்[தொகு]

இயற்கையாக அமைந்த விரிந்த கற்பாறையின் மேல் நான்கு பக்கங்களிலும் நான்கு பெரிய கற்பலகைகளை ஒன்றுடன் ஒன்று தாங்கி நிற்கின்ற அமைப்பில் கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு கற்பலகைகளும் கிட்டத்தட்ட 2.00*1.70, 010 மீட்டர் அளவுகளில் உள்ளன. இதற்கு மேலுள்ள மூடுகல் 2.10, 3.10, 0.15 அளவில் உள்ளது. இக்கற்திட்டைகளில் பெரியவை பத்து சதுர அடிகளில் நான்கு கற்களைக் கொண்டு சுவர்கள் வைத்து அதன் மேல் 12 சதுர அடிகளில் உள்ள கருங்கற்பலகை கொண்டு மூடப்பட்டுளன. இதிலுள்ள நான்கு சுவர்களில் கிழக்குப்பகுதியிலுள்ள கற்பலகையில் வட்ட வடிவில் இடு துளை ஒன்றும் 40 செ. மீ முதல் 50. செ.மீ விட்டத்தில் காணப்படுகிறது. மைய அறையிலிருந்து 70. செ.மீ தூரத்தில் பக்கத்திற்கு ஒன்று வீதம் உயரமான கற்பலகைகள் நான்கு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்பலகையின் அடிப்பகுதி சமமாகவும் மேல்பகுதி அரைவட்ட வடிவிலும் காணப்படுகின்றன. இவை நன்கு செதுக்கப்பட்டவை போன்றும் ஒரே மாதிரியான அமைப்பிலும் காணப்படுகின்றன இக்கற்பலகைகள் 3.25 மீ உயரமும், 2.15 மீ முதல் 2 மீ வரை அகலமும் கொண்டுள்ளன. இந்த அரைவட்டவடிவ கற்பலகைகளிடையே செவ்வக வடிவ கற்பலகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை அரைவட்டப்பலகைகளை விட சற்று உயரம் குறைந்தவை.

இங்கு உள்ள ஒரு பாறை ஓவியம்

ஓவியங்கள்[தொகு]

இங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்திட்டைகளில் வெள்ளைவண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. கோடுகளால் ஆன முக்கோண அமைப்புடைய மனித உருவங்கள், மலைகள், மரங்கள், விலங்குகளின் மேல் அமர்ந்த நிலையிலுள்ள மனித உருவங்கள், அம்பை வில்லில் வைத்து எய்தும் நிலையிலுள்ள மனித உருவங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் வில் அம்பு போன்றவற்றை பெருங்கற்கால மக்கள் பயன்படுத்தினர் என அறியலாம்.[5]

காலம்[தொகு]

கி.மு. முதலாம் ஆயிரவாண்டு[தொகு]

இதை பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலத்தைச் சேர்ந்தது என்று கருதுபவர்கள் இத்திட்டைகளை கி.மு. ஆயிரவாண்டு பழமை வரை கொண்டு செல்கின்றனர். அதன் காரணம் இதில் காணப்படும் இடுதுளை இரும்புக்கருவிகளால் துளைக்கப்பட்டிருக்கலாம் என்பதே ஆகும். தமிழகத்தின் இரும்புக்காலம் பெரும்பாலும் கி.மு. முதலாம் ஆயிரவாண்டு பிறகே கணிக்கப்படுகிறது.

கி.மு. பத்தாம் ஆயிரவாண்டு[தொகு]

கற்காலம்[தொகு]

இரும்புக்காலம்[தொகு]

பெருங்கற்சமூகம்[தொகு]

புதிய கற்காலம்[தொகு]

மூலம்[தொகு]

  • முனைவர் கொடுமுடி ச. சண்முகன் (2006). பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன் 2. சென்னை: மீனாகோபால் பதிப்பகம். 

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Tourist Places". www.krishnagiri.tn.nic.in. www.krishnagiri.tn.nic.in. Archived from the original on 2008-03-11. பார்க்கப்பட்ட நாள் 2013-01-18.
  2. [1]
  3. http://www.dailythanthi.com/News/Districts/2015/09/08003958/History-Most-seats-Students-Review.vpf
  4. ச. செல்வராஜ், பெருங் கற்படைக் காலம் (இரும்பு காலம் முதல் சங்ககாலம் வரை-4, கட்டுரை, தினமணி 11, திசம்பர், 2015
  5. தமிழகத் தொல்லியலும் வரலாறும் (தகடூர்ப்பகுதி). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2009. பக். 128-129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-234-1562-1.