உள்ளடக்கத்துக்குச் செல்

மருதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருதன் (Marudhan, பிறப்பு ஜூன் 3, 1975), தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். சமூகம், அரசியல், வரலாறு உள்பட பல்வேறு துறைகள் சார்ந்து எழுதி வருகிறார். இந்தியாவின் மிக முக்கியமான வரலாற்று ஆய்வாளர்களைச் சந்தித்து நேர்காணல் செய்துவருகிறார்.[1] காலச்சுவடு, இந்து தமிழ் திசை, விகடன் உள்ளிட்ட இதழ்களில் பத்திகள், கட்டுரைகளை எழுதி வருகிறார். 2006-ஆம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.

எழுத்து வாழ்க்கை

[தொகு]
மருதன்
மருதன்
மருதன்
பிறப்பு3 ஜூன் 1975
ஆவடி, சென்னை, தமிழ்நாடு
தொழில்எழுத்தாளர். ஆசிரியர், கிழக்கு பதிப்பகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரொமிலா தாப்பர், அசோகர், இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை
குடும்பத்தினர்பெற்றோர்: வி.டி.கங்காதரன், இந்திரா

மனைவி: அனுஷா ராமகிருஷ்ணன்

மகள்: லூனா ஜெய்
இணையதளம்
https://marudhan.wordpress.com/

மருதன் இளங்கலை உளவியலும் முதுகலை ஆங்கில இலக்கியமும் படித்திருக்கிறார். தனியார் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ’Critique’ ஆங்கில இலக்கிய இதழில் எழுத ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதுவதுதான் சிறந்தது என்கிற முடிவில் தமிழில் எழுத ஆரம்பித்தார்.

2004ஆம் ஆண்டு ’கல்கி’ பத்திரிகையின் ’சென்னை ஸ்கேன்’ இணைப்பிதழில் பகுதி நேர பத்திரிகையாளராகச் சேர்ந்தார். ‘உள்ளும் புறமும்’ என்கிற தலைப்பில் ஓராண்டுக் காலம் இந்திய அரசியல் களம் குறித்து கல்கியில் எழுதினார். இளம் வாசகர்களுக்காகக் ’கோகுலம்’ சிறுவர் மாத இதழில் கதைகள், வரலாற்றுக் கதைகள், அறிவியல் புனைகதைகள், தேவதைக் கதைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார்.

2006ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்[2].

பத்திரிகைகள்

[தொகு]

2008ல் ஆனந்த விகடனில் ’பாஸ்போர்ட்[3]’ என்கிற தலைப்பில் சர்வதேச அரசியல் களம் குறித்து ஒன்றரை ஆண்டுகள் எழுதினார்.

2017இல் விகடன் இதழில் ‘அகதிகள்[4]’ என்கிற தலைப்பில் தொடர் எழுதினார். பின்னர் இந்தத் தொடர் ‘அகதிகள்’ என்கிற புத்தகமாகவும் வெளிவந்தது.

சுட்டி விகடனில் ‘சென்றதும் வென்றதும்[5]’ என்கிற கடல் பயணிகள் குறித்த ஒரு தொடரை எழுதினார். இது 2017இல் ‘கடல் பயணங்கள்’ என்கிற  புத்தகமாக வந்தது.

2018இல் அவள் விகடனில் ‘கலகக் குரல்[6]’, ‘ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்’ ஆகிய தலைப்புகளில் உமா சக்ரவர்த்தி, கங்குபாய் ஹங்கல், ராஜனி திராணகம, அனுராதா கண்டி, சில்வியா பிளாத், அருந்ததி ராய், ரொமிலா தாப்பர் போன்ற 42 ஆளுமைகள் குறித்த தொடரை எழுதினார். 2020ஆம் ஆண்டு இது, ‘ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்’ என்கிற நூலாக வெளிவந்தது.

2021இல் ஜூனியர் விகடனில் ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை[7]’ என்கிற வரலாற்றுத் தொடரை 70 அத்தியாயங்கள் எழுதினார். முற்றிலும் அயலவர் குறிப்புகளின் அடிப்படையில் விவரித்து எழுதப்பட்ட இந்தத் தொடர், 2022இல் புத்தகமாக வெளிவந்தது.

கிழக்கு பதிப்பகம் ’ஆழம்’ என்கிற அரசியல் மாத இதழை 2011 பிப்ரவரியில் ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக இருந்தார் மருதன்.

கிழக்கு பதிப்பகத்தின் தமிழ்பேப்பர்.நெட் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இந்த இணையதளத்தில் ‘உலகை மாற்றிய புரட்சியாளர்கள்’ என்கிற தலைப்பில்  எழுதினார். 2014 ‘உலகை மாற்றிய புரட்சியாளர்கள்’  நூலாக வெளிவந்தது.

2015இல் மலாலா குறித்து ஒரு தொடர் ’குங்குமம் தோழி’ இதழில் எழுதினார். இந்தத் தொடர் 2016இல்  ‘உரிமைக்குரல் – மலாலாவின் போராட்டக் கதை[8]’ என்கிற நூலாக வெளிவந்தது.

2016இல் குங்குமம் தோழி இதழில், ‘100 பொருட்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறு’ என்கிற தொடரை 50 வாரங்கள் எழுதினார்.

இத்தொடர் 2022ஆம் ஆண்டு, ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’ என்கிற நூலாக ‘ஹெர் ஸ்டோரிஸ்’ பதிப்பகத்தில் வெளிவந்தது. இது லூனா ஜெய் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ‘Angels Witches Women’ என்ற தலைப்பில் 2023ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

இந்து தமிழ் திசை நாளிதழில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடுப்பக்கத்தில் அரசியல், வரலாற்றுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்[9].2017-2022இல் இந்து தமிழ் திசை நாளிதழின் இளம் வாசகர்களுக்கான ‘மாயாபஜார்’ இணைப்பிதழில், ‘இடம் பொருள் மனிதர் விலங்கு’, ‘மாய உலகம்’, ‘தேன்மிட்டாய்’ ஆகிய தலைப்புகளில் இளம் வாசகர்களுக்காக எழுதப்பட்ட 175 கட்டுரைகள்[10], இந்து தமிழ் திசை பதிப்பகத்தில் 6 புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

இந்திய வரலாறு

உலக வரலாறு, உலக அரசியல் என்று இருந்த மருதனின் ஆர்வம் இந்திய வரலாறு மீது திரும்பியது. ரொமிலா தாப்பர், நயன்ஜோத் லாஹிரி, மொழியியல் அறிஞர் கணேஷ் தேவி, ராமச்சந்திர குஹா, உமா சக்ரவர்த்தி, பக்தவத்சல பாரதி, ஸ்ரீநாத் ராகவன், தனிகா சர்க்கார், கேசவன் வெளுத்தாட்ட உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடினார். அவற்றில் சில நேர்காணல்களாகக் ’காலச்சுவடு’ இதழில் வெளிவந்துள்ளன.[9]

ரொமிலா தாப்பர்

வரலாற்று ஆசிரியரும் பேராசிரியரும் எழுத்தாளருமான ரொமிலா தாப்பரை, டெல்லியில் அவருடைய இல்லத்தில் 2 முறை சந்தித்து, விரிவான நேர்காணலையும் நிகழ்த்தினார். இந்த நேர்காணல் ‘காலச்சுவடு’ இதழில் வெளிவந்தது. ‘ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்’ என்கிற நூல் 2022ஆம் ஆண்டு வெளியானது.

மொழிபெயர்ப்பு

ஃபிரண்ட்லைன் இளங்கோவன் ராஜசேகரன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், ‘கிழக்கு டுடே’ இணையதளத்தில் ’சாதியின் பெயரால்’ என்கிற தொடராக, 2022ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தவர் மருதன்.

எழுதியுள்ள நூல்கள்

[தொகு]

எழுதிய நூல்கள்

·      வரலாறு எனும் கற்பனை

·      ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

·       அசோகர்

·      இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை (இந்திய வரலாறு)

·       ஹிட்லர்

·       ஹிட்லரின் வதைமுகாம்கள்

·       முதல் உலகப் போர்

·       இரண்டாம் உலகப் போர்

·      தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்

·      அகதிகள்

·      உலகை மாற்றிய புரட்சியாளர்கள்

·      சிம்ம சொப்பனம்: ஃபிடல் காஸ்ட்ரோ

·      வேண்டும் விடுதலை: சே குவேரா

·       சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?

·      இந்தியப் பிரிவினை

·      ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் (40 பெண் ஆளுமைகள்)

·       திபெத்: ஓர் அரசியல் வரலாறு


இளம் வாசகர்களுக்கான நூல்கள்

·     பாரதியின் பூனைகள்  

·      இந்தியா என்றால் என்ன? 

·       கிப்ளிங்கின் காடு

·       நான் ஒரு கனவு காண்கிறேன்

·       பாரதிதாசன் பேசுகிறேன்

·       தேன்மிட்டாய்

·       ஏன் வேண்டும் வரலாறு?

·       ஒரு பூ ஒரு பூதம்

·       உலகை மாற்றிய கதாபாத்திரங்கள் (கட்டுரைகள்)

·       உலகை வசப்படுத்துவது எப்படி? (வரலாற்றுக் கதைகள்)

·       கனவில் வந்த கரடி (தேவதைக் கதைகள்)

·       கண்ணாடி கிரகத்தின் கவலை (அறிவியல் புனைகதைகள்)

விருதுகள்

[தொகு]

2018 - கடலூர் தேசியக் குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் ‘சிறந்த சிறார் எழுத்தாளர்’ விருது, இளம் வாசகர்களுக்கான படைப்புகளுக்காக வழங்கப்பட்டது.

2020 - ’வாசக சாலை’ வழங்கிய சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான விருதை ‘ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்’ நூல் பெற்றது.

2021 - ’பாரதி தமிழ் இலக்கியப் பேரவை விருது’. ‘அகதிகள்’ நூலுக்கு வழங்கப்பட்டது.  

2022 - திருச்சி எஸ்.ஆர்.வி. கல்விக் குழுமம் மருதனுக்கு ‘படைப்பூக்க விருது’ வழங்கியது.

2022 - ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் ’ஆன்றோர் முற்றம் பாவை இலக்கிய விருது’ இளம் வாசகர்களுக்கான படைப்புகளுக்காக அளிக்கப்பட்டது.

2023 - தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’ நூலுக்கு ’மேலவாசல் கோ. ராமசாமி நினைவு விருது’ வழங்கி, சிறப்பித்தது.

2024 - கம்பம் ‘பாரதி இலக்கியப் பேரவை’ சிறுவர் இலக்கியப் பிரிவில் மருதன் எழுதிய ‘உலகை வசப்படுத்துவது எப்படி?’ என்கிற நூலுக்கு முதல் பரிசை வழங்கியது.

2025 - எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் 2025 அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது 'கண்ணாடி கிரகத்தின் கவலை'  (அறிவியல் புனைவு) எனும் கதைத் தொகுப்புக்கு வழங்கப்பட்டது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காலச்சுவடு | கற்பனை இல்லாமல் வரலாறு இல்லை". www.kalachuvadu.com. Retrieved 2025-04-28.
  2. "எங்களைப் பற்றி". கிழக்கு டுடே (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-28.
  3. Correspondent, Vikatan (2016-01-20). "ரோஹித் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா? - மருதன்". https://www.vikatan.com/. Retrieved 2025-05-28. {{cite web}}: |last= has generic name (help); External link in |website= (help)
  4. Correspondent, Vikatan (2017-12-28). "நான் அகதி! - 13". https://www.vikatan.com/. Retrieved 2025-05-28. {{cite web}}: |last= has generic name (help); External link in |website= (help)
  5. Correspondent, Vikatan (2015-11-16). "சென்றதும் வென்றதும்!". https://www.vikatan.com/. Retrieved 2025-05-28. {{cite web}}: |last= has generic name (help); External link in |website= (help)
  6. G, MARUDHAN (2018-10-30). "லக்கி - ஆலிஸ் செபோல்ட்". https://www.vikatan.com/. Retrieved 2025-05-28. {{cite web}}: External link in |website= (help)
  7. Khan, MARUDHAN G,Hasif (2021-11-24). "இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 61 - இந்தியாவை கண்டுபிடித்தது யார்?". https://www.vikatan.com/. Retrieved 2025-05-28. {{cite web}}: External link in |website= (help)CS1 maint: multiple names: authors list (link)
  8. "மலாலா மேஜிக்-16 - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. Retrieved 2025-05-28.
  9. "காலச்சுவடு | மே 2025". kalachuvadu.com. Retrieved 2025-05-28.
  10. WEB, PT (2025-10-25). "எஸ்.ஆர்.எம் தமிழ்ப்பேராய விருதுகள்| கௌரவிக்கப்பட்ட தமிழறிஞர்கள்!". Puthiyathalaimurai. Retrieved 2025-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதன்&oldid=4392659" இலிருந்து மீள்விக்கப்பட்டது