மரகதலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கிறது. இந்த மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பூசைக்காக வைத்துள்ளார்கள். இந்த லிங்கத்தில் பால் மற்றும் நீர் போன்றவற்றை கொண்டு அபிசேகம் செய்யும் போது நிறம் மாறுவதை பக்தர்கள் தெய்வ செயல் என நம்புகிறார்கள்.

தமிழகத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணங்களால் எண்ணற்ற மரகத லிங்கங்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் பல அரசு மற்றும் அறநிலையத்துறையால் மீட்க முடியாமல் போகிறது.

மரகதத்தின் பண்புகள்[தொகு]

மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கன், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

நவரத்தினம்[தொகு]

மரகதக்கல் ஒன்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. சில குறிப்பிட்ட நவரத்தினங்களுக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.

ஆன்மீகப் பண்புகள்[தொகு]

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது சிறந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. சிலைகளும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத்தனர். மன்னர்கள் இந்த வகை லிங்கங்கள் கோவிலில் வைத்து வழிபடுவதையே சிறப்பு என்று கருதினார்கள். மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகதலிங்கத்தை வணங்கலாம்.

மரகத லிங்கம் உள்ள தலங்கள்[தொகு]

சப்த விடங்க தலங்கள்[தொகு]

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிபாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.

சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

திருஇடைச்சுரம்[தொகு]

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் செல்லும் பாதையில் சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. திருஇடைச்சுரம் என்ற திருத்தலம். தற்போது இந்த இடம் திருவடி சூலம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு சிவலிங்கம் ஒரு சுயம்பு மரகதலிங்கம். சிவன் பச்சையாகக் காட்சியளிக்கின்றார். கற்பூர சோதி காட்டும்போது அந்த ஒளி லிங்கத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கின்றது. கண்ணாடியைப் போன்று தெரிகிறது. புற்றுருவாக இருந்த சுவாமிக்கு அம்பிகை பசுவாக வந்து பால் பொழிந்த தலம் இதுவாகும்.

சிறுகரும்பூர் காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்[தொகு]

வேலூர் காவிரிப்பாக்கம் அருகே உள்ள சிறுகரும்பூரில் உள்ள சுந்தர காமாட்சி சமேத திரிபுராந்தக ஈஸ்வரர் கோயிலில் உள்ள மரகத லிங்கம் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது. இப்போது (கடந்த ஜூலை மாதம்) இது திருடு போனது.

மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலை[தொகு]

திருச்சி அருகிலுள்ள மரகதாசலேசுவரர் கோவில் திருஈங்கோய்மலையில் சிவலிங்கம், பெயருக்கேற்ப மரகதக்கல் நல்ல பச்சை நிறத்தில் பளபளப்பாக இருக்கிறது.

நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர்[தொகு]

நஞ்சுண்டேஸ்வரர் கோவில், நஞ்சன்கூடு மைசூர் ஒரு சிவன் கோவில். இங்கு மாமன்னர் திப்பு சுல்தான் ஒரு மரகதலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில், உத்தரகோசமங்கை[தொகு]

இராமநாதபுரம் மாவட்டம் , உத்தரகோசமங்கையில் உள்ளது மங்களேசுவரி சமேத மங்களநாத சுவாமி கோவில். இக் கோவில் வளாகத்திற்குள்ளே நடராஜருக்கென்று தனி சன்னதி உள்ளது. இங்கு உலகப் பகழ் பெற்ற பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இக்கோவிலில் உள்ள மரகதலிங்கத்திற்கும், ஸ்படிகலிங்கத்துக்கும் தினசரி அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் நடராசருக்கு அபிஷேகம் நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தன்று பச்சை மரகதக்கல் நடராசருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்கும் சக்தி இல்லாத மென்மையான பண்புகள் கொண்ட பச்சை மரகதக்கல்லால் ஆன நடராசர் சிலையை சந்தனக் கலவையைப் பூசி பாதுகாத்து வருகின்றனர். திருவாதிரைக்கு முதல் நாள் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப் பூச்சு கலைக்கப்படுகிறது.

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்[தொகு]

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை. இங்குள்ளது போன்ற பெரிய மரகதலிங்கம் வேறு எங்கும் இல்லை. இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரதகப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. மரகத லிங்கத்தின் சிறப்புகள் என்ன?
  2. திரு இடைச்சுரம் மரகதலிங்கம்
  3. மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல்
  4. சிறுவாபுரி முருகன் ஆலயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரகதலிங்கம்&oldid=3129722" இலிருந்து மீள்விக்கப்பட்டது