மதயானைக் கூட்டம் (ஆங்கிலம்: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்தப் பரபரப்பு திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]
இந்து தமிழ் நாளிதழில் வந்த விமர்சனத்தில் "வறட்டு கவுரவமும் பிடிவாதமும் ஊறிப்போன மனிதர்கள். அவற்றுக்காக ரத்தம் சிந்தவும் சிந்தவைக்கவும் தயங்காதவர்கள். இவர்களது கதைதான் மதயானைக் கூட்டம்... பண்பாட்டுக் கூறுகளின் யதார்த்தமான சித்தரிப்பு, வலுவான பாத்திரப் படைப்புகள், வசனங்கள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை படத்தின் வலுவான அம்சங்கள். சாதியக் கூறுகளை அப்பட்டமாக முன்வைப்பது, திரைக்கதையின் தொய்வு ஆகியவை பலவீனங்கள். மதயானைக் கூட்டம் அதன் குறைகளை மீறி, மண் சார்ந்த வலுவான படமாக அமைந்துள்ளது" என்று எழுதினர்.[4]