மண்டைதீவுக் கடல் படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டைதீவுப் படுகொலைகள்
இடம்மண்டைதீவு கடல்பகுதி, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம், இலங்கை
நாள்10 சூன் 1986 (+8 கி.நே)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
இலங்கைத் தமிழர்
இறப்பு(கள்)31
தாக்கியோர்இலங்கைக் கடற்படை

மண்டைதீவுக் கடல் படுகொலைகள் (Mandaithivu sea massacre) இலங்கையின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மண்டைதீவுக் கடற்பகுதியில் தமிழ் மக்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதல்கள் ஆகும். இதன் போது, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெரும்பாலும் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.[1][2][3]

நிகழ்வு[தொகு]

மண்டைதீவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் அமைந்திருக்கும் ஒரு தீவு ஆகும். இது யாழ்ப்பாண நகருடன் சாலை வழியே இணைகின்றது.

1986 சூன் 10 ஆம் நாள் அன்று, குருநகர் துறையில் இருந்து தூயஒளி என்ற படகு மீனவர்களுடன் புறப்பட்டது. முகத்துவாரம் கலங்கரைவிளக்கைத் தாண்டி மண்டைதீவுக் கடலில் மீனவர்கள் இறங்கினர். 27 பேர் கரையிறங்க ஏனையோர் வலை வளைக்க ஆயத்தமாக படகில் இருந்தனர். இலங்கைக் கடற்படைச் சேர்ந்தவர்கள் கறுப்பு உடை அணிந்தவாறு கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்களை அணுகினர். மீனவர்கள் தாம் பொது மக்கள் எனத் தெரிவிக்கும் பொருட்டு தமது கைகளை உயர்த்தினர். ஆனாலும், கடற்படையினர் மீனவர்களைத் தாக்கத் தொடங்கினர். மீனவர்களின் படகுகளையும் மீன் வலைகளையும் சேதப்படுத்தினர். அங்கிருந்த அனைத்து மீனவர்களையும் கோடரி வாள் கத்தி பொல்லாலும் துவக்குப் பிடியாலும் வெட்டியும் கொத்தியும் அடித்தும் சித்திரவதைக்குட்படுத்திப் படுகொலை செய்தனர். மீனவர்களின் கண்கள் குத்தப்பட்டுக் குழிகளாயின. சிலரது வயிற்றுப் பகுதி கிழிக்கப்பட்டிருந்தன. குருநகரைச் சேர்ந்த 30 மீனவர்களும், மண்டைதீவைச் சேர்ந்த ஒரு மீனவரும் இவ்வாறு கொல்லப்பட்டனர்.[2] சேமோன் மரியதாஸ் (அகவை 41) என்ற ஒரேயொரு மீனவர் மட்டுமே உயிர் தப்பினார்.[1] கொல்லப்பட்ட மீனவர்கள் 13 முதல் 62 வயது வரையானவர்கள் ஆவர்.[3]

நினைவு நாள்[தொகு]

யாழ் குடாநாட்டில் சூன் 10 அன்று இந்நிகழ்வு நினைவு நாளாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னம் 2004 ஆம் ஆண்டில் 18-வது ஆண்டு நிறைவன்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் 1996 ஆம் ஆண்டில் இலங்கை படைத்துறையால் அழிக்கப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Massacred Mandaitivu Tamil fishermen remembered". TamilNet. பார்க்கப்பட்ட நாள் 13 April 2015.
  2. 2.0 2.1 Massacres of Tamils(1956-2008). Chennai: Manitham Publications. 2009. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-909737-0-0. 
  3. 3.0 3.1 "Fishermen massacred by Navy - 31 civilians killed". TamilCanadian. Archived from the original on 21 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)