பெர்டினண்ட் மகலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகலன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெர்டினண்ட் மகலன்
Ferdinand Magellan
பிறப்புபெர்னாவோ டெ மகெலாஸ்
1480
சப்ரோசா, போர்த்துகல்
இறப்புஏப்ரல் 27, 1521 (அகவை 40–41)
மக்தான், பிலிப்பீன்சு
தேசியம்போத்துக்கீசர்
அறியப்படுவதுஉலகைச் சுற்றிவந்த முதல் கப்பலின் கப்டன்
கையொப்பம்
மகலன் சென்ற பாதை

பெர்டினண்ட் மகலன் அல்லது பெர்டினண்டு மகாலன் (போர்த்துகீசு: Fernão de Magalhães, IPA[fɨɾˈnɐ̃ũ dɨ mɐgɐˈʎɐ̃ĩʃ]; எசுப்பானியம் Fernando de Magallanes) (1480 - ஏப்ரல் 27, 1521) போர்த்துக்கேய மாலுமி. உலகைச் சுற்றிவந்த முதல் மனிதராக அறியப்படுகிறார். 1519 இல் உலகைக் கப்பல் மூலம் சுற்றிவந்து நிறைவு செய்தார். பசுபிக் கடலுக்கு அப்பெயரை இவர் இட்டார்.

குடும்பச் சூழல்[தொகு]

போர்ச்சுகல்லின் வடக்குப் பகுதியிலுள்ள பொன்ரே டே பாரா எனும் பகுதியில் மகலன் பிறந்தார். இவருக்கு பன்னிரண்டு வயது இருக்கும்போதே 1492 இல் அவனது அப்பா இரண்டாம் ஜோன் மன்னனின் அரசிக்கு எடுபிடி வேலை செய்ய அரண்மனைக்கு அனுப்பினார். இருப்பினும் அவனது படிப்பு தடைப்படவில்லை. அவனது படிப்புச் செலவினை இரண்டாம் ஜோன் மன்னன் ஏற்றுக் கொண்டார். மகலனின் அண்ணாவின் பெயர் டியோகோ. அவனும் இரண்டாம் ஜோன் மன்னனின் ராணியான லியொனாராவிடம் பணி செய்து கொண்டிருந்தான். எதையும் ஆர்வத்துடன் செய்யும் மகலனை ஜோன்னுக்குப் பிடித்திருந்தது. அதனால் அவர் மகலனுக்கு இசை, நடனம், வேட்டையாடுதல் ,குதிரையேற்றம், குதிரைச்சண்டை, வாள்பயிற்சி, வானவியல், வரைபடம் தயாரித்தல் ஆகியவற்றையும் கற்றுக்கொடுத்தார். மகலன் படித்துக்கொண்டிருக்கும்போதே கொலம்பஸ் அதாவது 1492 ஆக்டோபர் 12 அன்று அமெரிக்காவில் கால் பதித்தார். இதனைக் கேட்ட மகலன் தானும் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வங்காட்டினான். மகலனின் கடல் ஆர்வத்தைத் தூண்டும் முன்னோடி நபராக வாஸ்கோ ட காமா விளங்கினார்.

குடியேற்றவாதமும் மகலன் கடல் பயணமும்[தொகு]

குடியேற்ற வாதம் எனப்படுவது, மேற்குலக நாடுகள் பூமியிலுள்ள பல்வேறு நாடுகளைக் கைப்பற்றி உரிமைக் கொண்டாடுவதும், அந் நாடுகளைத் தம் நாட்டின் ஒரு பகுதியாக எண்ணி தம் குடிமக்களை ஆங்கே குடியமர்த்தி வாழச் செய்வதும், நிர்வகிக்க முனைவதும், தம்முடைய பண்பாடு, சமூக உணர்வு ஆகியவற்றை வேறூன்றச் செய்து, சமூக, அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றில் தம் இயல்புகளைப் புகுத்துவதும், கைப்பற்றப்பட்ட நாடுகளின் தனித்தன்மைகளைச் சிதைத்து மாற்றியமைப்பதும் ஆகும்.[1]

குடியேற்றத்திற்கான அடிப்படைக் காரணிகள்[தொகு]

மேற்கத்திய வாதத்தின் (Westernization) தலையாய குறிக்கோளாக விளங்கும் குடியேற்றம் உருவாவதற்கு மூன்று அடிப்படைக் காரணிகள் உள்ளன. அவையாவன:

  1. தரைவழி வாணிபத் தடை
  2. கல்வியின் மறுமலர்ச்சித் தன்மை
  3. புதிய கடல்வழிக் கண்டுபிடிப்பின் மீதான ஆர்வம்

மகலனின் கடல்வழிப் பயணத்திற்கான தூண்டுகோல்கள்[தொகு]

மேற்கத்திய நாடுகளிடையே தோன்றிய கல்வி மறுமலர்ச்சியினால் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளும், கலை, இலக்கியப் படைப்புகளும் உருவாகின. புதிய சிந்தனைகள் பல மக்களிடையே விதைக்கப்பட்டன. பழைமை வாதங்கள் புறந்தள்ளப்பட்டன. புதுமைகள் புகுத்தப்பட்டன. இது அனைத்திலும் நிகழ்ந்தது. மகலன் காலத்தில், பூமி தட்டையானது என்றும், ஓரிடத்திலிருந்து கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டு சுற்றிவர இயலாது என்றும் எடுத்துரைக்கப்பட்டு வந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் புவி கோள வடிவமுடையது என்னும் கருத்துப் பரப்பப்பட்டது. கி.பி.1492 இல் முதலாவது புவிக்கோளம் அமைக்கப்பட்டது.[2] இக் காலகட்டத்தில் தோன்றிய பூமி பற்றிய புதிய கருத்துகளும், புதிய கடல்வழிப் பாதைகளின் தேவைகளும், புதிய குடியேற்ற நாடுகளின் மீதான வேட்கைகளும் கடலோடிகளிடத்தில் பெரும் விருப்பத்தை உண்டுபண்ணியிருந்தன. தவிர, சில முன்னோடிக் கடலோடிகளின் உந்துதல்களும் கடல் பயணத்தின் மீதான உள்ளார்ந்த விருப்பங்களும் மகலனின் கடல்வழிப் பயணத்திற்கு தூண்டுகோல்களாக அமைந்தன.

மகலனின் சாதனைகளின் ஆரம்பம்[தொகு]

1505 இல் வாஸ்கோடகாமா கீழைத்தேசம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டார். இதில் இருபத்தொரு பயணக்கப்பல்கள் பயணித்தன. ஒரு கப்பலின் தளபதியாக மகலனும் திகழ்ந்தார். இதுவே மகலனின் முதல் கடல் பயணம் ஆகும். இதன்போது மொரோக்கோவின் பழங்குடியினரான மூர்ஸ் இன மக்களுடன் போர்புரிந்தபோது மகலனின் இடதுகளில் படுகாயம் ஏற்பட்டது. மகலனின் முதல் வரைபடம் போர்ச்சுக்கல்லில் இருந்து ஸ்பைஸ் தீவுகளுக்குச் செல்லும் வழி. மகலனை மன்னர் மானுவேல் அவமானப்படுத்தியாதல் மனமுடைந்து ஸ்பானியாவில் இருந்து வெளியேறி போல்டோர்க்குச் சென்றார். இவரை ஸ்பெயினுக்குச் செல்லும்படி வானவியல் நிபுணரான டை டி பிலேரியா, கப்பலோட்டி ஜான், அரசசவை அதிகாரியான பார்போசா கூறினர். இவர்கள் கூறியது சரியா என்று யோசித்துக் கொண்டிருந்தார் மகலன். இந்நிலையில் இந்தியாவின் மேற்குத திசையில் குறுகிய கடல்வழிப் பாதையைக் கண்டுபிடிப்பது ஸ்பெயின் அரசனின் விருப்பமாக இருந்தது.[3] பின் ஸ்பெயின் நாட்டு மன்னர் மகலனிடம் ஸ்பைஸ் தீவுக்கான வழி உள்ளது எனத் தெரிந்ததும் ஸ்பெயின்னுக்குக் கூப்பிட்டார். மகலன் மன்னர் மானுவேலைப் பழிவாங்கும் நோக்கில் 1512 ஆக்டோபர் 12 அன்று போர்ச்சுக்கல்லை விட்டு வெளியேறினார். மகலன் 1519 செப்டெம்பர் 21 அன்று ஹான்செப்சன், சாண்டியாகோ, சான் அந்தோனியா, டிரினியாட், விக்டோரியா எனும் ஐந்து கப்பல்கள் உட்பட 241 மாலுமிகளுடன் அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தேவையான உணவுகளும், ஆயுதங்களும், விற்கும் பண்டங்களும் ஏற்றிக் கொண்டு செவல்லே துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.

5 கப்பல்களும் அவற்றின் தளபதிகளும்

  • சான் அந்தோனியா-கார்டஜெனா மற்றும் டிகொகா
  • ஹான் செப்சன்-கொஸாடா
  • விக்டோரியா-மென்போசா
  • டிரினிடாட்-மெகல்லன்
  • சாண்டியோகோ- ---

மகலனின் கடல்வழிப் பயணம்[தொகு]

ஸ்பெயின் மன்னனின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மகலன் சிறிய பாய்மரக் கப்பல்களில் தம் கடல்வழிப் பயணத்தைத் தொடங்கினார். இப்பாய்மரக் கப்பல்கள் காற்றின் திசை வேகத்திற்கேற்ப பயணிப்பவையாகும். மகலன் தன் கடற்பயணக் குழுவினருடன் இரண்டு மாதங்களாகப் பயணித்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார். அதன்பின், இக்குழு தென் அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடியிலுள்ள கரையினை வந்தடைந்தது. இப் பயணத்திற்கிடையில், மகலன் குழுவினர் பயணித்துவந்த ஐந்து பாய்மரக் கப்பல்களில் ஒன்று தென் அமெரிக்கக் கரையில் காணப்பட்ட ஒரு பெரும்பாறையில் மோதிச் சேதமுற்றது. அதன்பின்னர், மகலன் பெயர்பெற்ற '''மகலன் தொடுகடல்''' (Magellan's Strait) வழியாக இவருடைய கப்பல்கள் பசிபிக் பெருங்கடலைக் கடக்கத் தொடங்கின.[3]

பிற்காலச் சாதனைகள்[தொகு]

1519 டிசம்பர் 13 அன்று, மகலனின் விசுவாசமான வேலைக்காரனான ஹென்றி ஒரு தீவை மகலனிடம் காட்டினான். அதற்கு, ஜான் அதுதான் டியோ டி ஜெனரோ என்றார். இதன் அடிப்படையில் மகலனும் மகலனின் மற்றக் கப்பல்களும் கால் பதித்த முதல் இடம் டியோ டி ஜெனரோ. இத்தீவின் பழங்குடி மக்களான கொரானி மகலனையும் மற்றவர்களையும் சுற்றி நின்று கடவுளாக வழிபடத்தொடங்கினர். மகலனின் குழுவில் அத்தீவுக்கு முதலில் வந்தது ஜான் மட்டுமே. 1519 டிசம்பர் 25 அதாவது கிறிஸ்மஸ் அன்று இத்தீவை விட்டு வெளியேறினர். மகலனின் கப்பல்கள் சராசரியாகத் தினமும் 16 கி.மீ. வீதம் பயணித்தன. 1520 சனவரி 10 அன்று இரண்டாவதாக டியோ டி பிளாட்டா எனும் இடத்தில் நங்கூரம் இட்டனர். மூன்றவதாக 1520 மார்ச்சு இறுதியில் பாட்டகொனியா அதாவது இன்றைய தெற்கு ஆர்ஜென்டினா பகுதியிலுள்ள செயின்ட் ஜுலியன் துறைமுகத்தை அடைந்தனர். ஒருமுறை மகலன் 600 கி.மீ. நீளம் கொண்ட கால்வாயை 1520 நவம்பர் 1 அன்று கடந்து முடித்தார். அது ஆல் செயின்ட்ஸ் டே (ALL SAINTS' DAY) என்றழைக்கப்படும் புனிதர்கள் தினம் ஆகும். அதனால், மகலன் அக்கால்வாய்க்கு ஆல் செயன்ட்ஸ் டே (ALL SAINTS' CHANNEL) எனப் பெயர் சூட்டினார். பின், அது மகலன் தொடுகடல் ஆனது. 1520 நவம்பர் 28 அன்று மகலனின் மூன்று கப்பல்களும் பசுபிக் பெருங்கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. பசிபிக் பெருங்கடலைக் கடக்கும்போது, மகலன் இதனை மார் பசிபியோ (Mar Pacifico) என்றழைத்தார். இச்சொல்லுக்குப் போர்த்துக்கீசிய மொழியில் அமைதியான கடல் என்று பொருளாகும். பசிஃபிக் என்னும் பெயர் இதிலிருந்து உருவானது.[4] மகலன் நான்காவதாக 1521 சனவரி 25 அன்று செயின்ட் பால் தீவுகளில் இறங்கினான். அதன் இன்றைய பெயர் புகாபுகா ஆகும். இது பசுபிகின் தென்முனையில் உள்ளது. மகலன் ஐந்தாவதாக செப்டம்பர் 06, 1521 அன்று மரியனாத்தீவின் பழங்குடியினரான சமோரா போராடி அத்தீவில் கால் பதித்தனர். மகலன் ஆறாவதாக 1522 மார்ச்சு 16 அன்று கிட்டத்தட்ட 150 பேருடன் பிலிப்பைன்ஸின் ஹோமொன்ஹான் தீவை அடைந்தனர். இதன்மூலம் பிலிப்பைன்ஸில் காலடி எடுத்து வைத்த முதல் ஐரோப்பியர் என்ற பெருமை மகலனுக்குக் கிடைத்தது. மகலன் 1522 ஏப்ரல் 02 அன்று பிலிப்பைன்ஸின் இன்னொரு தீவான செர்பூவுக்கும் சென்று அதனை ஸ்பெயினின் அதிகாரத்துக்குள் கொண்டுவர நினைத்து கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பினார்.

சாதனைகள்[தொகு]

மகலனின் கடல்வழிப் பயணத்தின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளிடையே புதிய கடல்வழிப் பாதைகளும் நாடுகள் கைப்பற்றும் நடவடிக்கைகளும் புதுக் குடியேற்றங்களும் விரைவாக நிகழத் தொடங்கின. காலனித்துவ தத்துவமும் ஆட்சி அதிகார மேலாண்மை நடவடிக்கையும் தீவிரமாகின. இந்த அரிய சாதனையினைப் பெர்டினென்ட் மகலன் நிகழ்த்திட, ஐந்து சிறிய பாய்மரக் கப்பல்கள், இருநூற்று நாற்பத்தொன்று மாலுமிகள், 69,800 கி.மீ. பயணத் தொலைவுகள், மூன்று ஆண்டுகள் மட்டுமல்ல, தம் உயிரையும் பணயமாக்கிக் கொண்டார்.[5]

இறப்பு[தொகு]

மகலன் பிலிப்பைன்ஸின் மக்டன் பகுதியின் தலைவனான லாபுலாபுவிடம் 6 பேர் கொண்டு போர் செய்யச் சென்றபோது அப்போரில் மகலன் இறந்துவிட்டார். இவர் இறந்தபின் அவரது கூட்டத்தில் ஒருவரான கார்வால்ஹோ என்பவன் அவர்களது கப்பல்களில் ஒன்றான ஹான்செப்சனுக்குத் தீ வைத்தான். மகலனின் விசுவாசியான ஹென்றி புதிதாகத் தலைமைதாங்கிய சிலரைக் கொன்றான். பின் எல்போன்சா என்பவர் தலைமை என்பவர் ஸ்பைஸ் தீவுக்குக் கிளம்பினார்.கடைசிக்கப்பலான விக்டோரியா 6 பேருடன் 1522 மே 06 அன்று ஆபிரிக்காக் கண்டத்தின் தென்முனையிலுள்ள கேப் குட் ஹோப்பையும், யூலை 09 இல் கேப் வேர்டேவையும்,செப்டெம்பர் 06 இல் ஸ்பெயினையும் அடைந்தது. மொத்தப் பயணத்தூரம் 69800 கி.மீ. ஸ்பெயினுக்குத் திரும்பியவர்கள் செபெச்டியன் உட்பட பதினெட்டுப்பேர். மகலனின் கனவு அவரையும் பலிகொடுத்து நிறைவுக்கு வந்தது.

நினைவுகள்[தொகு]

சிலி நாட்டின் பண்டாரா எரினாசு பகுதியில் உள்ள பெர்டினென்ட் மகலனின் சிலை.

மானிடர் வாழும் சூரியக் குடும்பம் இருக்கும் பால் வழி பேரடையின் துணைப்பேரடைகளுக்கு சூரியக் குடும்பம் மெகல்லானிய மேகங்கள் என கி. பி. 1800க்கு பிறகு பெயர் வைக்கப்பட்டது. நிலவில் உள்ள இரண்டு முகடுகளுக்கும் செவ்வாய் கோளில் இருக்கும் ஒரு முகடுக்கும் இவரின் பெயரை நினைவுருத்தும் வண்ணம் மகல்கியன்சு என ஒட்டுப்பெயருடன் பெயர் சூட்டப்பட்டன.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. ஆ.ராஜகோபால் (1982). உலகக் குடியேற்றங்கள் உருவான கதை. சிறி லங்கா வெளியீடு,காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். பக். ப.62. 
  2. ஆ.ராஜகோபால் (1982). உலகக் குடியேற்றங்கள் உருவான கதை. சிறி லங்கா வெளியீடு,காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். பக். பக்.64-65. 
  3. 3.0 3.1 ஆ.ராஜகோபால் (1982). உலகக் குடியேற்றங்கள் உருவான கதை. சிறி லங்கா வெளியீடு,காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். பக். ப.69. 
  4. "நம்ப முடிகிறதா?- ஆயிரம் ஆண்டு சுற்றும் தண்ணீர்!". பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2017.
  5. "மெகல்லன்". Archived from the original on 2010-06-25. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்டினண்ட்_மகலன்&oldid=3587698" இலிருந்து மீள்விக்கப்பட்டது