பொருநை இலக்கியத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருநை இலக்கியத் திருவிழா (Porunai Literary Festival) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரத்தில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26,27 தேதிகளில் நடைபெற்றது. தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு ஐந்து திருவிழாக்கள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவை செயல்படுத்தும் விதமாக இத்திருவிழா முன்னெடுக்கப்பட்டது. பொருநை, வைகை, காவேரி, சிறுவாணி என்ற நதி நாகரீக அடிப்படையில் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு விழாக்களும் இறுதியில் சென்னையில் ஒரு விழாவும் கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. முதல் இலக்கியத் திருவிழா பொருநை நதி பாயும் திருநெல்வேலி நகரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.[1] இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 132 படைப்பாளிகளும் கலைஞர்களும் கலந்து கொண்டனர். தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, கணியான் கூத்து, நாடகம், நவீன நாடகம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பழம் பொருட்கள் கண்காட்சி, ஓலைச்சுவடி கண்காட்சி போன்ற கண்காட்சி நிகழ்வுகளும் நடைபெற்றன. பொதுநூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 132 படைப்பாளிகளும் கலைஞர்களும் கலந்து கொண்டனர். தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, கணியான் கூத்து, நாடகம், நவீன நாடகம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, பழம் பொருட்கள் கண்காட்சி, ஓலைச்சுவடி கண்காட்சி போன்ற கண்காட்சி நிகழ்வுகளும் நடைபெற்றன. பொதுநூலகத் துறை இயக்குநர் இளம்பகவத் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

தொடக்க விழா[தொகு]

பொருநை இலக்கியத் திருவிழாவை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். விழாவுக்கு ஆட்சியர் வே. விஷ்ணு தலைமை வகித்தார். பொது நூலக இயக்கக இயக்குநர் க.இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், மாநகராட்சி தந்தை பி.எம்.சரவணன், ஆணையர் சிவ கிருட்டிணமூர்த்தி, அமைச்சர்கள் இராச கண்ணப்பன், அன்பில் மகேசு பொய்யாமொழி, கேரள எழுத்தாளர் கல்பட்டா நாராயணன், சாகித்திய அகாதமி விருதாளர் வண்ணதாசன், எழுத்தாளர் பவா. செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.[2]

தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கம், நூற்றாண்டு மண்டபம், மேலக்கோட்டை வாசல், பிபிஎல் திருமண மண்டபம், வ உ சி. அரங்கம் ஆகிய ஐந்து இடங்களில் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் கருத்தரங்கம் , கவியரங்கம் ஓலைச்சுவடிகள் கண்காட்சி மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் என நடைபெற்றன.[3]

நிகழ்ச்சிகள்[4][தொகு]

நேருஜி கலையரங்க நிகழ்வுகள்[தொகு]

தற்கால இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், நாட்டார் இலக்கியம் போன்ற தலைப்புகளில் சிறப்புரைகள் இங்கு நிகழ்ந்தன.

இலக்கியத்தில் இன்று என்ற தலைப்பில் எழுத்தாளர்கள் கலாப்பிரியா, தமிழ்ச்செல்வன், எம்.எம். தீன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். பாரெங்கும் பைந்தமிழ் என்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குநர் க. இளம்பகவத்தும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் சங்கர சரவணனும் பேசினார்கள்.[5] ஜோ.டி.குருஸ், மருத்துவர் கு. சிவராமன், கவிஞர் நட. சிவக்குமார் ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, பேராசிரியர் வளனரசு, தமிழாசிரியர் படிக்க ராமு, பேராசிரியர் இந்து பாலா, செந்தில் நாயகம் போன்றவர்கள் பங்கேற்ற பழந்தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளும் இக்கு நடைபெற்றன. மாலையில் நாடகம், வில்லுப்பாட்டு, தேவராட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நூற்றாண்டு மண்டப நிகழ்வுகள்[தொகு]

பாளை நூற்றாண்டு மண்டபத்தில் மண்வாசனை என்ற தலைப்பில் கரிசல், நெல்லை, நெய்தல், நாஞ்சில் வட்டார இலக்கிய மரபுகள், தொல்லியல் களம் குறித்த தலைப்புகளில் உரையாடல்கள் நிகழ்ந்தன.

எழுத்தாளர்கள் சோ. தர்மன், பூமணி, சுகா, ஜோ.டி.குருஸ், பொன்னீலன், போகன் சங்கர், முத்தாலக்குறிச்சி காமராசு, சிவகளை மாணிக்கம், சங்கர நாராயணன், முகமது யூசுப், பேரா. கட்டளை கைலாசம் உள்ளிட்டவர்கள் இங்கு சிறப்புரை நிகழ்த்தினர்.

பி.பி.எல். அரங்க நிகழ்வுகள்[தொகு]

சிறுகதை, நாவல், நாடகம் குறித்த நிகழ்வுகள் பி.பி.எல். அரங்கத்தில் நடைபெற்றன.

எழுத்தாளர்கள் சிறீதர கணேசன், கார்த்திக் புகழேந்தி, நாடக இயக்குநர்கள் முருகபூபதி, சந்திரமோகன், பேரா நவீனா, ஜான்சி பால்ராஜ், அகிலா ஆமிம், முசுதபா போன்றவர்கள் கலந்து கொண்டனர். எழுத்தாளர் கோணங்கி, விஜய ராவணன், பேரா முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட கவிஞர் தாளப்பன் தலைமையிலான கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற்றது.

வ. உ. சி. மேடை அரங்க நிகழ்வுகள்[தொகு]

கவிதை மற்றும் இசை தொடர்பான நிகழ்வுகள் வ உ சி. அரங்கத்தில் நடைபெற்றன.

கல்பட்டா நாராயணன், கவிஞர் தேவதேவன், பாலா கருப்பசாமி, லட்சுமி மணிவண்ணன், வெய்யில், சபரிநாதன் போன்றவர்கள் கவிதை வாசித்தனர். எங்கும் எதிலும் கவிதை என்ற தலைப்பு மையமாக இருந்தது. இதைத் தவிர கவிதை மழை-1, கவிதை மழை-2 என்ற அமர்வுகளில் ஏர்வாடி இராதாகிருட்டிணன் மற்றும் நெல்லை செயந்தா தலைமையில் பல்வேறு கவிஞர்கள் கவிதை வாசித்தனர். இசைமழை அமர்வில் மரு. இராமானுஜம், கவிஞர் ஆனந்த குமார், இசையாசிரியர் இயேசுதாசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலக்கோட்டை வாசல் நிகழ்வுகள்[தொகு]

திரைப்பட இலக்கியம் தொடர்பான கருத்தரங்கமும் திரையிடலும் இந்த அரங்கத்தில் நிகழ்ந்தன.

இயக்குநர் அசயன்பாலா, தமயந்தி, ஒவியர் புருசோத்தமன், எழுத்தாளர் தீபா சானகிராமன், இயோசபின் பாபா, காஞ்சனை மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர் மற்றும் விவாதித்தனர். உலக சினிமா, இந்திய சினிமா, ஆவணப்படங்கள், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என திரையிடல் நிகழ்வும் நடைபெற்றது.

நிறைவு விழா[தொகு]

பொருநை இலக்கிய திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஓலை சுவடி தொகுப்பினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு வெளியிட்டார். இந்த ஓலைச்சுவடிகள் மாணவ மாணவிகளால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பி.ஆண்டனிராஜ்,எல்.ராஜேந்திரன். "நெல்லை: 169 எழுத்தாளர்கள், 36 அமர்வுகள் - பொருநை இலக்கியத் திருவிழா தொடக்கம்!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-01-14. {{cite web}}: External link in |website= (help)
  2. "இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்: பொருநை இலக்கியத் திருவிழாவில் முதல்வர் வேண்டுகோள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
  3. Bureau, The Hindu (2022-11-24). "Porunai Literary Festival to be held for two days". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
  4. Bureau, The Hindu (2022-11-17). "'Porunai Lit Fest' in Tirunelveli on November 26, 27". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-14.
  5. "பொருநை இலக்கியத் திருவிழா :நெல்லையில் இன்று தொடக்கம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2022/nov/26/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3956201.html. பார்த்த நாள்: 14 January 2023.