பைல் கடவைக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைல் கடவைக் கோட்டை
Fort Pyl
ஆனையிறவு, இலங்கை
பைல் கடவைக் கோட்டை Fort Pyl is located in இலங்கை
பைல் கடவைக் கோட்டை Fort Pyl
பைல் கடவைக் கோட்டை
Fort Pyl
ஆள்கூறுகள் 9°35′21″N 80°26′40″E / 9.589170°N 80.444578°E / 9.589170; 80.444578
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை அழிக்கப்பட்டுவிட்டது
இட வரலாறு
கட்டியவர் ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
கருங்கல், பாறை
சண்டைகள்/போர்கள் பல

பைல் கடவைக் கோட்டை (Pass Pyl) யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில், கிழக்குக் கடற்கரைக்கு அணித்தாக உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை, பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை என்பனவும் யாழ்ப்பாண நீரேரியின் ஆனையிறவுக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்கு வடக்கே ஒரே கோட்டில் வரிசையாக அமைந்துள்ளன. இவை மூன்றும் ஒரே தொகுதியாக ஒரே நோக்கத்தோடு இயங்கின. தலைநிலத்திலிருந்து குடாநாட்டுக்கான நுழைவழியைக் கண்காணித்துப் பாதுகாப்பதே இக் கோட்டைகளின் முக்கியமான நோக்கம்.

நோக்கங்கள்[தொகு]

இக் கோட்டைகள் அமைக்கப்பட்டதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியைப் பாதுகாத்தல், ஒல்லாந்தரின் வணிக நலன்களைப் பாதுகாத்தல், மக்களைப் பாதுகாத்தல் என்னும் நோக்கங்கள் இருந்ததாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்த என்றிக் சுவார்டெக்குரூன் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்றபோது 1897 ஆம் ஆண்டில் எழுதிய நினைவுக் குறிப்பில் காணப்படும் பின்வரும் விவரங்கள் இக் கோட்டைகளின் நோக்கங்களைத் தெளிவாக விளக்குகின்றன[1].


  • சிங்களவர்கள் சதிவேலைகளில் ஈடுபடும்போது வன்னியர்களையும் நம்பமுடியாது என்பதால், வன்னியர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு இக்கோட்டைகள் பெரிதும் உதவும்.
  • இக்கோட்டைகளின் முக்கிய நோக்கம் யாழ்ப்பாணத்துக்குள் வன்னியர்கள் நுழையாமல் பார்த்துக்கொள்வதும், சிங்களவர்களின் படையெடுப்பில் இருந்து மக்களைப் பாதுகாப்பதும்.
  • மக்கள் கடவுச் சீட்டு இன்றி இப்பகுதிகளூடாகப் போக்குவரத்துச் செய்வதைத் தடுத்தல்.
  • அனுமதிச் சீட்டுக்கள் இன்றிப் பொருட்களை மக்கள் வெளியே கொண்டு செல்வதையும் உள்ளே கொண்டு வருவதையும் தடுத்தல்.
  • அடிமைகளைக் கடத்திச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுதல்.
  • யானை முதலிய காட்டு விலங்குகள் யாழ்ப்பாணப் பகுதிக்குள் ஊடுருவுவதைத் தடுத்தல்.


இக்கோட்டை பிரித்தானியர் காலத்திலேயே அழிந்துவிட்டது[2].

அமைப்பு[தொகு]

பைல் கடவைக் கோட்டை ஆனையிறவுக் கோட்டையைப் போல் சதுர வடிவம் கொண்டது. ஒல்லாந்தர் காலத்தில் வரையப்பட்ட இதன் வரைபடங்களில் இருந்து இக்கோட்டை எல்லா வகைகளிலும் ஆனையிறவுக் கோட்டையைப் போலவே இருந்ததாகத் தெரிகிறது[3]. இதன் வடகிழக்கு மூலையிலும், தென்மேற்கு மூலையிலும் கொத்தளங்கள் அமைந்துள்ளன. கிழக்குச் சுவரோடு அண்டி படையினருக்கான தங்குமிடங்கள் காணப்படுகின்றன. இச்சுவர் தவிர்ந்த மற்றச் சுவர்ப் பகுதிகளின் உட்புறம் பெசுச்சூட்டர் கடவைக் கோட்டையில் காணப்படுவது போல தடித்த மண் சுவர்கள் இல்லை. ஒற்றைச் சுவரே உள்ளது. கோட்டையின் வாயில் இதன் தெற்குப்புறச் சுவரில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. என்றிக் சுவார்டக்குரூனின் நினைவுக் குறிப்புக்கள், 1911. பக். 85.
  2. Nelson, W. A., 2004. பக். 99.
  3. Nelson, W. A., 2004. பக். 99.

உசாத்துணைகள்[தொகு]

  • Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).
  • Memoir of Hendrick Swaardecroon, Commaander of Jaffnapatam, for the Guidance of the Council of Jaffnapatam, During His Absence at the Coast of Malabar; Translated by Sophia Pieters; H. C. Cottle, Government Printer, Ceylon; Colombo; 1911.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைல்_கடவைக்_கோட்டை&oldid=1758337" இலிருந்து மீள்விக்கப்பட்டது